முதலாளித்துவமும் அம்பேத்கரும்

0 comments

அம்பேத்கரைத் தம்மில் ஒருவராகச் சித்தரிக்கும் முயற்சியை இந்துத்துவவாதிகள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக இந்தப் போக்கு வலுவடைந்து வருகிறது. இது உண்மையிலேயே விந்தைக்குரிய முயற்சியாகும். எந்த கருத்தாக்கத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அவர் தீர்க்கமாக எதிர்த்து வந்தாரோ, எந்த மதத்தின் கோளாறுகளைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்பலப்படுத்தி வந்தாரோ, எந்த அமைப்பின் குறைபாடுகளைக் கடுமையாக விமரிசத்தாரோ, அவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாக அவரை மாற்ற இந்துத்துவவாதிகள் அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாதத்தை நிரூபிக்க, பல்வேறு கட்டுக்கதைகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அம்பேத்கரை வளைத்துக்கொள்ள இந்துத்துவவாதிகள் முன்வைக்கும் ஒரு வாதம், அவர் சோஷலிசத்தை நிராகரித்து முதலாளித்துவ அமைப்பை ஏற்றார் என்பதாகும். அம்பேத்கர் மார்க்சியத்தை மறுதலித்தார் என்றும், சோஷலிசக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார் என்றும் அவர்கள் விரித்துரைக்கிறார்கள். மார்க்ஸுக்கும் மார்க்சியத்துக்கும் எதிராக அம்பேத்கரைத் தந்திரமாக முன்னிறுத்துவதன் மூலம், இடதுசாரி சிந்தனையோட்டம் கொண்டவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்கள் நோக்கம். இந்தக் கதைகளை முறியடிக்க ஒரே வழி, அம்பேத்கரை முழுமையாக உள்வாங்கிக்கொள்வதுதான்.

தனி உடைமை

புத்தரைப் போலவே அம்பேத்கரும் ஏழைமையைக் கொண்டாட மறுத்தார். உடைமைகள் அற்றவரை அவர் சமாதானப்படுத்தவில்லை. அவர்களைத் தட்டிக்கொடுக்கவில்லை. அதிகப் பொருள்கள் இல்லாதிருப்பது பற்றியோ ஆசையைத் துறப்பது பற்றியோ அறிவுரை கூறவில்லை. ஒன்று சோஷலிசம் இருக்கவேண்டும் அல்லது ஏழைமை இருக்கவேண்டும் என்றார்.

தனிச்சொத்துரிமையும் முதலாளித்துவமும் அழித்தொழிக்கப்படவேண்டிய தீமைகள் என்று அவர் கருதவில்லை. தனி உடைமையையும் தன் சொத்தைப் பாதுகாக்கும் உரிமையையும் அம்பேத்கர் ஏற்றுக்கொண்டார். அரசு இந்த உரிமைகளில் தலையிடாது என்பது மட்டுமல்ல, இந்த உரிமைகளை யாரும் மீறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அரசு ஏற்கும். முதலாளித்துவமும் தனிச் சொத்துரிமையும் சமூகத்தில் இருந்து அழிக்கப்பட்டாகவேண்டும் என்று அவர் கருதவில்லை. உழைக்கும் வர்க்கத்துக்கு எந்த வகையிலும் இந்த இரு அம்சங்களும் தீங்கு ஏற்படுத்தக்கூடாது என்று அவர் விரும்பினார். அவ்வாறு நிகழாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வதே ஓர் அரசின் பொறுப்பு என்று வரையறுத்தார்.

தொழில்மயமாக்கலும் அரசின் பாத்திரமும்

இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன்பே, தொழில்மயமாக்கலில் அரசு வகிக்கவேண்டிய பாத்திரத்தையும் ஏற்கவேண்டிய பொறுப்பையும் பற்றி அம்பேத்கர் உரையாடத் தொடங்கிவிட்டார். தொழில்மயமாக்கலின் பலன்களை ஒருசிலர் மட்டும் அறுவடை செய்துகொள்வதைத் தடுக்க அவர் விரும்பினார். கனரக தொழிற்சாலைகள் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். அம்பேத்கரின் துரித தொழில்மயமாக்கல் இந்தியாவின் பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கத் துடித்தது. சமத்துவமின்மையை ஒழிக்கும் நோக்கம் கொண்டிருந்தது. அரசாங்கத்தின் இயக்கமும் மக்களின் இயக்கமும் சீராக இருக்கவேண்டும் என்பது அதன் இலக்கு.

துரித தொழில்மயமாக்கலுக்கான முதலீட்டைத் தனியார்களால் அளிக்கமுடியாது. பதுக்கல்காரர்களாக தனியார்கள் இருப்பதால் அவர்களால் பெரும் திட்டத்தில் முதலீடு செய்யவியலாது. இயல்பிலேயே பேராசை குணம் கொண்டவர்களாக மக்கள் இருக்கிறார்கள். எனவே, அரசின் தேவை எழுகிறது. வேளாண் உற்பத்திக் கருவிகள் பொதுவில் அரசிடம் இருக்கவேண்டும். கூட்டுப் பண்ணையாக்க முறை மூலம் விவசாயிகள் வளம் பெறவேண்டும். ஆக, விவசாயம், தொழில் உற்பத்தி இரண்டிலும் அரசு தலையீடு இருக்கவேண்டும்.

விவசாயம், பெருள் உற்பத்திக்கு அடுத்தபடியாக காப்பீட்டுத் துறை அரசிடம் இருக்கவேண்டும் என்றார் அம்பேத்கர். தனியார் நிறுவனங்களிடம் காப்பீட்டுத் துறை இருப்பது நல்லதல்ல. அவற்றால் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்பு அளிக்கவியலாது. ஆனால், ஓர் அரசால் மக்களின் பணத்துக்குக் காப்பாக தம் செல்வத்தை முன்வைக்கமுடியும் என்பதால் மக்களுக்கு அரசு காப்பீட்டு நிறுவனங்களின்மீது இயல்பாகவே நம்பிக்கை பிறக்கும். இந்த நம்பிக்கையைத் தனியார்களால் ஏற்படுத்தமுடியாது.

எங்கே ஓர் அரசு தன் கடமைகளைச் சரிவரச் செய்கிறதோ அங்கே தனி நபர்களின் உடைமைகளும் பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்படும். இதையே அவர் அரசு சோஷலிசம் என்றார். அதே சமயம் இது ஒரு பொருளியல் கோட்பாடு மட்டுமல்ல. சமூக, தார்மீக பொறுப்புகளும் அதற்கு உள்ளன.

அரசு சோஷலிசம்

முதலாளித்துவம் நீடித்திருக்கவேண்டுமானால் அது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைப் பேணியாகவேண்டும். உழைப்புக்கேற்ற கூலி அளித்தாகவேண்டும். அவ்வாறு நடக்கும் என்னும் நம்பிக்கை அம்பேத்கருக்கு இல்லை. எனவே அவர் அரசு சோஷலிசத்தை மாற்றாக முன்வைத்தார். பொதுமக்களின் நலன்கள் புரறக்கணிக்கப்பட்டால் அரசின் தலையீடு இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. Laissez-faire என்னும் கட்டுப்பாடற்ற வர்த்தகப் பரிவர்த்தனைகளை அவர் ஏற்கவில்லை.

துரித தொழில்மயமாக்கல் இந்தியாவுக்கு அவசியம். இதனை தனியார்களால் செய்யமுடியாது. அரசே இந்தப் பொறுப்பை வகிக்கவேண்டும். தனியார்களால் செய்ய முடிந்தது தனிப்பட்ட முறையில் வளத்தைப் பெருக்கிக்கொள்வது மட்டுமே. ஐரோப்பாவில்நடந்தது இதுதான் என்றார் அம்பேத்கர். இந்தியர்கள் இதை ஓர் எச்சரிகையாகக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.

மார்க்சிய பாணி சோஷலிசத்துக்கும் அம்பேத்கரின் சோஷலிசத்துக்கும் வேறுபாடுகள் இருந்தன. ‘அனைவரும் ஒன்றுபோல்’ என்னும் லட்சியப் பார்வையை அவர் ஏற்கமறுத்தார். ‘அனைவருக்கும் ஒன்றுபோல் வாய்ப்புகள்’ என்பதே அவர் அடைய விரும்பிய இலக்கு. உழைப்பைச் செலுத்தாமல் பொருளாதார ரீதியில் சிலர் உயர்ந்திருப்பதும், உழைப்பைச் செலுத்திய பிறகும் ஏழைமையில் சிக்கித் தவிக்கும் நிலையையும் அவர் அகற்ற விரும்பினார். சமூக நீதி மீதான அக்கறையின் அடிப்படையில் அவர் இதனை அணுகினார்.

அம்பேத்கர் முன்வைத்த அரசு சோஷலிசத்தின் பரந்த லட்சியங்கள் இவை.
அனைவருக்கும் பலனளிக்கும் தொழில்மயமாக்கல். அனைவருக்கும் பலனளிக்கும் சோஷலிசம். அனைவருக்கும் பொதுவான அரசியலமைப்புச் சட்டம். அனைவருக்கும் பொதுவான ஓர் அரசு. சமூகமும் அரசும் ஒன்றிணைந்து, ஒருமித்து செயல்படவேண்டும். சமூகத்தின் நலன்களை ஓர் அரசு பிரதிபலிக்கவேண்டும். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை அரசு களையவேண்டும்.

சோஷலிசத்தை நிர்மாணிக்கவேண்டிய பொறுப்பை சட்ட மன்றத்துக்கு அளித்துவிடுவதல்ல அம்பேத்கரின் முடிவு. அரசியலமைப்புச் சட்டத்தில் இது வரையறுக்கப்படவேண்டும் என்றார். சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் நிர்ணயம் செய்யவேண்டும்.

ஒருவன் வேலை வாய்ப்பின்றி இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனிடம் இரண்டு வாய்ப்புகளைக் கொடுப்போம். உனக்கு ஒரு வேலை தருகிறோம். ஆனால், வேலை நேரம் பற்றியோ ஊதியம் பற்றியோ நீ பேசக்கூடாது. தொழிற்சங்கங்களில் இணைவதோ அடிப்படை உரிமைகள் பேசுவதோ கூடாது. சம்பளமும் குறைவாகத்தான் இருக்கும். இரண்டாவது வாய்ப்பு, உனக்கு அத்தனை அடிப்படை உரிமைகளும் அளிக்கப்படும். பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை, விரும்பும் அமைப்புகளில் இணையும் உரிமை அனைத்தும் இருக்கும். இரண்டில் எதை அவன் தேர்ந்தெடுப்பான்? அரசு செலவில் அரசு கொடுக்கும் இலவசங்களைக் கொண்டு ஒரு சுமையாக வாழ அவன் விரும்புவானா? அரசு செலவில் தன் இறுதிச் சடங்குகள் நடைபெறுவதை அவன் விரும்புவானா? ‘இந்நிலையில் தங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள அடிப்படை உரிமைகளை அவர்கள் பறிக்கொடுக்கிறார்கள்.’

முதலாளித்துவமும் அரசுத் தலையீடும்

அரசு தலையீடு இல்லாமல், தனியார்களிடம் முழு அதிகாரம் ஒப்படைக்கப்படும்போது மேலே கண்டதைப் போன்ற பெரும் அபாயங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. அளவற்ற சுதந்தரம் என்பது நிலவுடைமையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப வாடகையை உயர்த்திக்கொள்வதற்கும், முதலாளிகள் தங்கள் லாபத்தைப் பெருக்க தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதற்குமே உதவும் என்றார் அம்பேத்கர். பல ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பணியாற்றியாகவேண்டும். அதற்கு பல நூற்றுக்கணக்கான ஆலைகள் அமைக்கப்பட்டாகவேண்டும். பல லட்சம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படவேண்டும். இதற்கெல்லாம் தெளிவான சட்டத்திட்டங்கள் வேண்டாமா? கட்டுப்பாடுகளும் கடப்பாடுகளும் வேண்டாமா? யாருடைய நலன்களும் பாதிப்படையாமல் இருக்கவேண்டியது அவசியமல்லவா? உற்பத்தியும் ஊதியமும் விநியோகமும்  சீராக இருக்கவேண்டாமா?

அம்பேத்கரைப் பொருத்தவரை இந்த இடத்தில்தான் ‘அரசுத் தலையிடல்’ அவசியமாகிறது. எங்கு அரசு தலையீடு இல்லையோ, எங்கு சட்டத்திட்டங்கள் இல்லையோ,எங்கு சோஷலிசம் இல்லையோ, எங்கு முதலாளிகள் அச்சமின்றி செயல்படுகிறார்களோ, அங்கே ‘தனியார் நிறுவனங்களின் சர்வாதிகாரம் நிலவும்’ என்றார் அம்பேத்கர். வேலையில்லாதவர்கள், பணியில் இருப்பவர்கள் ஆகிய இரு பிரிவினரையும் சட்டப்படி பாதுகாப்பதே அம்பேத்கரின் நோக்கமாக இருந்தது. அவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதே அவரது அக்கறையாக இருந்தது.  இதை எப்படி உறுதிபடுத்துவது?

பொதுவாக, ஜனநாயக நாடுகள் கடைபிடிக்கும் வழி இதுதான். வலிமை வாய்ந்த ஒருவன் ஒரு எளியவனை பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்தாமல் இருக்க சட்டப்படி வழிவகைகள் செய்யப்பட்டிருக்கவேண்டும். பாதிக்கப்படுபவர்கள் சட்டத்தை அணுகுவதற்கான வாய்ப்புகள் இருக்கவேண்டும். ஆனால் அம்பேத்கர் இதனை ஏற்க மறுத்தார். வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டாலும், அவர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி அரசாங்கத்தை உருவாக்கினாலும், சட்டமன்றமும் அரசாங்கமும் அதிகாரம் உள்ளவர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. அதிகாரம் இல்லாத எளியவர்களுக்கு இங்கே நீதி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. ‘அதிக பலம் கொண்டவர்களுக்கு அரசு அதிகாரம் வழங்கப்பட்டால்’ இந்தப் பிரச்னை நீடிக்கும். பலம் பெற்றவர்களிடமும் அதிகாரமும் கூடிவரும்போது அவர்கள் தம்மில் எளியோரைப் பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்த துணிவார்கள். எளியோரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும். இதைத் தடுக்க ஒரே வழி சோஷலிசம். அரசு சோஷலிசத்தின் மூலம் தனி நபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

அம்பேத்கரின் அரசு சோஷலிசம், முதலாளித்துவ அச்சுறுத்தலில் இருந்து எளியோரைப் பாதுகாக்கும். செல்வம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பசியில் இருந்தும் வேலையின்மையில் இருந்தும் அபரிமிதமான உற்பத்தியில் இருந்தும் பிற சமூகத் தீங்குகளில் இருந்தும் அது மனிதர்களை விடுவிக்கும். அம்பேத்கரின் சோஷலிசத்தில் செல்வம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். விவசாயமும் உற்பத்தியும் கனரகத் தொழிற்சாலைகளும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். வலிமையானவர்களின் மிதமிஞ்சிய அதிகாரமும் அபரிமிதமான செல்வமும் கட்டுப்படுத்தப்படும். அதே சமயம் அங்கே முதலாளிகளுக்கும் இடமிருக்கும். தொழிலாளர்களின் உரிமைகளைப் போலவே அவர்களுடைய உரிமைகளும் பாதுகாக்கப்படும். ஒவ்வொருவரும் தம்முடைய திறமையை சுதந்தரமாக வளர்த்துக்கொள்ளலாம். சோஷலிசத்தின் பெயரால் அரசு எவருடைய தனித்தன்மையையும் அழிக்காது. அனைவருக்கும் நீதி கிடைக்கும். சமமாக.

(அம்ருதாவில்வெளிவந்த கட்டுரை)

கருத்துரிமை : சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும்

1 comments
1

சல்மான் ருஷ்டியின் The Satanic Verses நாவலைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினின் புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியால் கலந்துகொள்ள முடியவில்லை. வீடியோ கான்ஃபரன்ஸிங்கூட சாத்தியப்படவில்லை. அதே போல் தஸ்லிமா நஸ்ரின் எழுதிவரும் தொடர் சுயசரிதையின் ஏழாவது பாகமான Nirbasan (எக்ஸைல் என்று பொருள்) வெளியிடப்படக்கூடாது என்று கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வேறு வழியின்றி அரங்குக்கு வெளியில் புத்தகம் வெளியிடப்பட்டது. கொலை மிரட்டல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வாருங்கள் என்று சல்மான் ருஷ்டிக்கு காவல் துறையால் உத்தரவாதம் அளிக்கமுடியவில்லை (கொலை மிரட்டல்களை உற்பத்தி செய்தவர்களே அவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது). தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டைத் தடுப்பவர்களையும் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி நடந்த சம்பவத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பொறுப்பான எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மொத்தத்தில் இரு எழுத்தாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இந்த இரு சம்பவங்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை முதலில் பார்ப்போம். எழுத்தாளர்கள் இருவரும் இஸ்லாமியர்கள். இவர்களை எதிர்ப்பவர்களும் இஸ்லாமியர்களே. ருஷ்டிக்கு இரானின் கொமேனியும் தஸ்லிமாவுக்கு வங்கதேச இஸ்லாமிய அமைப்பும் தடையுத்தரவும் கொலை உத்தரவும் பிறப்பித்தன. ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் இஸ்லாத்தின் இறைவனை நேரடியாகப் பகடி செய்தது. தஸ்லிமாவின் லஜ்ஜா இஸ்லாத்தின் பிற்போக்குத்தனங்களைக் கேள்விக்கு உட்படுத்தியது.
வங்கதேசத்துக்கு இன்று வரை தஸ்லிமா அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ருஷ்டி மீதான ஃபத்வா கொமேனியின் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஓர் இந்தியப் பிரஜை என்னும் முறையில் ருஷ்டி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்; முன்அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமாவால், அவரது விருப்பத்துக்குரிய ‘இரண்டாவது வீடான’ கொல்கத்தாவுக்கு இன்று வரை வரமுடியவில்லை. மேற்கு வங்க அரசின் அனுமதியும் விசா நீட்டிப்பும் கிட்டவில்லை.

தோழர் அம்பேத்கரும் துப்பாக்கிச் சூடும் - 2

2 comments
மகாராஷ்டிராவில் நடைபெறும் அம்பேத்கர் நினைவு நாள் விழாவுக்கு சுற்றுப்புறங்களில் இருந்து கும்பல் கும்பலாக வரும் தலித் மக்கள் கூட்டம் அங்குள்ள நடுத்தர, உயர் வர்க்கத்தினருக்கு அச்சத்தையும் அறுவருப்பையும் ஊட்டுகிறது. 'அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்களிடம் இருந்து எப்போதும் துர்நாற்றம் அடித்துக்கொண்டிருக்கிறது. நம் சுற்றுப்புறத்தையே pollute செய்கிறார்கள். ஒவ்வொருமுறையும் இப்படி கூட்டம் கூட்டமாக இங்கே வருவதை நிறுத்தவேண்டும். தானே போன்ற புறநகர் பகுதிகளுக்கு அவர்களை அனுப்பிவைத்துவிடலாம்.'

'அவர்க்ள் அசுத்தமானவர்கள் என்கிறீர்கள். ஆனால் அவர்கள்தானே உங்கள் குப்பைகளையும் அழுக்குகளையும் சுத்தப்படுத்துகிறார்கள். அவர்களை ஏன் வெளியேறச் சொல்கிறீர்கள்?'

'ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள். அவ்வளவுதான்.'

வேறு நபர். இன்னொரு கேள்வி. 'ரிஸர்வேஷனை நிறுத்திவிடவேண்டும் என்று சொல்கிறீர்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் எப்போதோ முன்னேறிவிட்டார்கள், இப்போது கஷ்டப்படுபவர்கள் நாம்தான் என்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த வட்டாரத்தில் அப்படி முன்னேறிய நபர் ஒருவரைப் பற்றி சொல்லுங்கள்.'

'நான் அவர்களுடன் பழகுவதில்லை. எனக்கு யாரையும் தெரியாது.'

அவர்கள் ஏன் அசுத்தமாக இருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் ஒதுக்குப்புறத்திலும் குப்பைமேட்டிலும் சாக்கடை ஓடும் சேரிகளிலும் குடியேறியிருககிறார்கள். ஏன் அங்கிருக்கிறார்கள்? அவர்கள் ஏழைகள். ஏன் அப்படி? வேலையில்லை. ஏன் இல்லை? படிக்கவில்லை. ஏன் படிக்கவில்லை? வசதியில்லை. இன்னும் கேள்விகள் அடுக்கினால் முகத்தில் அடிப்பது போல் இப்படி பதில் வரும். 'விதி!'

12ம் வகுப்பு வரை படித்த ஒருவரும் குப்பை அள்ளும் தொழிலில்தான் இருக்கிறார். சேறும் சகுதியும் ஊறிப்போயிருக்கும் அந்த மைதானத்தில் வரிசையாக குப்பை லாரிகள் வந்துகொண்டிருக்கின்றன. நிறுத்திவிட்டு ஒரு காலை வண்டி மேல் வைத்து, பின்பக்கக் கதவை பிடித்து இழுக்கும்போதே கழிவுகள் மார்பிலும் தொடையிலும் சரியத் தொடங்குகின்றன. நீண்ட கம்பி கொண்டு கிளறுகிறார்கள். சில இடங்களில் கெட்டித்துப்போயிருக்கிறது. சில இடங்களில் கருஞ்சாக்கடைக் கட்டிகளாகத் திரண்டிருககிறது.

அவர் காலில் செருப்பில்லை. தலையில் ஒரு துண்டு சுற்றியிருக்கிறார். ட்ரவுசரை முட்டி வரை கிழித்துவிட்டிருக்கிறார். மேலுக்கு வண்ணமிழந்த டீஷர்ட். லாரியில் இருந்து குப்பை மலையை கீழே தள்ளுவதே பெரும் பாடு. அது ஆன பிறகு, தரையில் சிதறியதை வகைப்படுத்தி பிரித்து அள்ளி எடுத்துச் சென்று வேறோரிடத்தில் குவிக்கவேண்டும்.

'எடுத்து தலைமீது வைத்து நடக்கும்போது பல சமயங்களில் உடைந்து தலையிலும் முதுகிலும் தொடை, கால் என்று உடல் முழுவதும் கழிவுகள் சிதறியோடும்.' ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலைப்பாகையும் கையுறையும் தரவேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் தராத பட்சத்தில் அரசு இவற்றை அளிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருககிறது. 'ஆனால் இன்றுவரை எங்களுக்கு இந்த அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை. தங்களுக்குச் சாதகமாக சட்டப்படி உத்தரவு வாங்குவதற்காக வக்கீலை வைத்து வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் முதலாளிகள். அந்த வக்கீலுக்கு ஆயிரக்கணக்கில் பணம் தருகிறார்கள்.'

பணி நிரந்தரம் கிடையாது. அன்றாடம் கிடைக்கும் கூலி மட்டுமே. பணியில் நேரும் விபத்துக்கு இழப்பீடு கிடையாது என்பது மட்டுமல்ல விடுமுறையின் போது சம்பளமும் கிடையாது. 'ஒருமுறை கம்பியைக் கொண்டு லாரியில் உள்ள குப்பையைக் கிளறும்போது சட்டென்று பறந்து வந்த ஒரு கிளாஸ் துண்டு கண்ணைக் கீறியெடுத்துவிட்டது.' இடுங்கிய கண் கொண்டு காமிராவைப் பார்க்கிறார் ஒரு தொழிலாளி.

அம்பேத்கர் நினைவுவிழா கொண்டாட்டங்களில் இவர்களும் பங்கேற்கிறார்கள். அன்றைய தினம் மட்டும் புத்தாடை அணிந்து, இனிப்பு வாங்கி உண்டு,  பாடல்கள் இசைத்துக்கொண்டு, ஆட்டம் போட்டுக்கொண்டு குழந்தைகளையும் கட்டு சாப்பட்டையும் சுமந்துகொண்டு, மனைவி உறவினர் நண்பர்களுடன் இவர்கள் ஊர்வலமாக நடந்துசெல்கிறார்கள். பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. சாலைகள் பிதுங்கி வழிகின்றன. ஜெய் பீம் முழக்கங்கள் திரும்பும் திசையெங்கும் எதிரொலிக்கின்றன. 

ராமாபாய் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் இவர்களில் ஒருவரும் அடக்கம். 

'ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள். அவ்வளவுதான்.'

தோழர் அம்பேத்கரும் துப்பாக்கிச் சூடும் - 1

0 comments
கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடியதே தெரியாதபடி இருக்கையோடு பிணைத்துக் கட்டிப்போட்டுவிட்டது ஆனந்த் பட்வர்தனின் ஜெய் பீம் காம்ரேட். ஜூலை 1997ல் மும்பையில் உள்ள ராமாபாய் அம்பேத்கர் நகரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடுதான் மையம் என்றாலும் அதைத் தாண்டி பல விரிவான அரசியல், சமூகப் பார்வைகளை இந்தப் படம் முன்வைக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே, செப்டெம்பர் 2011 பரமக்குடிக்கும் ஜூலை 1997 ராமாபாய்க்கும் உள்ள ஒற்றுமைகள் முகத்தில் அறைகின்றன.

ராமாபாய் அம்பேத்கர் காலனியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஆதிக்கச் சாதியினர் செருப்பு மாலை அணிவித்ததை எதிர்க்கும் வகையில் தலித் மக்கள் சாலையில் கூடி நின்று போராடினர். இம்மானுவேல் சேகரன் வீர வணக்க விழாவில் கலந்துகொள்வதைத் தடுக்கும் முறையில் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பரமக்குடியில் தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

அம்பேத்கரின் புகழும் செல்வாக்கும் தலித் மக்களிடையே வளர்ந்து வருவதைக் குலைக்கும் வகையில் ராமாபாய் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச்சிலை அவமதிக்கப்பட்டது. வீர வணக்க விழா வாயிலாக இம்மானுவேல் சேகரனின் புகழும் செல்வாக்கும் வருவதைத் தடுக்கும் நோக்கில், அவ்விழாவில் பங்கேற்க வந்த ஜான் பாண்டியன் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த இரு சம்பங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தலித் சமூகத்தினர். எனவே அவர்கள் சாலைக்கு வந்தனர். போராடத் துணிந்தனர். தமக்கு எதிராகச் செயல்படும் ஆதிக்கச் சாதியினரையும் அவர்களைக் கட்டுப்படுத்த தவறும் அல்லது அவர்களுக்குத் துணைபோகும் காவல் துறையினரையும் அவர்கள் எதிர்த்தனர்.

ஆனால் இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களைத்தான் காவல்துறை குறி வைத்து தாக்கியது. ராமாபாய் அம்பேத்கர் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். பரமக்குடியில் 7 பேர்.

கலவரத்தை அடக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று இரு இடங்களிலும் காவல்துறை வாதிட்டது. பரமக்குடியில் ஒரு வஜ்ரா வாகனம் கொளுத்தப்பட்டது. ராமாபாய் அம்பேத்கர் நகரில் ஒரு டேங்கர் லாரி கொளுத்தப்பட்டது.

வஜ்ரா வாகனத்தைக் கொளுத்தியது நாங்களல்ல என்றனர் பரமக்குடிவாசிகள். 'டேங்கர் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என்னிடம் கைநாட்டு வாங்கிக்கொண்டு போனார்கள்!' என்று பேட்டி கொடுத்தார் ஒரு மும்பை தலித் பெண். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் சடலங்கள் காணப்படும் இடத்துக்கும் டேங்கர் லாரி எரிந்த இடத்துக்கும் தொடர்பே இல்லை என்பது வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது. பலனில்லை.

வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், தலித் மக்கள் தரப்பு ஆதாரங்களும் வாதங்களும் நியாயங்களும் நீதி மன்றங்களைத் திருப்திபடுத்தவில்லை. ராமாபாய் அம்பேத்கர் நகர் துப்பாக்கிச் சூட்டை முன்னின்று நடத்திய M.Y. காதம் என்னும் சப் இன்ஸ்பெக்டருக்கு 12 ஆண்டு விசாரணைக்குப் பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு, ஆயிரம் ரூபாய் அபராதம். எல்லாம் முடிந்தபின், சிறைச்சாலைக்கு அல்ல மருத்துவமனைக்குதான் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.  பரமக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை இன்னும் முறைப்படி தொடங்கவேயில்லை.

0

'இந்த ரிசர்வேஷன் சிஸ்டத்தை மாத்தணும் சார். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அவங்களுக்கு சலுகைகளைக் கொடுத்துக்கிட்டே இருக்கிறது!' என்று குறைபட்டுக்கொள்கிறார் ஒரு படித்த இளைஞர்.

'என் தாத்தாவின் தாத்தா அவர்களுடைய (தலித் சமூகத்தினர்) தாத்தாவின் தாத்தாவுக்குச் செய்த கொடுமைகளுக்கு நான் ஏன் விலை கொடுக்கவேண்டும்? Come on man, this is abusurd!' என்று தோள்களைக் குலுக்கிக்கொள்கிறார் ஒரு நவீனப் பெண்.

'பரசுராமர் ஒரு ideal priest-warrior. அவருடைய ஜீன்ஸ் சித்பவன் பிராமணர்களாகிய எங்களிடம் பரவியிருக்கிறது. எங்கள் உயிரைக் கொடுத்தாவது நாங்கள் ரிசர்வேஷனை எதிர்ப்போம்!' என்று காமிராவுக்கு முன்னால் முஷ்டியை உயர்த்துகிறார்கள் சில பார்ப்பனர்கள்.

'உயர் சாதியினரின் மலத்தைவிட கீழ்ச்சாதிக்காரனின் மலம் அதிக நாற்றத்தைத் தரும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?' ஆம் என்று பதிலளிக்கிறார் ஒருவர்.

ஜெய் பீம் காம்ரேட் இவர்களைப் பற்றிய படமும்கூட.

0

ராமாபாய் அம்பேத்கர் நகர் துப்பாக்கிச் சூட்டைப் பொறுத்துக்கொள்ள இயலாத இடதுசாரி கவிஞர் விலாஸ் கோக்ரே தற்கொலை செய்துகொள்கிறார். படம் நெடுகிலும் அவருடைய கவிதைகளும் பாடல்களும் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இப்படம் அவரைப் பற்றியதும்கூட.

0

இசைப் பாடகர்களையும் நடிகர்களையும் கொண்ட கபீர் காலா மஞ்ச் (Kabir Kala Manch - KKM) என்னும் தலித் அமைப்பு அம்பேத்கரையும் அம்பேத்கர் வழிப் போராட்டத்தையும் வீதியோர மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. வன்முறையை அல்ல, மூளையைப் பயன்படுத்தியே நாம் போராட வேண்டும் என்று இவர்கள் பாடியபடி செல்கிறார்கள். இசையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்தக் குழுவினரை, நக்ஸலைட்டுகள் என்று முத்திரை குத்தி வேட்டையாடி வருகிறது காவல்துறை. சிலர் கைது செய்யப்பட்டனர். பலர் மறைவிடத்தில் உள்ளனர். இந்தப் படம் அவர்களைப் பற்றியது. அவர்களுடைய இசை வழிப் போராட்டம் பற்றியது.

0

'துப்பாக்கிச் சூடு நடந்தபோது யார் ஆட்சியில் இருந்தார்கள்?'  காங்கிரஸா? சிவ சேனா-பிஜேபியா? சிலருக்குச் சரியாக நினைவில்லை. 'யார் வந்தா என்னங்க? எங்க வாழ்க்கை மாறப்போறதில்லை!' என்று புன்னகை செய்கிறார்கள். எந்த கட்சி கொன்றதோ அதே கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள். விரல் நுனியில் உள்ள கரு மையை உயர்த்திப் பிடித்து காட்டுகிறார்கள். 

இந்தப் படம் அப்பாவி தலித் மக்களைப் பற்றியது. அரசியல் தந்திரங்களால் பலியானவர்களின், மூளை மழுங்கடிக்கப்பட்டவர்களின் சோகத்தைப் பற்றியது.

0

இந்தப் படம் முரண்பாடுகளைப் பற்றியது.

அம்பேத்கர் சிலைக்கு நரேந்திர மோடி மாலையிடுகிறார்.

சிவ சேனாவை அரவணைத்துக்கொள்கிறது ரிபப்ளிக்கன் கட்சி.

அம்பேத்கர் முன்மொழிந்த தாமரைச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்கிறார் ஒரு காவிக் கட்சிக்காரர்.

தலித்-இந்துத்துவ ஒற்றுமை குறித்து சிலர் சீரியஸாக விவாதிக்கிறார்கள்.

0

எது முதலில் ஒழிக்கப்படவேண்டும்? வர்க்கமா, சாதியா? யார் நமக்குத் தேவைப்படுகிறார்கள்? மார்க்ஸும் எங்கெல்ஸுமா, பெரியாரும் அம்பேத்கருமா?

திரையிடல் முடிந்தபிறகு, ஆனந்த் பட்வர்த்தன் உரையாடினார். 'காந்தியும் அம்பேத்கரும் எதிரெதிரானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கிடையே சில பொதுவான அம்சங்கள் உள்ளன. இருவரையும் ஒரே சமயத்தில் உள்வாங்கிக்கொள்வது சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன்!'

இந்தப் படம் விவாதங்களைப் பற்றியது.

0

ஜெய் பீம் காம்ரேட் படத்தை முறைப்படி அறிமுகப்படுத்துவதன் மூலம் சில முக்கிய விவாதங்களை எழுப்பமுடியும் என்பதால், இப்படம் முன்வைக்கும் சில பார்வைகளைப் பற்றி அடுத்தடுத்து எழுதவிருக்கிறேன். 

ஜெய் பீம் காம்ரேட் : நாளை திரையிடப்படுகிறது

0 comments
புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநரான ஆனந்த் பட்வர்தனின் புதிய திரைப்படம், Jai Bhim Comrade நாளை திரையிடப்படுகிறது. இது அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அல்ல. தலித் மக்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றியது. குறிப்பாக, 1997ல் மும்பையில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட காவல்துறை துப்பாக்கிச் சூடு பற்றியது. இதைக் கண்டித்து விலாஸ் கோக்ரே என்னும் பாடகர் தற்கொலை செய்துகொண்டார்.


தலித் மக்கள் எப்படி இசையைத் தங்களுடைய ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படம் அடிக்கோட்டிட்டு காட்டுகிறது. படத்தை எடுத்து முடிக்க ஆனந்த் பட்வர்த்தனுக்கு 14 ஆண்டுகள் பிடித்தன. 


திரைப்படம் : JAI BHIM COMRADE, மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது.


இடம் : பாலமந்திர் ஜெர்மன் ஹால், பிரகாசம் சாலை, அபிபுல்லா சாலை நடிகர் சங்கம் அருகில், ஜி.என். செட்டி சாலை அருகில். தி. நகர்


தேதி, நேரம்: ஜனவரி 20, மாலை 5 மணிக்கு


மேலும் அறிய


Inheriting injustice : A chilling film on India's Dalits
Anand Patwardhan : Wikipedia
சென்னையில் ஆனந்த் பட்வர்தன்


திரையிடலுக்குப் பிறகு ஆனந்த் பட்வர்தனுடன் உரையாடலாம்.


அனைவரும் வருக!