புரட்சியாளர்கள் வரிசை

01) ஃபிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம்


காஸ்ட்ரோ பற்றி நான் முதலில் படித்த புத்தகம் அவரே எழுதிய My Early Years. இந்தப் புத்தகம் அவரது இளமைக்கால வாழ்க்கையை நேர்த்தியாகப் படம் பிடிக்கிறது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை எழுதியவர், மார்க்வேஸ். பாரதி புத்தகாலயம் இதனை பின்னர் தமிழில் கொண்டுவந்தது. என் புத்தகம் வெளிவந்த அதே சமயம்தான் இந்த தமிழ் மொழிபெயர்ப்பும் (என் இளமைக்காலங்கள்) வெளிவந்தது என்று நினைக்கிறேன். தமிழாக்கத்தின் ஒரு பகுதியை ரமேஷ் செய்திருந்தார்.

காஸ்ட்ரோவின் உரைகளில் முக்கியமானது, History Will Absolve Me. இதுவும் தமிழில் கிடைக்கிறது. நூறு பக்கங்களுக்கு மேல் நீளும் உரை இது. மொன்காடோ தாக்குதலையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக காஸ்ட்ரோ மீது க்யூபா வழக்குத் தொடுத்திருந்தது. தன்நிலை விளக்கமாக அக்டோபர் 1953ல் காஸ்ட்ரோ அளித்த நான்கு மணி நேர உரை, பின்னர் புத்தகமாக்கப்பட்டது. உரையின் ஆங்கில வடிவம் இங்கே.

காஸ்ட்ரோவின் வாழ்க்கை என்பது க்யூபாவின் ஐம்பதாண்டு கால வரலாறும்கூட என்பதால், என் புத்தகம் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாறாக மட்டும் இல்லாமல் ஒரு தேசத்தின் வரலாறாகவும் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டேன். க்யூபாவின் வரலாறு, ஹொஸே மார்த்தி (அமரந்தா எழுதிய மார்த்தியின் வாழ்க்கை வரலாறு முக்கியமானது. க்யூபா குறித்தும் காஸ்ட்ரோ குறித்தும் அமரந்தா பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார்). அமெரிக்க வரலாறு என்று பரவலாகத் தேடிப்போனேன். காஸ்ட்ரோ எதிர்ப்பு அமெரிக்க இணையத்தளங்களை வலம் வந்தேன். தீவிர கம்யூனிஸ்ட் எதிர் பிரசாரங்களை வாசித்தேன். காஸ்ட்ரோவின் உரைகளையும் பேட்டிகளையும் அவர் எழுதிய கட்டுரைகளையும் சேகரித்தேன். ஆவணப்படங்கள் காணக்கிடைத்தன. க்யூபன் மிஸைல் க்ரைஸிஸ் குறித்தும் சி.ஐ.ஏ. குறிப்புகள் குறித்தும் நிறைய தேட வேண்டியிருந்தது.

காஸ்ட்ரோ குறித்து சமீபத்தில் நான் வாசித்த புத்தகம், My Life. Ignacio Ramonet என்பவருக்கு காஸ்ட்ரோ அளித்த விரிவான பதில்களின் தொகுப்பு நூல் இது. எழுநூறு பக்கங்களுக்கு மேல் நீளும் புத்தகம் என்றாலும் வாசிப்பதற்கு எளிமையானது.

02) சே குவேரா : வேண்டும் விடுதலை


காஸ்ட்ரோவின் வாழ்க்கையை சே குவேராவின் வாழ்கையில் இருந்து பிரித்து எடுத்துவிடமுடியாது. வரலாற்றின் புகழ்பெற்ற இரட்டையர்கள் அவர்கள். மரணத்துக்குப் பிறகல்ல, வாழும் காலத்திலேயே சே ஒரு குறியீடாக மாறியிருந்தார். காஸ்ட்ரோவைக் காட்டிலும் அதிகம் பேரால் நேசிக்கப்பட்டவர். நேசிக்கப்படுபவர்.

சே குவேரா மீது முன்வைக்கப்படும் விமரிசனங்களுள் பிரதானமானது, அவர் ஒரு சாகசவாதி என்பது. அரசியலில் அல்ல, ஆயுதப் போராட்டத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. சே குவேராவின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர் வாழ்ந்த அரசியல், சமூகச் சூழலையும் ஒருங்கே வாசிக்கும்போது, இந்தக் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது தெரியவரும்.

சே குவேராவின் வாழ்க்கை, போராட்டம், மரணம் மூன்றிலும் உள்ள அரசியலை முன்வைக்கிறது 'வேண்டும் விடுதலை'.

03) ஹியூகோ சாவேஸ் : மோதிப்பார்!


சாத்தான் என்று புஷ்ஷைத் திட்டியதால் ஊடகங்களில் பரபரபப்பாகப் பேசப்பட்டார் சாவேஸ். காஸ்ட்ரோ வழியில் வெனிசூலாவில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவின் நிரந்தர எதிரியாக இன்றுவரை நீடிக்கிறார். காஸ்ட்ரோ உடல் நலம் சரியில்லாமல் இருந்த சமயங்களில், அவரைச் சந்தித்து உரையாடிய சிலரில் சாவேஸும் ஒருவர். வெனிசூலாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல லத்தீன் அமெரிக்காவின் எதிர்காலத்தையும் இவரால் வடிவமைக்கமுடியும் என்று பலர் நம்புகிறார்கள். காஸ்ட்ரோவைப் போலவே இவர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. மோசடிகளால் தேர்தலில் வெற்றி பெற்றவர். அதிகார வேட்டை கொண்டவர். இன்னபிற.

மோதிப்பார், சாவேஸின் வாழ்க்கையை சுருக்கமாக அறிமுகம் செய்துவைக்கிறது. சமீபத்திய முன்னேற்றங்களைச் சேர்த்து, இந்தப் புத்தகத்தை விரிவாக்கவேண்டும். அடுத்த ஆண்டு திட்டத்தில் வைத்துள்ளேன்.

04) லெனின் : முதல் காம்ரேட்


Leaders & Revolutionaries என்னும் சிறப்பு தொகுப்பைக் கொண்டுவந்த டைம் பத்திரிகை, லெனினை இவ்வாறு மதிப்பிடுகிறது. ஆயிரம் இருந்தாலும் லெனின் குரூரமானவர். இரக்கமற்றவர். இந்த நூற்றாண்டின் இன்னல்களுக்குக் காரணமானவர். அரசியலைப் புறக்கணித்துவிட்டு, அழித்தொழிப்பைத் தொடங்கிவைத்தவர்.

உலகத் தொழிலாளர்களின், பாட்டாளி மக்களின் தாயகமாக சோவியத் மாறியபோது, இந்தக் குற்றச்சாட்டுகள் மேலும் அதிகரித்தன. லெனினுக்குப் பிறகு பொறுப்பேற்ற ஸ்டாலின் லெனினைவிடக் கூடுதலாக விமரிசிக்கப்பட்டார். அவதூறு செய்யப்பட்டார்.

லெனின் யார், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரம் என்ன என்பதை அறிமுகம் செய்துவைக்கிறது முதல் காம்ரேட். லெனினின் வாழ்க்கையை, ரஷ்யப் புரட்சியை, ரஷ்யா சோவியத்தாக மாறிய வரலாறை சுருக்கமாக விவரிக்கிறது இந்நூல்.

05) சர்வம் ஸ்டாலின் மயம்


ஸ்டாலினைப் பற்றி கருத்து தெரிவிக்கப் பயப்படுகிறார் விளாதிமிர் புடின். அல்லது தயங்குகிறார். அவர் நல்லவர் என்று சொன்னால் ஒரு சாரார் கோபித்துக்கொண்டுவிடுவார்களாம். கெட்டவர் என்று சொன்னால் மற்றொரு சாரார் எதிர்ப்பார்களாம். எனவே, வாய்மூடி இருந்துவிட்டார். ஸ்டாலினின் 130வது பிறந்தநாளை ரஷ்யர்கள் கொண்டாடியதை, அத்தேசம் கஷ்டப்பட்டுத்தான் சகித்துக்கொண்டது. செஞ்சதுக்கத்தில் மலர் கொத்துக்களுடன் கூட்டம் நிரம்பியதை, ரஷ்ய ஊடகங்கள் சங்கடத்துடன்தான் பதிவு செய்தன.

அரசியல்வாதிகள் தொடங்கி இலக்கியவாதிகள் வரை பலரும் ஸ்டாலினை வெறுத்தொதுக்குகிறார்கள். சர்வம் ஸ்டாலின் மயம், ஸ்டாலினை ஒரு புரட்சியாளராக அறிமுகம் செய்துவைக்கிறது. ஸ்டாலின் குறித்த அவதூறுகளுக்கு விடையளிக்க அவர் வாழ்க்கையை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

06) மாவோ : என் பின்னால் வா


சூழ்நிலைதான் தலைவர்களை உருவாக்குகிறது. ஒருவர் முதலாளித்துவவாதியாகவும், இன்னொருவர் கம்யூனிஸ்டாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் அவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் அவ்வாறு சிந்திப்பதற்குக் காரணம் அவர்கள் முதலாளித்துவவாதியாகவும் கம்யூனிஸ்டாகவும் இருக்கிறார்கள் என்பதுதான். அந்த வகையில், ஒரு புரட்சியாளர் எப்படி உருவாகிறார் என்பதைவிட முக்கியமானது, எந்தச் சூழல் அவரை ஒரு புரட்சியாளராக உருமாற்றுகிறது என்பதே. என் பின்னால் வா, அப்படி உருவான புத்தகம். மாவோ குறித்து சமீபத்தில் நான் எழுதிய பதிவு இங்கே.

07) மால்கம் எக்ஸ்


காந்தியையும் மார்டின் லூதர் கிங்கையும் நெல்சன் மண்டேலாவையும் கொண்டாடும் உலகம், மால்கம் எக்ஸையும் ஃபிரான்ஸ் ஃபனானையும் நிராகரிக்கவே செய்யும். அடிப்பவர்களுக்கு இரு கன்னங்களையும் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டச் சொன்னவர்கள் உலகத் தலைவர்களாக மாறிப்போனார்கள். அடிக்க வந்த கையை இழுத்துப் பிடித்து திருப்பியடி என்று சொன்னவர்கள் கலகக்காரர்களாக சித்தரிக்கப்பட்டார்கள். வன்முறை குறித்து ஃபிரான்ஸ் ஃபனான் கொடுத்த விளக்கத்துக்கு மால்கம் எக்ஸ் செயல்வடிவம் கொடுத்தார்.

மால்கம் எக்ஸின் சுயசரிதையை அவர் சொல்லக்கேட்டு எழுதியவர் அலெக்ஸ் ஹெய்லி. விடியல் தமிழில் இப்புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அழகிய மொழிபெயர்ப்பு. அவசியம் வாசிக்கவேண்டிய நூல்.

08) நெல்சன் மண்டேலா



வரலாற்றின் நீண்ட சிறைவாசியாக மட்டுமே நெல்சன் மண்டேலா அறியப்படுகிறார். பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை ஒரு தலைவராக உலகம் அங்கீகரித்துவிடவில்லை.

அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்டாக இல்லாவிட்டாலும், ஒரு புரட்சியாளராக மண்டேலாவை நான் முன்னிறுத்தியதற்குக் காரணம் தென் ஆப்பிரிக்காவில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள். பல நூற்றாண்டுகளாக இரண்டாம்தர குடிமக்களாக இருந்துவந்த கறுப்பின மக்களுக்கு நெல்சன் மண்டேலா ஜனநாயகத்தை அறிமுகம் செய்துவைத்தார். வாக்களிக்கும் உரிமையைப் பெற்றக்கொடுத்தார். என்றாலும், தென் ஆப்பிரிக்கா மாறிவிடவில்லை. தான் அறிமுகப்படுத்திய பல நல்ல திட்டங்களை மண்டேலாவே பிற்காலத்தில் அவசரமாக விலக்கிக்கொள்ள நேரிட்டது.

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையை, ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.


0

மேற்கூறிய நூல்கள் குறித்தும் என்னுடைய பிற நூல்களும் குறித்தும் மேலதிக விவரங்கள் இங்கே.

சென்னை புத்தகக் கண்காட்சி / நெல்சன் மண்டேலா


நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையினூடாக தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் வரலாறு. எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரதிகள் கிடைக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சி / திபெத்

செப்டம்பர் மாதம் வெளிவந்த புத்தகம். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு முதல் வருகை.

புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.

திபெத் என்றவுடன் சில பிம்பங்கள் நம் மனத்தில் தோன்றும். புத்த மதம், தலாய் லாமா, காவி உடை, சீனா, சிம்லா ஒப்பந்தம், அமைதிக்கான நோபல் பரிசு, தர்மசாலா. திபெத் ஒரு இருண்ட புதிர் என்றால் ஒவ்வொரு பிம்பமும் அந்தப் புதிரைப் புரிந்துக்கொள்ள உதவும் துண்டு வெளிச்சம் என்று சொல்லலாம். இந்த பிம்பங்களை சேகரித்தால் திபெத்தை அறிந்து கொள்ளலாம் என்றாலும், திபெத்தை முழுமையாக அறிந்துகொள்ள இந்த பிம்பங்கள் மட்டுமே போதும் என்று நினைத்து விடக்கூடாது.

திபெத் என்பது என்ன? தேசமா? மாகாணமா? அல்லது வெறுமனே ஒரு நிலப்பரப்பு மட்டும்தானா? எந்தவொரு நாட்டுக்கும் நேராத ஒரு பெரும் குழப்பத்தை சுமந்துகொண்டிருக்கிறது திபெத். பாலஸ்தீனமும் பிரச்னைக்குரிய ஒரு பிரதேசம்தான். ஆனால், அதற்கு ஐ.நா.வின் அங்கீகாரம் உண்டு. திபெத்துக்கு அதுவும் கிடையாது. அந்த வகையில், தன்னுடைய அடையாளம் என்ன என்றே தெரியாமல் இன்று வரை தவித்துக்கொண்டிருக்கிறது திபெத்.

இன்றைய திபெத்தின் வரலாறு மட்டுமல்ல பண்டைய திபெத்தின் வரலாறும்கூட ஒரு புதிர்தான். திபெத்தின் தன்வரலாறுதான் இப்படி, திபெத் பற்றி பிற நாடுகளின் பார்வையை ஆராயலாம் என்றால் அதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் என்று ஒவ்வொரு நாட்டிலும் திபெத்தின் வரலாறு ஒவ்வொரு விதமாக எழுதப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு சீன வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் திபெத், சீனாவின் ஒரு பகுதிதான் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கும். பிரச்னைக்குரிய பகுதி என்று கூட சீனா குறிப்பிடாது. திபெத் என்பது சீனாதான்! அன்று முதல் இன்று வரை சீனாவின் கொள்கையில் மாற்றமில்லை.

நவீன திபெத்தின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் வேறு பார்வை கிடைக்கிறது. திபெத் ஒரு தனி நாடுதான் என்றும், சீனா திபெத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளது என்றும் அழுத்தமாக அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், திபெத்தின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள யாருமில்லை.

இன்றுவரை திபெத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. சீனா திபெத்தில் நிகழ்த்தும் கலாசாரப் படுகொலைகள் குறித்தும் கலாசார சீரழிவுகள் குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சீனாவை மிக அழுத்தமான மொழியில் கண்டிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. எனில், திபெத் ஒரு தனி நாடுதான் என்று அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதா? இங்குதான் சிக்கல். சீன அரசுக்குக் கட்டுப்பட்ட ஒரு சுயாட்சிப் பிராந்தியமாகத்தான் திபெத் இருக்கமுடியும் என்பதே அமெரிக்காவின் நிலைபாடு.

கட்டுப்பட்ட சுதந்தரம் என்றால் என்ன? சுதந்தரத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? அப்படி கட்டுப்படுத்த முடிந்தால் அதைச் சுதந்தரம் என்று சொல்ல முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு அமெரிக்காவின் விடை மௌனம்.

கலாசார ரீதியாகவும் மத ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் திபெத்தோடு தோழமை பாராட்டி வரும் மற்றொரு நாடு இந்தியா. பண்டைய காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான உறவு நிலை இருந்திருக்கிறது. மாவோவின் கம்யூனிசக் கட்சியால் தனக்குப் பாதகம் நேரலாம் என்று அஞ்சிய தலாய் லாமா லாசாவை விட்டுத் தப்பிச் செல்ல நினைத்தபொழுது அவர் தேர்ந்தெடுத்த நாடு இந்தியா.

இத்தனைக்கும் தலாய் லாமாவை எப்படியாவது அமெரிக்காவுக்கு வரவழைத்துக்கொள்ள அத்தேசம் மிகவும் முயற்சி செய்தது. பல சலுகைகளைத் திபெத்துக்கு அள்ளி வழங்கியது. ஆனால் தலாய் லாமா நாடிச் சென்றது இந்தியாவைத்தான். இன்றளவும் இந்தியாவில் உள்ள தர்மசாலாதான் தலாய் லாமாவின் தலைநகரம்.

அப்படியானால் திபெத்தின் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவளிக்கிறதா? திபெத் ஒரு தனி நாடு என்று இந்தியா ஏற்றுக்கொள்கிறதா? கிடையாது.

திபெத் எனும் புதிருக்கு எங்குதான் விடைகளைத் தேடுவது?

நூல் குறித்த மேலதிக விவரங்கள் இங்கே.

சென்னை புத்தகக் கண்காட்சி / இரண்டாம் உலகப் போர்


ஜூன் மாதம் வெளியான புத்தகம். சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் புது வரவு.

சென்னை புத்தகக் கண்காட்சி / நூல் அறிமுகம் 3 - அம்பேத்கர்

இன்றும்கூட அம்பேத்கரின் உருவச் சிலைகள் கூண்டுகளுக்குள்தான் அடைப்பட்டு கிடக்கின்றன. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மட்டுமல்ல இன்றும்கூட அம்பேத்கரின் சிந்தனைகள் புரட்சிகரமானவை என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.

சமீப காலமாக, அம்பேத்கர் குறித்து அதிக அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சர்ச்சைகளும் மோதல்களும்கூட பெருகிக்கொண்டிருக்கின்றன. அம்பேத்கரை கடவுளாக உருமாற்றும் முயற்சிகளும் அம்பேத்கரின் ஆளுமையைக் குறைத்து அல்லது திரித்து மதிப்பிடும் முயற்சிகளும் சமஅளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இரண்டுமே ஆபத்தானவை.

இந்து மதத்தையும் காங்கிரஸையும் அம்பேத்கர் எப்படி அணுகினார் என்பது தெரிந்த அளவுக்கு பாகிஸ்தான் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்துமான அவர் அணுகுமுறையை பலர் அறிந்திருக்கவில்லை. அதே போல், அம்பேத்கரை மகர் போன்ற குறிப்பிட்ட சில சாதியினரின் தலைவராக குறுக்கி அடையாளம் காட்டவும் பலர் முயன்று வருகிறார்கள்.

பெரியாரை மட்டுமல்ல அம்பேத்கரையும் அன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள் அரவணைத்துக்கொள்ள மறுத்தன. இத்தனைக்கும் பெரியார், அம்பேத்கர் இருவரும் பொதுவுடைமைச் சித்தாந்தம் பயின்றவர்கள்தாம். இருவரும் வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம். நிலச்சீர்திருத்தத்தை, நிலப் பங்கீட்டை ஏற்றுக்கொண்டவர்கள்தாம். அதே சமயம், அனைத்துக்கும் முன்னதாக அவர்கள் சாதி ஒழிப்பை முன்வைத்தார்கள். முதலில் இங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்றார்கள்.

இந்தியாவின் பிரச்னைகள், ரஷ்யா, சீனா எதிர்கொண்ட பிரச்னைகள் போன்றவையல்ல. இங்கு போல் வேறெங்கும் சாதி இத்தனை ஆதிக்கம் செலுத்தியதில்லை. பல நூற்றாண்டுகளாக இங்கே ஒரு சமூகம், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டுக்கிடக்கிறது. இவர்களை விடுவிக்காமல், தேசத்தை விடுவிக்கமுடியாது. இவர்களுக்கு சுதந்தரம் மறுக்கப்பட்டிருக்கும் சமயத்தில், இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைப்பதில் பலனில்லை. அதற்காகப் போராடுவதிலும் பயனில்லை.

இருவருடைய அணுகுமுறையும் ஒன்றாக இருந்ததால், பிரிட்டிஷாருக்கு நெருக்கமானவர்கள், துரோகிகள் என்று இருவருமே குற்றம்சாட்டப்பட்டனர். இந்து மதத்தை இருவரும் நிராகரித்தனர். அம்பேத்கர் சமூக, அரசியல் ஆய்வு நோக்கில் வலுவான வாதங்களுடன் இந்து மதத்தை நிராகரித்தார். பெரியாரின் கூர்மையான அதே சமயம் எளிமையான பகுத்தறிவு வாதங்கள் இந்து மதத்தின் தண்டுவடத்தை உடைத்து நொறுக்கின. அம்பேத்கரைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் எளிய, பாமர மக்களை பெரியார் சென்றடைந்தார். பெரியார் இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை முன்வைத்தார். அம்பேத்கர், பௌத்தத்தின் தர்க்கப்பூர்வமான சிந்தனை திறனை, பகுத்தறிவை, கடவுள் மறுப்புக் கொள்கைகளை.

அம்பேத்கர் ஒரு சிந்தனாவாதியாக, அறிவு தளத்தில் இயங்கியவராக அறியப்படுகிறார். பெரியார், உணர்ச்சிபூர்வமானவராக. பெரியாரை எதிர்த்த அளவுக்கு அம்பேத்கரை மதவாதிகள் எதிர்க்காததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால், இது மேலோட்டமான மதிப்பீடு மட்டுமே. பெரியாரின் சிந்தனகைளும் அம்பேத்கரின் சிந்தனைகளும் பல அம்சங்களில் ஒன்றாக இருந்தாலும், அவர்கள் இருவரும் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு விதமாகச் செயலாற்றினார்கள்.

பெரியாரை ஓர் இந்துவாக மாற்றியமைக்க ஒருவராலும் கனவு காணமுடியாது. ஆனால், அம்பேத்கரை அவ்வாறு மாற்றியமைக்க முடிகிறது. (தலித் முரசு இதழில் அழகிய பெரியவன் இது குறித்து சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்). காரணம், அம்பேத்கர் தழுவிய பௌத்தத்தை பலரும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகத்தான் காண்கிறார்கள்.

பெரியாரின் முழுமையான படைப்புகள் அச்சில் இல்லை. ஆனால், அம்பேத்கரின் படைப்புகள் முழுமையாக அச்சில் கிடைக்கின்றன. இணையத்திலும் கிடைக்கின்றன.

ஆர். முத்துக்குமார் எழுதிய பெரியாரின் வாழ்க்கை வரலாறு சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்ற ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ஆண்டு, அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு வெளிவருகிறது. அம்பேத்கரின் சிந்தனைகள் வாயிலாக அவர் வாழ்க்கையை, அவர் வாழ்ந்த காலகட்டத்தை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

சென்னை புத்தகக் கண்காட்சி / நூல் அறிமுகம் 2 - காப்புரிமை


காப்புரிமை குறித்து தமிழில் வெளிவரும் முதல் புத்தகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட இரு மாதங்கள். ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி அலுவலகம் வந்து நேரில் அளிப்பார், S.P. சொக்கலிங்கம். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் சொக்கலிங்கம். ஆங்கிலத்தில்கூட காப்புரிமையை எளிமையாக அறிமுகம் செய்யும்படியான புத்தகம் இல்லை என்றார். சட்ட சஞ்சிகைகளில் (Law Journal) பல கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதியிருக்கிறார். இது அவருடைய முதல் புத்தகம். அடிப்படைச் சட்டங்கள், அரசியல் தொடர்பான மேலும் சில புத்தகங்களை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

பேட்டண்ட், டிரேட் மார்க், காப்பிரைட், டிசைன்ஸ் இந்த நான்கையும் அறிவுசார் சொத்துரிமைக்குள் (Intellectual Property Rights) அடக்கிவிடலாம். எழுத்து, இசை, வடிவம், பாடல்கள், ஓவியம், கலைப்பொருள்கள் என்று நாம் புதிதாக உருவாக்கும் எந்தவொரு படைப்பையும் சட்டப்படி பதிவு செய்துகொள்ளமுடியும். இதனால் என்ன பயன்? உங்கள் படைப்புகளை இன்னொருவர் உங்கள் அனுமதியின்றி எடுத்தாளும்போது, உங்களால் சட்டப்படி அதனை தடுத்து நிறுத்தமுடியும். நஷ்டஈடு கோரமுடியும்.

அடிப்படையில் இருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகம். பாஸ்மதி அரிசிக்காகவும் வேம்பு, மஞ்சளுக்காகவும் இந்தியா நடத்திய போராட்டங்களையும் புத்தகம் விவரிக்கிறது. காப்புரிமை மீறல்கள் எவை என்பதையும் புத்தகம் தெளிவாக வரையறுக்கிறது.

நிற்க. காப்பிரைட்டுக்கு எதிராக Copyleft என்றொரு சித்தாந்தம் உருவாகியிருக்கிறது. யாரும், எதையும் பயன்படுத்தலாம் என்பது இவர்களது வழி. ஒரு படைப்பு எதற்காக ஒரு படைப்பாளியிடம் (அல்லது ஒரு நிறுவனத்திடம்) முடங்கிப்போகவேண்டும் என்று கேள்வி எழுப்பும் காப்பிலெஃப்ட் குழுவினர் தங்கள் படைப்புகளை மக்கள் உபயோகத்துக்காகப் பொதுவில் திறந்துவைக்கிறார்கள். (Linux இலவசமாக கிடைக்கும் ஒரு மென்பொருள். விண்டோஸின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. இதுபோல் மேலும் பல, Free Open Source மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன). காப்பிலெஃப்ட் குறித்து இங்கே. தொடர்புடைய, GNU General Public License குறித்து இங்கே.

1917 புரட்சிக்குப் பிறகு, சோவியத் ரஷ்யா பதிப்புரிமைச் சட்டங்களைத் திருத்தி அமைத்தது. மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் இருந்த இடைவெளியை இட்டு நிரப்புவது நோக்கமாக இருந்ததால், தகவல்களை அனைவருக்கும் பொதுவில் வைக்க சோவியத் அரசு முடிவுசெய்தது. 1919 மே மாதம் தொடங்கி அரசாங்கம் ஒரு தனிப் பிரிவைத் தொடங்கி அனைத்து பதிப்புப் பணிகளையும் மேற்பார்வையிட ஆரம்பித்தது. தரமான நல்ல புத்தகங்கள், பல்வேறு தலைப்புகளில் வெளிவர ஆரம்பித்தன. மொழிபெயர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிற உலக மொழிகளில் இருந்து ரஷ்ய மொழிக்கும், ரஷ்யாவில் இருந்து பிற மொழிகளுக்கும் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன.
தாஸ்தாயவெஸ்கி, செகோவ், புஷ்கின், டால்ஸ்டாய், டர்கனேவ் உள்ளிட்ட ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்டன.

பிழைகளற்ற மிக நேர்த்தியான படைப்புகள் அவை. முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம் இரண்டும் எண்ணற்ற பல முக்கிய படைப்புகளை தமிழுக்கு அளித்தன. மார்க்சிய, லெனினிய சித்தாந்தத்தைப் பரப்புவது ஒரு நோக்கம் என்றாலும் அது மட்டுமே இறுதி இலக்கு அல்ல. இலக்கியம்,அறிவியல், கணிதம், இயற்பியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளில் பல நல்ல புத்தகங்கள் வெளிவந்தன.

காப்பிலெஃப்ட், காப்பிரைட் யுத்தத்தைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தககம் உதவும்.

மாவோவின் சீனா

மாவோ செயற்கை பஞ்சத்தை உருவாக்கி பல லட்சக்கணக்கான சீனர்களை கொன்றொழித்தார் என்பதில் தொடங்கி அவர் தனிப்பட்ட வாழ்க்கை வரை பல்வேறு குற்றச்சாட்டுகள், அவதூறுகள் ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த அவதூறுகள் குறித்து பல்வேறு விளக்கங்கள் பல்வேறு சமயங்களில் வெளிவந்துள்ளன. என்றாலும், விடாப்பிடியாக விக்கிபீடியா லிங்க் கொடுத்து, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பவர்கள் குறைந்தபாடில்லை. மன்த்லி ரிவியூ இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரை மாபெரும் பாய்ச்சல் (1958-61) குறித்தும் கலாசார புரட்சி (1966-76) குறித்தும் சில கூர்மையான வாதங்களை முன்வைக்கிறது.

Farmers, Mao, and Discontent in China
From the Great Leap Forward to the Present
Dongping Han

கட்டுரையாசிரியர் சீனாவின் பல பகுதிகளை நேரில் சென்று பார்த்து, அங்குள்ள மக்களிடம், குறிப்பாக விவசாயிகளுடன் பேசி அவர்கள் அனுபவங்கள் வாயிலாக இதனை எழுதியிருக்கிறார். மாவோ காலத்து சீனாவையும் தற்போதைய சீனாவையும் அருகருகே வைத்து ஒப்பிடுகிறார். மாவோவின் சீர்திருத்த நடவடிக்கைகளை, விமரிசனப்பூர்வமாக ஆராய்ந்து தன் முடிவுகளை அளிக்கிறார்.

விவாசய உற்பத்தியையும் தொழிற்சாலை வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் பொருட்டு மாபெரும் பாய்ச்சல் திட்டம் தொடங்கப்பட்டது. சீனா முழுவதும் ஆறு லட்சம் உருக்கு ஆலைகள் சிறிய அளவில் தொடங்கப்பட்டன. கம்யூன்கள் பரந்த அளவில் ஆரம்பிக்கப்பட்டன. அடுத்து வரும் ஆண்டுகளில் விளைச்சல் அதிவேகமாகப் பெருகும் வகையில், தொழில்துறை பெருமளவில் முன்னேறும் வகையில், இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியும் மக்களும் மீன்களும் நீர்நிலையும் போல் இருக்கவேண்டும் என்றார் மாவோ. நீருக்கு மீன்கள் தேவையில்லை. மீன்களுக்கு நீர் வேண்டும். கட்சி இல்லாமல் மக்களால் இருந்திடமுடியும். ஆனால், அவர்கள் இல்லாமல் நாம் கட்சி நடத்தமுடியாது. எனவே, மாபெரும் பாய்ச்சல் திட்டத்தைச் செயல்படுத்தும்போது மக்களின் ஒத்துழைப்பை முழுவதுமாக பெறவேண்டும் என்று வலியுறுத்தினார் மாவோ. எனவே, கட்சியினர், விவசாயிகள், நகர்ப்புற மக்கள் என்னும் பேதங்கள் இன்றி அனைவரும் இந்தக் காலகட்டத்தில் ஒன்றிணைந்து உழைத்தனர்.

எனில், தவறுகளே நடைபெறவில்லையா? நடைபெற்றன. சறுக்கல்களே இல்லையா? இருந்தன. ஆனால் பஞ்சம் ஏற்பட்டு பல லட்சம் பேர் இறந்தார்கள் என்னும் கூற்று தவறானது. சீனர்களின் வேலை நேரம் அதிகரித்தது. உடலுழைப்பு அதிகரித்தது. அதே சமயம், அந்த உழைப்புக்கு ஏற்ற சத்தான உணவு அவர்களுக்கு கிடைக்கவில்லை. உணவுத் தட்டுப்பாடு பெருகியது. பல சமயங்களில், சர்க்கரை கிழங்குகளும் சிறிதளவு இறைச்சியும் மட்டுமே கிடைத்தன. மக்கள் மட்டும அனுபவித்த சிரமங்கள் அல்ல இவை. தலைமை தொடங்கி, கட்சியினர், மக்கள் என்று அனைவரும் இந்தச் சவால்களை ஒன்றுபோலவே எதிர்கொண்டனர். ஒன்றுபோலவே பாதிக்கப்பட்டனர்.

மாவோவின் சீனாவை இன்றைய சீனாவோடு ஒப்பிடும்போது இந்த வித்தியாசத்தை உணரமுடியும். சீனாவில் இன்றைய விவசாயிகளின் நிலையையும் அன்றைய விவசாயிகளின் நிலையையும் ஒப்பிடவேண்டும். அன்றைய சீனக் கம்யூனிஸ்ட கட்சியையும் இன்றைய கட்சியையும் ஒப்பிடவேண்டும். அன்று எத்தனை விவசாயிகள் மாவோ அரசுக்கு எதிரான கலகங்களில் இறங்கினர் என்பதையும் இன்று, எத்தனை விவசாயிகள் அரசாங்கத்தை எதிர்த்து திரண்டுகொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஒப்பிடவேண்டும்.

பிற்கால சீனா முதலாளித்துவ, சந்தைப் பொருளாதாரத்துக்குத் திரும்பியதை நியாயப்படுத்தவேண்டுமானால், மாவோவின் அரசு நிர்வாகத்தைக் குற்றம் கூறவேண்டும். மட்டம் தட்டவேண்டும். குறைத்து மதிப்பீடு செய்யவேண்டும். டெங் ஜியோபிங் இதனை ஆரம்பித்து வைத்தார். அது தொடர்ந்துகொண்டிருக்கிறது.

கட்டுரையின் முழு ஆங்கில வடிவம்.