February 26, 2009

சே குவேராவின் மோட்டார் சைக்கிள் பயணம்


ஜனவரி 1952-ல் உற்சாகத்துடன் தொடங்கியது அந்தப் பயணம். எட்டு மாதங்களில் ஐந்து நாடுகளைச் சுற்றிவருவதாகத் திட்டம். பெரிய முதுகுப்பை தயாராகிவிட்டது. உள்ளே ஏராளமான காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி துண்டுகள். ஆந்திய மலைப் பகுதிகளில் தொடங்கி சாண்டியாகோ வழியாக சிலி செல்வதாகத் திட்டம். மலை, ஏரி அத்தனையையும் மோட்டார் சைக்கிள் தாக்குபிடிக்கவேண்டும் என்பதற்காக எல்லா முன்னேற்பாடுகளும் தயாராக இருந்தன.

மலைப்பகுதியை நெருங்கும்போதே கோளாறுகள் தொடங்கிவிட்டன. சே குவேரா வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒரு வளைவில் சறுக்கி விழுந்தது. மிக மோசமான விபத்தாக இது அமைந்தது. உடன் வந்த நண்பர் ஆல்பர்ட்டோ அதிக காயமில்லாமல் தப்பிவிட்டார். சேயின் கால் சிலிண்டரின் கீழே சிக்கிவிட்டது. சிலிண்டர் ஏற்கனவே சூடாகிப்போயிருந்ததால் காலில் பலத்த புண்.

ஆசையாசையாகக் கட்டி அமைத்த மோட்டார் சைக்கிள் படுத்துக்கொண்டது. லாரியில் வைத்து எடுத்து வந்து பழுது பார்த்தனர். சில மணி நேரம் ஓடியது, பிறகு மீண்டும் சுருண்டுகொண்டது. இறுதியில், சாண்டியாகோவில் அதற்கு விடைகொடுத்தனர். மோட்டார் சைக்கிள் பயணம் என்று இந்தப் பயணம் பரவலாக அழைக்கப்பட்டாலும், உண்மையில் மோட்டார் சைக்கிளில் இவர்கள் அதிகம் பயனிக்கவே இல்லை என்பதுதான் நிஜம்.

கடற்கரையில் அமர்ந்து அலைகளை வேடிக்கைப் பார்த்தார் சே. மலைச் சரிவுகள் வழியாக நடந்துச் செல்ல முடிந்தது. அமேசான் நதியில் மிதந்துச் செல்ல முடிந்தது. டிட்காகா ஏரியில் நின்றபடி முழு சூரியனும் கடலில் மறைவதை கண்கள் விரிய பார்த்து ரசிக்க முடிந்தது. இடையிடையே சிறுசிறு வேலைகளை செய்தனர். சரக்குகளை ஏற்றி, இறக்கினர். மூட்டைச் சுமந்தனர். மாலுமிகளாக மாறினர். காவல் காத்தனர். மருத்துவம் பார்த்தனர். பேருந்துகளில் உதவி வேலைகள். பணம் கிடைத்தது. உற்சாகத்துடன் செலவழித்தனர்.

ஏப்ரல் மாதம் பெருவிலுள்ள மச்சு பிக்குவுக்கு வந்து சேர்ந்தனர். பூர்விக இந்தியர்கள் படும் பாட்டை நேரில் கண்டு கண் கலங்கினார். மச்சு பிக்குவின் வளத்தை சூறையாடிய அமெரிக்கர்களைக் கண்டு கொதித்தார்.

ஸான் பாப்லோ பகுதியிலிருந்த தொழுநோயாளிகளின் குடியிருப்புக்குச் சென்ற இருவரும், பதினைந்து நாள்களை அங்கே கழித்தனர். ஒரு பயணியாகவே சுற்றிக்கொண்டிருந்த சே, தொழுநோயாளிகளைக் கண்டதும் இதமான மருத்துவராக மாறிப்போனார். கைகளில் விரல் இல்லாமல் மொன்னையாக இருந்த ஒரு மனிதன், கைவிரல்களுக்குப் பதிலாகக் குச்சிகளை பயன்படுத்தி அக்கார்டியன் வாசித்ததைக் அவரால் மறக்கவே முடியவில்லை. சமூகம் தொழுநோயாளிகளை விலக்கி வைத்திருப்பது அவருக்கு வேதனையளித்தது.

அமேசான் நதியைக் கடக்கும்போது ஆஸ்த்மா சேவைக் கடுமையாகத் தாக்கியது. போதிய மருந்து இல்லாதததால் அவதிப்பட வேண்டியிருந்தது. கொதிக்க வைக்க நீர் கிடைக்காது. சகித்துக்கொண்டார்.

அமெரிக்காவுக்குச் செல்வதற்கு அனுமதி கிடைக்காததால் ஆல்பர்ட்டோ வெனிசூலாவிலேயே தங்கிவிட்டார். சே முயற்சியை கைவிடவில்லை. இறுதியாக பந்தயக் குதிரைகளை ஏற்றிச்செல்லும் விமானத்தில் இடம் கிடைத்தது. ஏறிக்கொண்டார். மியாமியில் ஒரு நாள் தங்கிவிட்டு, பிறகு காரகாஸுக்குத் திரும்பி அங்கிருந்து அர்ஜென்டினா திரும்புவதுதான் திட்டம்.

ஆனால் மியாமியில் இறங்கிய விமானத்தில் கோளாறு. அதைச் சரிப்பார்க்கும் வரை மியாமியிலேயே தங்கியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எஞ்சினைப் பழுதுபார்க்க அதிக நாள்கள் ஆகும் என்பதை உணர்ந்த சே மியாமியிலுள்ள ஒரு சிறிய விடுதியில் தங்கிக்கொண்டார். அமெரிக்காவின் அந்தச் சிறு பகுதியைச் சுற்றிச் சுற்றி வந்தார் சே. செப்டம்பர் 1952ல் விமானம் பழுது பார்க்கப்பட்டு அர்ஜென்டினா வந்து சேர்ந்தார்.

இந்தப் பயணம் மிகவும் விரிவான ஓர் அனுபவத்தை சேவுக்கு வழங்கியது. பல்வேறு விதமான மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக முக்கியமாக, லத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்த நேரடிப் பரிச்சயமும் கிடைத்தது.

The Motorcycle Diaries முதன் முறையாக க்யூபாவில் 1993ல் வெளிவந்தது. சேவின் இந்தத் தென் அமெரிக்கப் பயணத்தைப் பற்றி பின்னர் பல கட்டுக்கதைகள் கட்டப்பட்டன. சேவின் அரசியல் அறிவு முதிர்ச்சிப் பெற்றது இந்தப் பயணத்தில்தான் என்று பலர் வாதாடினார்கள். அதே போல், ஒரு புரட்சியாளராக சே பின்னால் மாறுவதற்கும் இந்தப் பயணம் அடித்தளம் அமைத்ததாகச் சொல்கிறார்கள். இவை உண்மைக்குப் புறம்பானவை. சே தன் கைப்பட எழுதிய சொந்தக் குறிப்புகளோடு இந்தக் கதைகள் பொருந்தவில்லை.

தென் அமெரிக்கப் பயணத்தின் போது சே குவேராவின்அரசியல் பார்வை அத்தனை வளமானதாக இல்லை. அதற்கு ஓர் உதாரணம், பொலிவியாவில் நடைபெற்ற விவசாயப் புரட்சியைப் பற்றி ஒற்றை வரிச் செய்தியைக் கூட சே பதிவு செய்யவில்லை. லத்தீன் அமெரிக்காவின் மிக முக்கியப் புரட்சி இது.

சே ஒரு பத்திரிக்கையாளர் கிடையாது. ஓர் அரசியல் விமர்சகரும் கிடையாது. சுதந்தரத்தையும் கேளிக்கையையும் நாடும் ஒரு மருத்துவ மாணவர் மட்டுமே. இந்த வகையில்தான் நாம் அவருடைய குறிப்புகளை அணுக வேண்டியிருக்கும். பின்னர், ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தபோதுதான் சேவின் அரசியல் பார்வை விசாலமடைந்தது. ஒரு புரட்சியாளகராக அவர் மாறியதும் அப்போதுதான்.

(கல்கியில் வெளிவந்த என் கட்டுரை)

8 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

ஜீவா said...

மருதன் எப்படியோ உங்களின் பிளாக்கை கண்டுபிடித்துவிட்டேன்

அறிவு சார்ந்த மனிதரிடன் என்னுடனான தொடர்பை துவங்குகிறேன்

தோழமையுடன்
ஜீவா

மருதன் said...

தங்கள் வருகைக்கு நன்றி ஜீவா. தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

Anonymous said...

ungal public postai naangal yengaludaiya nanbarkalukkum email seiyum vidhamaaga, settingil senru, genral tab ai click seithu,email option ai enable seiyungal...

மருதன் said...

நிகழ்

// ungal public postai naangal yengaludaiya nanbarkalukkum email seiyum vidhamaaga, settingil senru, genral tab ai click seithu,email option ai enable seiyungal...//

நீங்கள் சொன்ன மாற்றத்தை செய்துவிட்டேன். சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்

பிரபா said...

ungalin eluthukkal anaithume vazhnthu kaattiya manithargalai pattriyum....mattravargalai vazhala thoonduvathaagavum ullathu...

ungalin ezhuththu payanam thodarattum engalin rasippudan

பிரபா said...

ungalin eluthukkal anaithume vazhnthu kaattiya manithargalai pattriyum....mattravargalai vazhala thoonduvathaagavum ullathu...

ungalin ezhuththu payanam thodarattum engalin rasippudan

பிரபா said...

ungalin eluthukkal anaithume vazhnthu kaattiya manithargalai pattriyum....mattravargalai vazhala thoonduvathaagavum ullathu...

ungalin ezhuththu payanam thodarattum engalin rasippudan