April 22, 2010

சினிமாவை நேசிக்க முடியுமா?

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பேல பெலாஸ் என்னும் மார்க்சிய சிந்தனையாளர் 1946ம் ஆண்டு, பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். சினிமா கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவானதையொட்டி பொன்விழா ஒன்று நடத்தப்படவேண்டும் என்பது இவர் ஆதங்கம். ஆனால், சம்பந்தப்பட்ட அந்தப் பேராசிரியருக்கு சினிமா மீது பெரிய மரியாதை இல்லை. கவிதை, கதை, ஓவியம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் அங்கீகாரத்தை சினிமாவுக்கு அளிக்க அவர் தயாராக இல்லை. சினிமா மக்களுக்கான ஒரு கலை வடிவம் அல்ல என்று அந்தப் பேராசிரியர் கருதியி்ருக்கிறார். இந்த எண்ணம் தவறானது என்பதை சுட்டிக்காட்ட பேல பெலாஸ் ஒரு நீண்ட கடிதத்தை எழுதி அனுப்பினார்.

'சினிமா மக்கள் கலையாக உள்ளது. காரணம் மக்கள் அதை பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. மாறாக, துரதிருஷ்டவசமாக மக்களை அது பயன்படுத்திக் கொள்கிறது. மக்களின் மனோநிலையை, கருத்துகளை சினிமா உருவாக்குகிறது. சினிமா குறித்த தேர்ந்த ரசனை மக்களுக்கு இல்லை. அது அவர்களுக்கு தரப்படவில்லை. சினிமா பற்றிய அறிவு, ரசனை அவர்களுக்கு நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சினிமா சக்தியின் முன் அவர்கள் செயலிழந்து நிற்கிறார்கள்.'

எம். சிவகுமார் எழுதிய 'சினிமா ஓர் அற்புத மொழி' என்னும் புத்தகத்தின் முகப்பில் இந்தக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. (சவுத் விஷன், முதல் பதிப்பு டிசம்பர் 2003, விலை ரூ.55, மக்கள் பதிப்பு, ரூ.25). எம். சிவகுமார் எழுதிய இந்தக் கட்டுரையிலும் பேல பெலாஸின் மேற்கண்ட கடிதம் இடம்பெற்றுள்ளது.

மௌனப் படம் தொடங்கி இன்று வரையிலான சினிமாவின் வளர்ச்சியை சுருக்கமாக விவரிக்கிறது 'சினிமா ஓர் அற்புத மொழி'. சினிமாவின் பங்களிப்பு, அடிப்படைத் தொழில்நுட்பம், திரைக்கதை, படத்தொகுப்பு, அரசியல், அழகியல் என்று பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது இந்நூல்.

ஓவியம், மொழி, இசை ஆகிய வடிவங்கள் எப்போது எங்கே தோன்றின என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாது. நாம் வாழும் காலத்தில் தோன்றி, வளர்ந்து, செழிப்புற்ற ஒரே கலை வடிவம் சினிமாதான் என்கிறார் பேல பெலாஸ். மற்ற கலை வடிவங்களுக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை (அல்லது அதைவிட கூடுதலாக) சினிமாவுக்குக் கொடுக்கவேண்டும் என்கிறார் இவர்.

இவர் எதிர்பார்த்ததைவிடவும் பல மடங்கு கூடுதல் முக்கியத்துவத்தை சினிமா இன்று பெற்றுள்ளது. பார்த்தோம், ரசித்தோம், வந்தோம் என்பதோடு சினிமாவின் தாக்கம் முடிந்துவிடுவதில்லை. நம் விருப்பு, வெறுப்புகளை; நடை, உடை, பாவனைகளை; சிந்திக்கும், செயல்படும், புரிந்துகொள்ளும் முறையை தீர்மானிக்கும் சக்தியாக சினிமா திகழ்கிறது. சினிமாவுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சிக்கும் இது பொருந்தும்.

இந்த காட்சி ஊடகங்களால் நாம் அடைந்த நன்மை என்ன? விளம்பரப் படங்கள் குறித்து நோம் சாம்ஸ்கியின் கூற்று இது. 'விளம்பரப் படங்கள், அவை வியாபாரம் செய்யும் பொருட்களை விற்பதில்லை. மாறாக, அப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அப்படங்களைப் பார்ப்பவர்களை விற்கிறது. '

புத்தகத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பு இது. பிரபல ஜெர்மன் இயக்குநர் ஒருவர் Circle of Deceit என்னும் படத்தை எடுத்தார். இப்படம் பாலஸ்தீனப் போரை பின்னணியாகக் கொண்டது. இப்படத்துக்கு உண்மையான ராணுவ வீரர்கள் துணை நடிகர்களாக பயன்படுத்தப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட காட்சியின் போது அந்த துணை நடிகர்கள் (ராணுவ வீரர்கள்) இயக்குநரிடம் சொன்னார்கள். 'வேண்டுமானால் ஜன்னல் வழியாக மறைந்திருந்து தெருவில் செல்வோர் யாரையாவது உண்மையிலேயே சுடுகிறோம். நீங்கள் படம் எடுத்துக்கொள்ளுங்கள்.'

சினிமாவை நேசித்த அந்த ஹங்கேரிய சிந்தனையாளர் இன்று உயிருடன் இருந்திருந்தால், இன்றைக்கு வெளிவரும் சினிமாவைப் பார்த்திருந்தால் எப்படிப்பட்ட கடிதத்தை எழுதுவார்?

5 comments:

krishnakrishna said...

நல்ல பதிவு

krishnakrishna said...

நல்ல பதிவு

Anonymous said...
This comment has been removed by the author.
Dinesh Ramakrishnan said...

Nice Post.Cinema indeed is a powerful media. Problem is with the people handling it.

Anonymous said...

watch last tango in paris starring marlon brando...