November 26, 2009

மாவீரர் தினம் -- என்ன நடக்கப்போகிறது?

எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது, எப்படி என்னும் விவரங்கள் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து சமீபத்தில் (நவம்பர் 17) வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இது.

'அன்பார்ந்த தமிழ் ஈழ மக்களுக்கும், புலம் பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கும், கடந்த 18-5-2009 அன்று தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரிய பின்னடைவை தொடர்ந்து நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் மீண்டும் கட்டியமைத்து வருகிறோம்.

இதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசு துணை குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது போன்ற பிரசார போரை கடந்த 30 ஆண்டு பேராட்ட வரலாற்றில் இலங்கை அரசு பல தடவை நிகழ்த்தியுள்ளது. இதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே இவ்வாறான போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதே வேளையில் எமது விடுதலை போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றி கொள்கை விளக்க உரை வழக்கம் போல எதிர்வரும் மாவீரர் நாள் அன்று நிகழ்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.'

புலிகள் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், சர்வதேச ஊடகங்கள், இலங்கை முள்கம்பிகளில் சிக்கியிருக்கும் அகதிகள், இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் என்று அனைவரது எதிர்பார்ப்புகளையும் தூண்டிவிட்டிருக்கிறது இந்த அறிக்கை. என்ன ஆகப்போகிது நவம்பர் 27 அன்று? யார் வந்து உரை நிகழ்த்தப்போகிறார்கள்? பிரபாகரனா? அவர் உயிருடன் இருக்கிறாரா? ஆம் எனில், தோன்றுவாரா? அடுத்தக்கட்ட திட்டத்தை அறிவிப்பாரா? நம்பிக்கை அளிப்பாரா? அனைத்து சந்தேகங்களும், குழப்பங்களும், அச்சங்களும் நவம்பர் 27 அன்று விலகும் என்று துடிதுடிப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.

நவம்பர் 27 அன்று ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் வாரத்தின் இறுதி நாள் அன்று, பிரபாகரன் மாவீரர் தின உரை நிகழ்த்துவது வழக்கம். கடந்த ஆண்டு, கடுமையான போர்ச்சூழல் நிலவியபோதும், பிரபாரகன் உரை நிகழ்த்தினார். இந்த முறை அதைவிடக் கடுமையான சூழல். வருவாரா வரமாட்டாரா என்பது மட்டுமல்ல கேள்வி. இருக்கிறாரா இல்லையா என்பதும்தான்.

அந்த சந்தேகத்துக்கே இடமில்லை, பிரபாகரன் பாதுகாப்பான ஒரு மறைவிடத்தில் பத்திரமாக இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் சொல்லிவருகிறர்கள் புலிகளோடு தொடர்பு கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அபிமானிகளும்கூட. சற்று முன்னால்வரைகூட, பிரபாகரன் நிச்சயம் மாவீரர் தின உரையாற்றுவார் என்றுதான் இவர்கள் சொல்லி வந்தனர். இணையத்தளங்களில் இது பற்றிய பல அறிவிப்புகளும் வலம் வந்தன. பிரபாகரனுக்கு அவசரப்பட்டு வீரவணக்கம் செலுத்தவேண்டாம், கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், மாவீரர் தினம் நெருங்கி வரும் சூழலில், ஒரே வரியில் தங்கள் வாதத்தை முடித்துக்கொள்கிறார்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஆனால், மாவீரர் தின உரை நிகழ்த்தமாட்டார். அது அவருடைய பாதுகாப்புக்கு உகந்ததல்ல. எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்னும் கேள்விகளுக்கு பதிலில்லை.

பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு இவர்களிடம் வலுவான ஆதாரங்கள் என்று எதுவும் இல்லை. அல்லது, அளிக்கத் தயங்குகிறார்கள். அல்லது, மறுக்கிறார்கள். ஆனால், மாவீரர் உரையாற்ற மாட்டார் என்பதில் மட்டும் சர்வநிச்சயமாக இருக்கிறார்கள். புலிகள் தரப்பில் இவர்கள் யாருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

இரண்டாவது தரப்பினர், பிரபாகரனுக்குப் பதிலாக பொட்டு அம்மானை முன்னிறுத்துகிறார்கள். இலங்கை அரசு பொட்டு அம்மான் மரணத்தை இன்று வரை அதிகாரப்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது இந்த வாதத்துக்கு வலு சேர்க்கிறது. நிச்சயம் இறந்துவிட்டார் ஆனால் உடலைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிறார் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே. பிரபாகரனின் உடலையே நம்பாத புலி ஆதரவாளர்களால் இந்த வாதத்தை குறைந்தபட்சம் பரீசீலிக்கக்கூட முடியவில்லை. இந்நிலையில், பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெள்ளை ஆடை தரித்து அருகருகே அமர்ந்திருக்கும் படம் வெளிவந்து, பரவலாக ஊடகங்களில் பரப்பப்பட்டது கூடுதல் உத்வேகத்தை அளித்தது. எனவே, அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில் பொட்டு அம்மான் நவம்பர் 27 அன்று மாவீரர் உரை நிகழ்த்துவார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரும் உரை நிகழ்த்த மாட்டார்கள். ஆனால், உரை மட்டும் புலிகள் லெட்ட்ர் பேடில் வந்து சேரும் என்கிறார்கள் மூன்றாவது தரப்பினர். அந்த உரையில், இருவரும் உயிருடன் இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அந்த உரை விளக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். பெரும்பாலானாவர்கள், இந்த மூன்றாவது கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். மாவீரர் உரை நிகழ்த்தப்படும். புலிகளின் அடுத்தக்கட்ட திட்டம் வெளியிடப்படும். யார் மூலமாக என்பது முக்கியமல்ல.

கே.பி.யால் இப்போதைக்குத் தொடர்பு கொள்ளமுடியாது. உலகெங்குமுள்ள இலங்கைத் தமிழர்கள் நவம்பர் 27ஐ ஆர்வத்துடன் எதிர்நோக்குவார்கள். அவர்களை ஏமாற்றமுடியாது. இனி புலிகளால் காந்திய வழியில் மட்டும்தான் போராடமுடியும், புலிகளால் மட்டுமல்ல ஆயுதம் தாங்கிய எந்தவொரு அமைப்பாலும் இனி இலங்கையில் செயல்படமுடியாது என்று சர்வதேச ஊடகங்கள் எழுதியும் பேசியும் வருகின்றன. பிரபாகரன் உயிருடன் இருந்தாலும், இன்னொரு ஆயுத எழுச்சி இப்போதைக்குச் சாத்தியமில்லை என்றே அவர்கள் கருதுகிறார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இந்தப் போர் விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்திய சேதம் மிகக் கடுமையானது. இயக்கத்தின் எதிர்காலம் குறித்தும் தமிழர்களின் எதிர்காலம் குறித்தும் அவநம்பிக்கை அகலமாகவும் அழுத்தமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் மாவீரர் தினம் கூடுதல் முக்கியத்தும் பெறுகிறது.

இன்னொரு காரணமும் இருக்கிறது. இலங்கையில் இப்போது கடுமையான அதிகாரப்போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. புலிகள் அழித்தொழிப்புப் போர் மூலம் கிடைத்த வெற்றி யாருக்குப் போய் சேரவேண்டும் என்பதில் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. இலங்கை அதிகார அமைப்பு பிளவுப்பட்டு கிடக்கும் இந்த சந்தர்பத்தை புலிகள் தவறவிடக்கூடாது. தவறவிடவும் மாட்டார்கள்.

அதே சமயம், சில தீர்மானமான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் புலிகள் இருக்கிறார்கள். சுயவிமரிசனங்களும் மறுபரிசீலனைகளும் தேவைப்படும் சமயம் இது. நடந்து முடிந்த அத்தியாயங்களைப் புரட்டிப் பார்ப்பதற்கும், தவறுகளைக் கண்டுகொள்வதற்கும், புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கும், புதிய யுக்திகளை வடிவமைப்பதற்கும் நிச்சயம் அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும். இலங்கை குறித்து மட்டுமல்ல, இந்தியா குறித்தும் சர்வதேச நடுநிலைமையாளர்கள் குறித்தும் நடந்து முடிந்த போரில் அவர்கள்து பங்களிப்பு எத்தகையது என்பது குறித்தும் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியம். பிரபாகரன், பொட்டு அம்மான இருவரும் உயிருடன் இருந்தாலும், மாவீரன் தினம் அன்று இருவரும தோன்றமாட்டார்கள் என்று நம்பலாம்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த என் கட்டுரை)

November 16, 2009

நீ கொஞ்சம் நாறுகிறாய்...

ஞானக்கூத்தன் கவிதைகள். இரண்டு பக்கங்களில் இரு கவிதைகளை நவம்பர் மாத உயிர்மையில் வெளியிட்டிருந்தார்கள். ஒரு கவிதையின் பெயர், 'பாதி போர்த்திய கவிதைகள்'. இன்னொன்றின் பெயர், நீ கொஞ்சம் நாறுகிறாய். முதல் கவிதைக்கு, சோகமாக (அல்லது ஏக்கமாக அல்லது ஏகாந்தமாக) படுத்திருக்கும் ஒரு நாயின் படம் போட்டிருந்தார்கள். இரண்டாவது கவிதைக்கு உலக உருண்டையின் படம். அந்த உருண்டை, கடற்கரைக்கு மேலே சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தது. உருண்டைக்கு மேலே ஈட்டியின் முனை துருத்திக்கொண்டிருந்தது. அதாவது, உலகப் பந்தின் மையத்தில் யாரோ ஒருவர் நின்றுகொண்டு, மேல்நோக்கி ஈட்டியை செருகியிருக்கிறார்கள்.

முதல் கவிதையைப் படிக்கலாம் என்றால் தொடக்கத்திலேயே குழப்பம். கவிதையை ஏன் போர்த்தவேண்டும்? அதுவும் பாதி? மிச்சத்தைப் போர்த்தினால் என்ன ஆகும்? பாதி போர்த்துவதற்குப் பதில் சும்மாவே இருந்துவிடலாமே! இரண்டாவது கவிதையின் தலைப்பில் நாற்றம் இருந்தாலும், பொருள் சுத்தமாக இருந்தது. ஆனால், படம் புரியவில்லை.

எனில், எதைப் படிப்பது? புரியாத தலைப்பு கொண்ட கவிதையையா அல்லது புரியாத படம் கொண்ட கவிதையையா? நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, இரண்டாவது கவிதையைத் தேர்ந்தெடுத்தேன்.

நீ கொஞ்சம் நாறுகிறாய்...

'நீ கொஞ்சம் நாறுகியாய்' என்கிறாய்
'நீயும்தான்' என்கிறேன் நான்.

கடற்கரையில் புரள்கின்றன
அங்குபாஸ்தி நீளமும் இல்லாத
சின்னஞ்சிறு சங்குகள்
சங்குகள் நாறுகின்றன என்று
சொல்லிப்போகிறது காற்று.

நீண்ட நேரமாய்
வானில் உள்ளது ஒரு மேகம்.
மறக்க முடியாத வசைச் சொல்போல
மற்றும் ஒரு நாற்றத்தைப்போல.
ஆட்கள் வேலையில் இருக்கிறார்கள் என்னும்
அறிவிப்பைப் போன்றதல்லவா நாற்றம்?
நாற்றமே மண்ணின் அடையாளம் என்கிறது
யக்ஞோபவீதர்களின் வேதங்கள்.

புழுதி வெளிச்சம் மற்றும் நாற்றம்
இவற்றால் ஆனதன்றோ ஏழுலகம்
இருளோடு இருளாக
எதிர்வந்த நாற்றத்தை
என்ன செய்தாள் அகலிகை!
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது
உனது மெல்லிய நாற்றம்
உனது ஜன்மம் தெரிகிறது கண்ணே
நாறாத உலகும் உண்டோ
கொஞ்சம் நாறினால் என்ன, கண்ணே.

0

கவிதை இங்கே முடிகிறது.

இப்போது எதெல்லாம் நாறுகிறது, யாரெல்லாம் நாறுகிறார்கள் என்று பார்ப்போம். நீ, நான். பிறகு, அங்குபாஸ்தி நீளம் இல்லாத சங்குகள். பிறகு, மேகம். பிறகு, மண். பிறகு, ஏழுலகம். இப்படி எல்லாமே நாறும்போது, நாமும் ஏன் நாறக்கூடாது என்னும் கூற்றோடு கவிதை நிறைவடைகிறது.

இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, படத்தை இன்னொரு முறை நுணுக்கமாகப் பார்த்தேன். அந்த ஈட்டியின் நாறும் நுனியில், பல உயிர்கள் கதறியபடி துடித்துக்கொண்டிருந்தன.

November 5, 2009

நவமபர் புரட்சி தின வாழ்த்துகள்

முதல் காம்ரேட் நூலில் இருந்து சில பகுதிகள். அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துகள்.

0

தொழிலாளர்களிடம் நெருங்கி பழகினார் லெனின். அவர்களுடைய வாழ்க்கை முறையை, பின்புலத்தை, பொருளாதாரத் தேவைகளைக் கூர்மையாக ஆராய்ந்தார். காலம் காலமாக விளிம்பு நிலையிலேயே அவர்கள் தொங்கிக் கொண்டிருக்கும் அவலம் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்தார்.

பல தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டார் லெனின். அரசாங்க அதிகாரியைப் போல் புள்ளிவிவரங்கள் சேகரித்துக் கொண்டார். எந்தத் தொழிற்சாலை? எத்தனைப் பேர் வேலை செய்கிறார்கள்? ஆண்கள் எத்தனைப் பேர்? பெண்கள் எத்தனைப் பேர்? அவர்களுடைய ஊதியம் என்ன? ஆபத்தான சூழலில் வேலை செய்யும்படி அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? அத்தனை விபரங்களையும் குறித்து வைத்துக் கொண்டார்.

தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்றார். அவர்களுடன் சில நாள்கள் தங்கினார். குழந்தைகளை இழுத்து அருகில் வைத்துக் கொண்டு பேசினார். நீ ஏன் பள்ளிக்கு போவதில்லை? உனக்கு படிப்பதில் விருப்பம் இல்லையா? வேலைக்குப் போகும்படி உன்னை வீட்டில் நிர்பந்திக்கிறார்களா?

முன்னரே இயங்கிக் கொண்டிருந்த சில புரட்சிகர இயக்கங்களைச் சென்று சந்தித்தார்.

'தோழர்களே, இங்குள்ள தொழிலாளர்கள் நிலை மிகவும் மோசமாக இருக்கிறதே!என்ன செய்வதாக உத்தேசம்?'

'மார்க்ஸியம் சொல்லிக் கொடுக்கிறோம். கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எல்லாவற்றையும் சொல்லித் தருகிறோம். பிரசுரங்கள் விநியோகிக்கிறோம்.'

'இதையெல்லாம் செய்தால் சங்கடங்கள் விலகிவிடுமா என்ன?'

'என்னதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'

'எரிச்சல் வேண்டாம் தோழரே. மார்க்சியத்தை படிப்பது முதல் கட்டம். படித்த விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவது அடுத்த கட்டம். நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ளது.'

அவர்களுக்குப் புரியவில்லை. லெனின் புரிய வைத்தார். நாங்கள் மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்த பண்டிதர்கள் என்று பெருமையாக காலரை தூக்கி விட்டுக் கொண்டவர்களை முன் வரிசையில் உட்கார வைத்து அடிப்படை பாடங்கள் எடுத்தார். சில விஷயங்களை ஆணித்தரமாகத் தெளிவுப்படுத்தினார். தொழிலாளர்கள் மார்க்சியத்தை உள்வாங்க வேண்டும். அமைப்பு ரீதியாக அவர்கள் திரள வேண்டும். நடந்து கொண்டிருக்கும் பேராட்டம் அவர்களுக்காகத்தான் என்பதை உணர்த்தியாக வேண்டும். அவர்களை இணைத்துக்கொண்டு செயல்படவேண்டும். புரிந்ததா?

மார்க்சியத்தை ஒரு சித்தாந்தமாக, புத்தகத்தோடு தங்கிவிடும் ஒரு தத்துவமாக மட்டுமே பார்க்க பழகியிருந்த புரட்சிகர குழுக்கள் முதல் முறையாக அந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

மற்றொருபுறம், தொழிலாளர்களின் ஆதரவும் லெனினுக்குக் கிடைத்தது. காரணம், முதல் முறையாக, அவர்கள் வாழ்க்கையோடு தொடர்புடைய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளையும் அளித்தார் லெனின். தொழிலாளர்கள் உற்சாகமடைந்தனர். லெனின் கலந்து கொள்ளும் அத்தனைக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை லெனின். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவும் செய்தார். தொழிலாளர்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவராக லெனின் வளர ஆரம்பித்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

0

முதல் நாள். சுதந்தர சோவியத். அக்டோபர் 26-ம் தேதி. விவசாயிகள், தொழிலாளர்கள், புரட்சி வீரர்கள், கட்சி அங்கத்தினர் ஸ்மோல்னியில் கூடியிருந்தனர். அனைவரும் மேடையை உற்று பார்த்துக் கொண்டிருந்தனர். எங்கே அவர்?

கூடியிருந்தவர்களுக்கு அந்த இடம் போதவேயில்லை. அறை பிதுங்க பிதுங்க நின்று கொண்டிருந்தார்கள். நிற்பதற்கு இடம் இல்லாதவர்கள் ஜன்னல் வழியாக முண்டியத்து மேடையை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னமும் சிலர் தூண் விளிம்புகளில் ஏறி நின்று கொண்டிருந்தனர்.

உற்சாக மிகுதியால் சிலர் தலையில் அணிந்திருந்த தொப்பிகளை உயரே வீசிக் கொண்டிருந்தனர். எங்கும் உற்சாகக் கூச்சல்.

லெனின் மேடையில் தோன்றினார்.

கொண்டாட்டத்துக்கான சுவடே இல்லாமல் மிகச் சாதாரணமாக இருந்தது அவர் முகம். பார்வையால் விழுங்கி விடுவதைப் போல் மொத்த கூட்டத்தையும் ஒரு முறை பார்த்தார். பிறகு, கைகளை உயர்த்தினார்.

’இரண்டு ஆணைகளை இந்தச் சபையின் அங்கீகரத்துக்காக சமர்பிக்கிறேன்’.

அந்த அறை முழுவதும் எதிரொலித்தது அவர் குரல்.

முதல் ஆணை, சமாதனம் பற்றியது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது நம்முடைய போர் அல்ல. அதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தேவை போர் அல்ல. சமாதானம். பொருட்சேதத்தையும் உயிர் சேதத்தையும் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு இந்தச் சபையின் ஒப்புதலை வேண்டுகிறேன்.

இரண்டாவது, நிலம். நிலம் மீதான தனியுரிமை நீக்கப்படுகிறது. நிலப்பிரபுக்கள், அரச குடும்பங்கள், குருமார்கள் போன்றவர்களுக்குச் சொந்தமான நிலம் பறிமுதல் செய்யப்படும். சோவியத் சபையின் பராமரிப்பின் கீழ் அவை வந்து சேரும். பறிமுதல் செய்யப்பட்ட நிலத்துக்கு ஈட்டுத்தொகை தர இயலாது. ஏழைகளிடம் உள்ள நிலங்கள் அவர்களுக்கே சொந்தம்.

நன்றி.

அவ்வளவுதான். சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கிவிட்டார் லெனின்.

புதிய சோவியத் தேசம் மலர்ந்த முதல் நாளே இரண்டு அரசாணைகள். இரண்டுமே முக்கியமானவை. ரஷ்யர்களின் வாழ்கை மாற்றி அமைக்கக்கூடியவை. சந்தோஷம். மகிழ்ச்சி. ஆனால், கூடியிருந்தவர்களுக்குச் சில விஷயங்கள் புரியவில்லை. போல்ஷ்விக் கட்சி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. அரசாங்கமே அடியோடு மாறிவிட்டது. புதிய சோவியத் மலர்ந்திருக்கிறது. ஒரு சிறிய கொண்டாட்டம்? உற்சாகமாக சில வார்த்தைகள்? ம்ஹும். கேளிக்கை, கும்மாளம் வேண்டாம். குறைந்தது ஒரு வெற்றி புன்னகை? சரி அதுவும் வேண்டாம். கையசைவு? பெருமிதமாக ஒரு பார்வை. நாங்கள் வென்றுவிட்டோம் என்று ஒரே ஓர் அறிக்கை? ம்ஹும். எதுவுமே இல்லை. வந்தார். அரசாணைகளை வாசித்தார். நன்றி சொன்னார். போய்விட்டார். என்ன மனிதர் இவர்?

0

செஞ்சதுக்கம் , மாஸ்கோ. எப்போது போனாலும் அந்தக் கட்டடத்தின் வாசலில் மக்கள் எறும்புகளைப் போல் வரிசையாக நின்றுகொண்டிருப்பார்கள்.

நெருங்கிப் பார்த்தால் இரண்டு தனித்தனி வரிசைகள் இருப்பது தெரியும். ஒன்று ரஷ்யர்களுக்கு. இன்னொன்று அயல் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு. கொல்லும் பனிக்காலத்தில்கூட மக்கள் அமைதியாகவே நின்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளையும் கையோடு அழைத்து வருவார்கள். அவர்கள் காது வரை கம்பளியைச் சுற்றி.

சில சமயம் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அல்லது அதற்கு மேல்.

பழுப்பு நிற சீருடை அணிந்த பாதுகாவலர்கள் ஆங்காங்கே இருப்பார்கள். மெடல் டிடெக்டரால் உங்கள் உடலை மேய்வார்கள். பாக்கெட்டில் இருப்பதை துழாவுவார்கள். உடைமைகளை உள்ளே கொண்டு போக முடியாது. நீங்கள். நீங்கள் மட்டும்தான்.

தவிரவும், இரண்டு இரண்டு பேராகத்தான் உள்ளே நுழைய முடியும்.

அந்த அறையை மார்பிள் அறை என்று அழைக்கிறார்கள். வெள்ளையும் கருப்புமாக மார்பிள் பதிக்கப்பட்டிருக்கம். இடையே சிவப்புச் சதுரங்கள்.

அறைக்குள் நுழைந்துவிட்டால் சில நிமிடங்கள் எதுவும் தோன்றாது. வெறுமை மட்டுமே முழுக்க முழுக்க நிறைந்திருப்பதாக நீங்கள் நம்புவீர்கள். அதிக வெளிச்சம் இருக்காது. ஒருவரும் ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்கள் என்பதால் பரிபூரன அமைதி. அமைதி மட்டுமே.

அறைக்கு நடுவே நடந்து சென்றால் லெனின் படுத்திருப்பதைக் காணலாம். கறுப்பு சூட். கழுத்தில் டை. அருகில் செல்லலாம். ஓரளவுக்கு நெருக்கமாகவே.

லெனினின் கைகளில் தெரியும் பளபளப்பை பார்க்கும்போது படுத்திருப்பது பொம்மையோ என்று நினைக்கத் தோன்றும். ஆனால் முகத்தைப் பார்த்தால் அந்தச் சந்தேகம் வராது. வழக்கத்தை விட கூடுதல் பிங்க் நிறம். உயிர்ப்புடன் இருப்பது போன்ற உணர்வு.

அந்த உணர்வு கலைவதற்குள் வெளியேறிவிட வேண்டும். அல்லது நிர்பந்திக்கப்படுவீர்கள்.

சில விநாடிகள். மிஞ்சி மிஞ்சிப் போனால் சில நிமிடங்கள். அதற்கு மேல் நிற்க முடியாது. பின்னாலிருந்து மெலிதாக அழுத்துவார்கள்.

’தோழரே!’