May 15, 2009

ஐன்ஸ்டீனின் சோஷலிஸம்


சோஷலிஸம் குறி்த்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய ஒரு கட்டுரை Monthly Review இதழில் மே 1949ல் வெளிவந்தது. சோஷலிசம் ஏன் தேவை என்பதற்கு ஐன்ஸ்டீன் சில கருத்துகளை முன்வைக்கிறார்.

1) உற்பத்தி பெரும்பாலும் தனியார்மயமாகிவிட்டது. உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திக்குத் தேவைப்படும் முதலீடு இரண்டும் தனியார் வசம் உள்ளன.

2) உற்பத்திக்குத் தேவைப்படும் உழைப்பை உற்பத்தியாளர் (முதலாளி) தொழிலாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார். ஊதியம் (கூலி) பெற்றுக்கொண்டு தொழிலாளர்கள் பொருள்களை தயாரித்துக்கொடுக்கிறார்கள். தயாரானதும், அந்தப் பொருள்கள் உற்பத்தியாளரின் உடைமையாக மாறுகிறது. (ஒரு தொழிலாளருக்கும் அவர் உற்பத்தி செய்த பொருளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குறிப்பிட்ட பொருளைத் தயாரித்துக்கொடுத்ததும் இந்த உறவு துண்டிக்கப்படுகிறது. இதை மார்க்ஸியம் அந்நியமாதல் என்று குறிப்பிடுகிறது).

3) தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியத்துக்கும் இடையிலான உறவுமுறை முக்கியமானது. உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அந்த தொழிலாளிக்கு கூலி அளிக்கப்படுவதில்லை. கூலியை முதலாளி தீர்மானிக்கிறார். அவ்வாறு கிடைக்கும் கூலி ஒரு தொழிலாளியின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை மட்டுமே பூர்த்திசெய்கிறது.

4) தனியார் முதலீடு ஒரு சில நபர்களிடம் மட்டுமே குவிந்துள்ளது. இதை யாராலும் தடுக்கமுடியாது. ஒரு ஜனநாயக அரசாங்கத்தால்கூட இதைக் கண்காணித்து தடுத்து நிறுத்தமுடியாது. எனி்ல், சட்டத்திட்டங்களால் எதையும் செய்யமுடியாதா? நீதித்துறையால் இதை மாற்றமுடியாதா? முடியாது. காரணம், சட்டம் இயற்றும் தகுதி படைத்தவர்களை அரசியல் கட்சிகள்தான் தேர்ந்தெடுக்கின்றன. இந்த அரசியல் கட்சிகளுக்குப் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே நிதி அளிக்கின்றன. அரசியல் கட்சிகள் எடுக்கக்கூடிய முடிவுகளை தீர்மானிப்பவர்களும் இவர்களே. இதன் விளைவாக மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறது. முதலாளிகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது.

5) பயன்படுத்துபவர்களை மனத்தில் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதில்லை. லாபம்தான் பிரதானம். லாபம்தான் உற்பத்தியை தீர்மானிக்கிறது.

6) வேலை செய்ய விருப்பமுள்ளவர்களுக்கும் தகுதி உள்ளவர்களுக்கும் வேலை உத்தரவாதம் இல்லை. வேலையில்லாதவர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எப்போதும் வேலை பறிபோகலாம் என்னும் மனநிலையில்தான் தொழிலாளர்கள் இயங்கிகொண்டிருக்கிறார்கள்.

7) தொழில்நுட்ப முன்னேற்றம் தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை. மாறாக, வேலையின்மையை அதிகரித்திருக்கிறது.

8) முதலாளிகளுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. லாபம் ஈட்டுவது. சகமுதலாளிகளுடனான போட்டியில் வெல்வது. இவற்றின் காரணமாக, எப்போதும் கொந்தளிப்புகள் நிகழ்கின்றன. முதலீட்டிலும் லாபத்திலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. முதலாளிகளுக்குள்ளே நடக்கும் தொழில் போட்டியால் கடுமையான நெருக்கடிகள் ஏற்படுகின்றன. தொழிலாளர்களின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது.

9) சோஷலிஸப் பொருளாதாரம் அமைப்பதுதான் ஒரே தீர்வு. கல்வித்துறை மாறவேண்டும். தனிநபர்களைவிட சமுதாயம் முக்கியம் என்பது போதிக்கப்படவேண்டும். சமுதாயத்துக்காகப் பணியாற்ற மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்.

10) சோஷலிஸ சமுதாயம் அமைந்தால் உற்பத்தி சமுதாயத்துக்கு உரியதாக மாறும். திட்டமிடப்பட்ட பொருளாதாரம் அமையும். சமுதாயத்தின் தேவைக்கு ஏற்ப பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். பணியாற்ற விருப்பமுள்ள அனைவருக்கும் வேலை பிரித்தளிக்கப்படும். ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்வதற்கான உத்திரவாதம் அளிக்கப்படும். கல்வி, ஒரு மனிதனின் திறமையை வளர்ப்பதோடு நின்றுவிடாமல் சக மனிதர்கள் மீது அக்கறை செலுத்தவேண்டியதன் அவசியத்தையும் போதிக்கும்.

ஐன்ஸ்டீனின் கட்டுரையை முழுவதுமாக வாசிக்க இங்கே செல்லவும்.

3 comments:

அக்னி பார்வை said...

நல்ல பதிவு மருதன்

Anonymous said...

ஐன்ஸ்டீன் மூன்று இனங்களைப் பாராட்டினார்.
1.ஜப்பான் -அடிவாங்கி உலகுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.
2.யூதர்-அழிக்கப்பட்டு இப்பொழுது அழிக்கின்றது.
3.ஈழத் தமிழர்- அடிவாங்கி, அழிகின்றது.

Ragztar said...

கட்டுரைச் சுட்டிக்கு நன்றி நண்பரே