December 29, 2008

ஒரு சிறையின் டைரி

அவர் பெயர் நூர். ஆப்கனிஸ்தான் வாசி. நண்பர்களுடன் சேர்ந்து பீடி புகைத்துக்கொண்டே அரசியல் பேசிக்கொண்டிருந்தார். கும்பலாக வந்தார்கள். பிடித்து கீழே தள்ளி நாலு சாத்து சாத்தினார்கள். எட்டி உதைத்தார்கள். அப்படியே வாரி ஜீப்பில் போட்டு கொண்டு போய் உள்ளே தள்ளினார்கள். விசாரணை தொடங்கியது. உண்மையைச் சொல் துப்பாக்கிகளை எங்கே வைத்திருக்கிறாய் என்றான் ஒருவன். எந்தத் துப்பாக்கியை என்றார் நூர். பளாரென்று ஒரு அறை விழுந்தது. நான்கு பேர் நூரின் மீது ஏறி நின்று மிதித்தார்கள். அவர் உடைகளைக் களைந்தார்கள். ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஏவிவிடப்பட்டது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நூர் அலறியடித்துக் கொண்டு அத்தனை 'உண்மைகளையும்' கக்கிவிட்டார்.

ஆம், தாலிபன்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறேன். அவர்களுக்கு டிபன், காபி வாங்கித் தந்திருக்கிறேன். ஆயுதங்கள் கடத்திக்கொடுத்திருக்கிறேன். இன்னும் நான்கு போட்டவுடன் அவர் தன் வாக்குமூலத்தை நீட்டித்துக்கொண்டார். அல் காயிதாவுக்கு இன்ஃபார்மராக இருந்திருக்கிறேன். ஸ்பெயின் குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். அமெரிக்கர்கள் எனக்கு எதிரிகள். அமெரிக்கர்களுக்கு எதிராக மாபெரும் சதிவேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். வேறு என்னென்ன ஒப்புக்கொள்ள வேண்டுமோ சொல்லுங்கள், எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன்.

அமெரிக்கா நடத்தி வரும் சிறைச்சாலைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது க்யூபாவில் உள்ள குவாந்தணாமோ பே. ஈராக் அபு காரிப் நினைவிருக்கிறது அல்லவா? அதையே விஞ்சிவிடும் அளவுக்கு பல நவீன ரக சித்திரவதைகளை அமெரிக்கா தனது கைதிகள் மீது தொடர்ந்து இங்கே பிரயோகித்து வருகிறது.

சாம்பிள் வேண்டுமா? ஒரு நாற்காலியில் உட்கார வைப்பார்கள். கண்கள் செருகி தலை சாயும்வரை காத்திருப்பார்கள். பிறகு பளீரென்று கன்னத்தில் ஒரு அறை விழும். அதிர்ந்து போய் நிமிர்ந்து உட்காரும் வரை காத்திருப்பார்கள். சிறிது நேரம் ஒன்றும் செய்ய மாட்டார்கள். மீண்டும் அசதியுடன் கண்களை மூடும் போது, துப்பாக்கிக் கட்டையால் மண்டையில் இடிப்பார்கள். தொடர்ந்து பல மாதங்கள் தூங்க விடாமல் இப்படியே அலைக்கழிக்கப்பார்கள். அல்லது அசந்து தூங்கும்போது எட்டி உதைத்து எழுப்பி, இன்னொரு செல்லுக்கு அழைத்துச்சென்று உட்காரவைப்பார்கள். இங்கேயாவது தூங்கலாம் என்று கண்களை மூடும்போது, உதைத்து எழுப்பி பழைய செல்லுக்குக் கூட்டிப்போவார்கள்.

ஒரு ஸ்டூலின் முனையில் தொடர்ந்து 15 மணி நேரம் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். தலையை சாய்த்தாலோ, உடல் லேசாக நடுங்கினாலோ தீர்ந்தது கதை. ஐந்து, ஆறு பேர் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் மிருகத்தமனாகத் தாக்குவார்கள். பைத்தியம் பிடித்துவிடும். அல்லது செத்துவிடலாம் என்று தோன்றும்.

விடமாட்டார்கள். நாள் கணக்கில், வாரக் கணக்கில் பட்டினி போடுவார்கள். திடீரென்று, ஒரு நாள் ரொட்டித் துண்டை வீசி எறிவார்கள். நாய்களுக்கு வீசுவதைப் போல. பாய்ந்து வந்து ரொட்டியை பிடுங்கும்போது, குச்சியால் தட்டிவிட்டு கத்துவார்கள். 'உனக்கும் அல் காயிதாவுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா?' 'ஆமாம், ஆமாம், ஆமாம்' என்று கத்தலாம் போல் தோன்றும்.

தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து தண்ணீரில் மூழ்கடிப்பார்கள். மூச்சு திணறும்போது வெளியில் இழத்து, ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் மீண்டும் உள்ளே தள்ளி அமுக்குவார்கள். நடு இரவில் எழுப்பி பனியில் நிற்க வைப்பார்கள். தொடை நடுங்க விரைப்பாக நின்றுகொண்டிருக்கும்போது, குளிர்ந்த நீரை மேலே ஊற்றுவார்கள்.

மேற்படி சமாச்சாரங்கள், சாம்பிள்கள் மட்டுமே. புதிது புதிதாகச் சித்திரவதை உத்திகள் தொடர்ந்து அங்கே உற்பத்தியாகிக்கொண்டிருக்கின்றன. மனநோய் முற்றிப்போகும் வரை சித்ரவதைகள் தொடரும். 'உண்மையை ஒப்புக்கிறேன். நான்தான் ஒசாமா பின் லேடன்.' என்று அடிவயிற்றிலிருந்து பேயாகக் கத்தும் வரை ஓயமாட்டார்கள். ஒருவேளை நான்தான் பின்லேடனோ என்று அடைபட்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மெய்யாகவே குழப்பம் வந்துவிடும்.

நானூறு மில்லியன் டாலர் செலவு செய்து குவந்தணாமோ தளத்தை உருவாக்கியிருக்கிறது அமெரிக்கா. 2002ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. இங்கிருக்கும் கூண்டுகளை கேம்ப் எக்ஸ்ரே என்று அழைக்கிறார்கள். கைதிகளுக்கு ஆரஞ்சு நிற ஆடைகள் வழங்கப்படுகின்றன. விசாரிக்கும்போது முகத்தையும் மூடிவிடுவார்கள்.
உலகின் மிக அராஜகமான சிறைச்சாலை இதுதான் என்கின்றன மனித உரிமை அமைப்புகள்.

நாங்களா? கொடுமையா? இங்கேயா? சிறை நிர்வாகிகள் மறுக்கிறார்கள். அதை துன்புறுத்துவது என்று சொல்லமுடியாது. விசாரிக்கிறோம். அவ்வளவுதான். இரும்பு இதயம் கொண்ட தீவிரவாதிகளிடம் மெதுவார்த்தைகள் பேசமுடியாது அல்லவா? ஆகவே சில சமயங்களில், சற்றே எல்லை மீறவேண்டியிருக்கிறது. மற்றபடி, பீச் ரிசார்ட் போலதான் இந்தக் கூடத்தை வடிவமைத்திருக்கிறோம். அவ்வப்போது டிவிடியில் படம் போட்டுக்காட்டுகிறோம். கூடைப்பந்து விளையாடுவதற்கும்கூட அனுமதி வழங்கப்படுகிறது. இங்கே இருப்பதற்கு அவர்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

கேம்ப் 7 என்று ஒரு பிரிவு. இங்கே அதிபயங்கர தீவிரவாதிகள் என்று கருதப்படுபவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை இங்கேதான் வைத்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே ஒருவருக்கும் அனுமதி இல்லை. கேம்ப் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று பிரிவுகளில்தான் பெரும்பாலான பிற கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 250 பேர் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவ்வப்போது, கைதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். கேம்ப் நான்கில் இருந்து கேம்ப் ஐந்துக்கு. ஐந்தில் இருந்து ஆறுக்கு. இப்படியாக. குற்றவாளிகள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்றவாறு இந்த இடமாற்றம் அமைகிறது.

நிறைய புகார்கள் வருகிறதே, எதற்கும் பரிசோதனை செய்து பார்ப்போம் என்று எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சிலர் குவந்தணாமோ சிறைச்சாலையை தரிசித்திருக்கிறார்கள். இன்முகத்துடன் அவர்களை வரவேற்று சுற்றிக்காட்டியிருக்கிறார்கள் சிறை நிர்வாகிகள். டிவிடி இருந்தது. கூடைப்பந்து மைதானம் இருந்தது. கைதிகள் வாசிப்பதற்காக ஒரு அலமாரியில் செய்தித்தாள்கள் சீராக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட ஒரு பகுதியை சுற்றிப்பார்க்க மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மிகவும் வற்புறுத்தியபோது, தயங்கித்தயங்கி திறந்து காட்டியிருக்கிறார்கள். உள்ளே சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் அதிர்ந்துவிட்டார்கள் எஃப்.பி.ஐ. அதிகாரிகள். இத்தனை அநாகரீகமாக, இத்தனை பயங்கரமாக எந்த கைதிகளும் இதுவரை நடத்தப்பட்டதில்லை. குறிப்பாக, பெண் காவலர்கள் ஆண் கைதிகளை விசாரிக்கும் முறை அவர்களை அருவருப்படையச் செய்திருக்கிறது. இந்த விஷயங்கள் வெளியில் தெரிந்தால் தேசத்தின் மானம் போய்விடும் என்று ரகசியமாக மேலிடத்துக்கு மட்டும் அறிக்கை சமர்பித்திருக்கிறார்கள். எங்கோ லீக் ஆகி, எப்படியோ இந்த விஷயம் மே 2005ல் வெளிவந்துவிட்டது.

ஜூலை 2005ல் ராணுவ மேஜர் ஜெனரல் ஜியாஃப்ரி மில்லர் என்பவர் பற்றி ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. முகமது அல் கஹ்தானி என்னும் கைதியை இவர் நடத்திய விதம் சரியில்லை. பெண்கள் அணியும் உடைகளை எடுத்து வீசி அணியச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அந்த உடைகளை அணிந்துகொண்டு சிறையை வலம் வரச் செய்து அவமானப்படுத்தியிருக்கிறார். இன்னொரு கைதியையும் இவரையும் ஒன்றாக இணைத்து, நீங்கள் இருவரும் இனி காதலர்கள், எங்கே டூயட் ஆடுங்கள் பார்ப்போம் என்று நாற்காலி போட்டு உட்கார்ந்து இருவரையும் ஆட வைத்து ரசித்து மகிழ்ந்திருக்கிறார்.

எண்ணற்ற குற்றச்சாட்டுகள். கட்டுக்கட்டாகப் புகார்கள். மனித உரிமை காவலர்களின் தொடர் போராட்டம். அனைத்தையும் மீறி இந்த சிறை இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒபாமா அமெரிக்காவுக்கு அளித்திருக்கும் நீண்ட வாக்குறுதி பட்டியலில் குவந்தணாமோ பே சிறை இடம்பெற்றிருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் இந்த சிறைச்சாலை ஒரு மோசமான அத்தியாயம். உலகம் எங்கிலும் இருந்து பெரும் எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டிருப்பதை நான் அறிவேன். நான் ஆட்சிக்கு வந்தால், உடனடியாக, இந்த சிறைச்சாலையை இழுத்து மூடுவேன்.

ஆனால் இது சாத்தியமில்லை என்கிறார்கள் சிறை அதிகாரிகள். சொல்லவேண்டுமே என்பதற்காகச் சொல்லியிருப்பார். ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் இதை மூடமுடியாது. அப்படியே மூடினாலும் வேறு எங்காவது கிளையைத் திறந்துவைத்துவிட்டுதான் இதை மூடமுடியும். இது ஒபாமாவுக்கும் தெரியும்.

(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)

No comments: