October 26, 2009

திக்கற்ற இரு குழந்தைகள்

திக்கற்ற இரு குழந்தைகள், பண்டித எஸ்.எம். நடேச சாஸ்திரி, மலிவுப் பதிப்பு, ஒரு ரூபாய், ராம்நாத் பப்ளிகேஷன்ஸ், சென்னை 2. என் தந்தை எழுதிய புத்தகம், படித்துப் பாருங்கள் என்று ஒரு பிரதியை (அவரிடம் எஞ்சியிருந்த ஒரே பிரதி) கொண்டு வந்து கொடுத்தார் ரங்கநாதன். வானிலை ஆராய்ச்சியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெங்களூருவில் வசிக்கிறார். இரு மாதங்களுக்கு முன் அவரைச் சந்தித்து உரையாடினேன். வானிலை தொடர்பாக ராமநாதன் எழுதிய அறிமுகப் புத்தகம் அறிவியல் வெளியீடாக வெளிவந்துள்ளது.

1-2-1958ல் வெளிவந்த திக்கற்ற இரு குழந்தைகள் நூலிருந்து ஒரு பகுதி.

பினாகபாணி:
எனக்குத்தான் ஏதோ சிறிது தலைவலி. நீங்கள் ஏன் காலஷேபத்துக்கு போகவில்லை?

ராதை:
நான் உங்களிடம் உண்மையான காரணத்தைச் சொல்லட்டுமா?

பினாகபாணி:
என்ன ஆஷேபம்?

ராதை:
சொல்வதா வேண்டாவா என்று நிதானிக்கலானேன்.

பினாகபாணி:
என்மேல் ஓர்விதச் சந்தேகமும் வேண்டாம். உண்மையான காரணத்தைச் சொல்லலாம்.

ராதை:
அமிருதவல்லி என்னை அக்காலஷேபத்துக்கு அழைக்கவில்லை.

பினாகபாணி:
அழைக்கவில்லையா?

ராதை:
ஆனால், நான் அவர்கள் என்னை அழைத்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கக்கூடாதுதான். என்னை அப்படி அழைக்கவேண்டிய பாத்தியமொன்றுமில்லை. ஏதோ இத்தனை போர்கள் போகையில் நான் மட்டில் அழைக்கப்படாமல் நிறுத்தப்பட்டேனே என்பதுதான் என்னைப் பாதிக்கிறது.

0

இயற்கை வருணனைகள், சூழல் விவரிப்புகள் தனியாகவும், உரையாடல்கள் தனியாக நாடக பாணியிலும் இடம்பெற்றிருக்கின்றன. பக்கத்துக்குப் பக்கம், துன்பங்கள், வெடித்து கிளம்பும் அழுகைகள், வேதனைகள்.

முதல் பக்கத்தில் ஆசிரியர் பற்றி ஒரு குறிப்பு.

1906 ஏப்ரல் 11 இரவு கோயிலுக்குப் போனைவர் திரும்பி வருகையில் மிரண்டோடி வந்த குதிரை தாக்கி, கீழே விழுந்து அடிபட்டு அதே காரணமாக மறுநாள் காலை உயிர் நீத்தார். இவர் எழுதிய வேறு நூல்கள், 'கோமளம் குமரியானது', 'மாமி கொலுவிருக்கை', 'தலையணை மந்திரோபதேசம்' முதலியன.

அதே புத்தகத்தில், கமலாம்பாள் சரித்திரம் குறித்து தி ஹிந்து வெளியிட்டுள்ள blurb இடம்பெற்றிருக்கிறது.

'நமது சமூகப்பழக்க வழக்கங்கள், நம்மவர்களின் வாழ்க்கை முறைகளை இப்புஸ்தகத்தில் விவரித்திருப்பது போல வேறு எந்தப் புஸ்தகத்திலும் காண்பதரிது.'

திக்கற்ற குழந்தைகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, வானிலை புத்தகத்தை மட்டும் பெற்றுக்கொண்டேன்.

6 comments:

ungalrasigan.blogspot.com said...

இன்ட்ரெஸ்ட்டிங்! அந்தக் காலத்துத் தமிழ் நடையே நடை! ஆமாம், வானிலை என்பது என்ன மாதிரியான புத்தகம்? தலைப்புக்கேற்ப வானிலை பற்றிப் பேசும் புத்தகமா என அறிய விரும்புகிறேன்.

மருதன் said...

ஆம் ரவிபிரகாஷ். அது வானியல் அறிவியல் தொடர்பான புத்தகம். ஆங்கிலத்தில் ரங்கநாதன் எழுதியதை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.

ஹரன்பிரசன்னா said...

தலையணை மந்திராபதேசம் தமிழினி வெளியிட்டிருக்கிறது. அக்காலத்து கடும் தமிழ்நடையிலிருந்து விலகி, எளிமையான அக்காலத்து நடையை அதில் பார்க்கலாம். அனைத்து பாகங்களும் மனைவி கணவனைச் சொல்லும் வசவுதான் தலையணை மந்திராபதேசம்.

மருதன் said...

// தலையணை மந்திராபதேசம் தமிழினி வெளியிட்டிருக்கிறது. //

நன்றி ஹரன். தன் தந்தையின் நூல்கள் எதுவும் தற்போது அச்சில் இல்லை என்று சொல்லி ரங்கநாதன் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். தமிழினி விஷயத்தைச் சொன்னால் மகிழ்ச்சியடைவார்.

Anonymous said...

தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்

மருதன் said...

vrinternationalists : நன்றி. உங்களுக்கும் தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துகள்.