May 28, 2009

ஹிட்லரும் இலங்கையும்

’எனக்கு மட்டும் அதிகாரம் கிடைத்துவிட்டால் நான் செய்யும் முதல் வேலை யூத இன ஒழிப்பாக இருக்கும். மூனிச்சில் வரிசை வரிசையாக தூக்குமேடைகள் அமைப்பேன். எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு. பிறகு, யூதர்கள் தூக்கில் போடப்படுவார்கள். துர்நாற்றம் வரும் வரை உடல் அங்கேயே தொங்கிக்கொண்டிருக்கவேண்டும். பிறகு கயிற்றில் இருந்து விடுவித்து, அடுத்த குழுவை தூக்கில் மாட்டுவோம். இப்படியே வரிசையாக தூக்கு தண்டனைகள் விதிக்கப்படும். மூனிச்சில் கடைசி யூதன் இருக்கும்வரை இது தொடரும். பிற நகரங்களும் இதை நடைமுறைப்படுத்தும். ஜெர்மனியில் இனி யூதர்களே கிடையாது என்னும் நிலை ஏற்படும்வரை இது தொடரும்.’

- ஹிட்லர், 1922ம் ஆண்டு

அதிகாரம் கையில் கிடைக்கும் முன்னரே ஹிட்லர் யூதர்களுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். ஜெர்மனியில் அதிகம் படித்தவர்கள் யார்? அரசாங்க அலுவலகங்களில் உயர் பதவிகளில் யார் நிறைந்திருக்கிறார்கள்? மருத்துவர்களாக இருப்பவர்கள் யார்? செல்வந்தர்கள் யார் யார்? இந்த நகரம் மட்டுமல்ல. எந்தவொரு நகரத்தையும் நீ சுற்றிவரலாம். ஜெர்மானியர்கள் யாராவது ஏதாவது சிறுதொழில் தொடங்க வேண்டுமானால் கடனுக்கு யாரிடம் கை நீட்டுகிறார்கள்? ஆஸ்திரிய மக்களின் அவல நிலை யாரால் ஏற்பட்டது? ஜெர்மானியர்களின் குழந்தைகள் உணவின்றி தவித்துக்கொண்டிருக்கும்போது யாருடைய குழந்தைகள் போஷாக்காக வளர்ந்துகொண்டிருக்கின்றன?

யூதர்கள். நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடும் நண்பரே. ஆனால் உண்மை. நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. எல்லாவற்றையும் என் கண்களால் அசலாகப் பார்த்தபிறகே நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒரே வழிதான். அகண்ட ஜெர்மனி உருவாகவேண்டும். ஜெர்மானிய மக்கள் நலமுடன் வளமுடன் வாழவேண்டும். யூதர்களை அழித்தொழிக்காமல் இதை அடையமுடியாது.

இனவொழிப்பு ஆரம்பமானது. யூதர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவோ ஆட்சேபிக்கவோ அங்கே யாருமில்லை. எந்தவொரு அரசியல் தலைவரும், எந்தவொரு சமூக அமைப்பும், எந்தவொரு மதகுருவும் யூதர்களைத் தங்களுடன் இணைத்துப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்புகளே இல்லாமல் நடத்தப்பட்ட மிகப்பெரிய இனவொழிப்பு அது.

அனாகாலிக தர்மபாலா 1900ம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவில் இருந்து ஒரு பகுதி கீழே.

’நாட்டின் செல்வ வளத்தை அந்நியர்கள் எடுத்துச் செல்லும்போது எமது மண்ணின் மைந்தர்களுக்கு போக்கிடம் எங்கே? இந்நாட்டில் வந்து குடியேறியோர் திரும்பிச் செல்வதற்கு அவர்களுக்கு நாடு உண்டு. ஆனால், சிங்களவர் செல்வதற்கு எந்த நாடும் இல்லை. அந்நியர்கள் குதூகலிக்கும்போது மண்ணின் மைந்தர்கள் இழப்புக்கு ஆளாவது என்ன நியாயம்? இங்கிலாந்துக்கு இரவலர் வருவதைத் தடுப்பதற்கு அந்நியர் தடைச்சட்டம் ஒன்று அந்நாட்டில் உள்ளது. ஆனால், உதவியற்ற, அப்பாவிச் சிங்களக் கிராமவாசி அவரது மூதாதையரது நாட்டின் செல்வத்தைத் திருடும் அந்நிய மோசடியாளருக்கு இரையாகின்றான்.’

(இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள், குமாரி ஜெயவர்த்தனா, பக்கம் 19)

ஹிட்லர் முன்வைத்த அதே முழக்கம். ஹிட்லர் கக்கிய அதே இனவெறுப்பு. ஹிட்லர் சுட்டிக்காட்டிய அதே காரணங்கள். யூதர்கள் இருக்கும்வரை ஜெர்மனி வளராது என்றார் ஹிட்லர். தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இருக்கும்வரை இலங்கை விளங்காது என்றார் தர்மபாலா. ஜெர்மனிக்கு ஒரு ஹிட்லர் போதுமானதாக இருந்தது. இலங்கைக்குப் பல ஹிட்லர்கள். தர்மபாலா தொடங்கி ராஜபக்ஷே வரை.

ஜெர்மானியர்களுக்கு வந்து சேரவேண்டிய வாய்ப்புகளை யூதர்கள் பறித்துக்கொள்கிறார்கள். ஜெர்மானியர்கள் தொழில்முனையில், கல்வியில் நசிந்துகிடக்கும்போது யூதர்கள் மட்டும் மினுமினுப்புடன் வலம் வருகிறார்கள். ஆகவே, யூதர்கள் ஒழிக்கப்படவேண்டும். ஜெர்மனி, ஜெர்மானியர்களுக்கு மாத்திரம்தான். நம் உடலில் ஓடுவது சுத்த ரத்தம். நாம் ஆரியர்கள். ஆகவே, நாம் புனிதமானவர்கள். நாம் மட்டும்.

ஜெர்மானியர்கள் என்னும் இடத்தில் சிங்களர்கள் என்றும் யூதர்கள் என்னும் இடத்தில் தமிழர்கள் என்றும் பொருத்திக்கொண்டால் இலங்கை இனவெறியின் தத்துவம் கிடைத்துவிடும்.

ஹிட்லரை ஜெர்மனி நம்பியது. மதித்தது. ஏற்றுக்கொண்டது. யூதர்கள் கொல்லப்பட்டதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இலங்கையிலும் இதுவேதான் நடந்துகொண்டிருக்கிறது. ராஜபக்ஷே சொல்வதை இலங்கை நம்புகிறது. மதிக்கிறது. ஏற்றுக்கொள்கிறது.

அதோ பூதம் என்று ஹிட்லர் அன்று ஒரு யூதனை சுட்டிக்காட்டினார். அதோ பூதம் என்று ராஜபக்ஷே இன்று ஒரு புலியைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஹிட்லரை அன்று யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை. ஜெர்மனியின் உள்நாட்டு விவகாரம் என்று ஐரோப்பா ஒதுங்கிகொண்டது. இன்று, ராஜபக்ஷேவைத் தட்டிக்கேட்க யாருமில்லை.

ஹிட்லர் ஆபத்தானவர், அவரை இப்படியே விட்டுவைத்தால் ஐரோப்பாவை விழுங்கிவிடுவார் என்று ஸ்டாலின் எச்சரிக்கை குரல் எழுப்பியபோது பிரிட்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட பெரும் நாடுகள் அசட்டை செய்தன. ஆஸ்திரியா, போலந்து, செக்காஸ்லாவாக்கியா என்று தொடங்கிய ஹிட்லர் இறுதியில் பிரிட்டனை தாக்கியபோதுதான் (ஜூலை 16, 1940) விபரீதம் புரிந்தது. அவசரமாக சோவியத்துடன் கூட்டணி சேர்ந்துகொண்டன. இறுதியில், சோவித் யூனியனிடம் ஜெர்மனி சரணடைந்தது.

இன்று, ரஷ்யா இலங்கைக்கு ஆதரவாக ஐ.நாவில் வாக்களித்திருக்கிறது. சீனா, க்யூபா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகளும் இலங்கை பக்கம் சாய்ந்திருக்கின்றன.

அமெரிக்காவின் ஆசிர்வாதத்துடன் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தேசத்தை (இஸ்ரேல்) உருவாக்கிக்கொண்டனர். அதே போல், இந்தியாவின் ஆசிர்வாதத்துடன் தங்களுக்கென்று ஒரு தேசத்தை (ஈழம்) உருவாக்கிக்கொள்ளமுடியும் என்று நீண்டநெடுங்காலமாகக் காத்துகிடந்தனர் இலங்கைத் தமிழர்கள். விடுதலைப் புலிகளுமேகூட இந்தியாவை நம்பிக்கொண்டுதான் இருந்தனர். குறைந்தது, தமிழகத்தை. இலங்கைக்கு ஆயுத உதவி அளித்ததன் மூலம், இந்தியா தன் நிலையை மீண்டும் தெளிவுபடுத்தியது.

இலங்கையின் ஹிட்லர் தனிமனிதரல்லர். புத்த பிக்கு, அரசியல்வாதி, அதிபர் என்று வெவ்வேறு வடிவங்களில் மாறிமாறி அவர் தோன்றிகொண்டிருக்கிறார். அதிகாரமும் செலுத்திக்கொண்டிருக்கிறார். தற்போதைய ஹிட்லரின் பெயர் மகிந்த ராஜபக்ஷே. அவ்வளவுதான்.

17 comments:

பதி said...

சில விசயங்களில் இலங்கையையும் ஜெர்மனியையும் ஒப்பிட முடியவில்லை.

ஏனெனில், ஹிட்லரின் ஆயுதக் கொள்வனவுக்கும் இன அழிப்பிற்கும் யூதர்களின் வரிப்பணம் எங்காவது தெரிந்தே பயன்பட்டிருக்கின்றதா??

யூதர்களை கொல்ல ஹிட்லர் வேறு யூதர்களை பயன்படுத்தினான? ஜெர்மானிய யூதர்களின் மறைவின் போது பிற யூதர்கள்/யூதத் தலைவர்கள் அதை கண்டும் காணாது இருந்தார்களா???

யூத அறிவுக் குஞ்சுகள் ஹிட்லரின் செய்கையைப் பாராட்டி கட்டுரை வடித்தனவா? அல்லது பிற யூதர்களின் அவல நிலையை போக்காமல் அதற்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனவா?

எனக்கு தெரிந்து இல்லை... ஆனால், இலங்கை ஹிட்லர்களுக்கும் அங்கிருக்கும் யூதர்களுக்கும்???

தமிழர்கள் தனித்துவமானவர்கள்.....

Anonymous said...

True!

Rehan said...

Pity that tamilians are getting killed like jews. Jews at least got Israel. When will tamils get their homeland?

சுதிர் said...

மருதன் சிங்கள பேரினவாதத்தை விமரிசிக்கும் அளவுக்கு இலங்கை தமிழர்களை நீங்கள் விமரிசிப்பதில்லையே! ஜாதி, மதம், இனம், வர்க்கம் என்று அவர்களும் தமக்குள் சண்டையிடடுக்கொண்டு இருக்கிறார்கள்.

மருதன் said...

சுதிர் : பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் உணவு, இருப்பிடம் இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள். முகாம்களில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் இலங்கைத் தமிழர்கள் ஜாதி, இனம், மதம், வர்க்கம் என்று பிரிந்திருப்பது உண்மை. தமிழர்கள் என்று நாம் மொத்தமாகக் குறிப்பிட்டாலும் மலையக இந்தியர்கள், முஸ்லீம்கள், இந்துக்கள் போன்ற பல பிரிவுகள் உள்ளன.

ஆனால் இதுபோன்ற பிரிவுகள் இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளிலும் இருக்கின்றனவே! இலங்கைத் தமிழர்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து எதற்கு இப்போது சாடவேண்டும்?

இலங்கைத் தமிழர்களை விமரிசிக்கும் தருணம் இதுவல்ல. முதலில் அவர்கள் வாழட்டும். மீளட்டும்.

butterfly Surya said...

எந்த இன வெறியும் ஜெயிக்காது. கடைசியில் ஹிட்லருக்கு ஏற்பட்ட கதி என்ன..??

அருமையான பகிர்வு.

நன்றி.

புரட்சிக்கவி said...

சரியாகச் சொன்னீர்கள் !

ஒரே வித்தியாசம் - இட்லர் ஜெர்மானியப் பொருட்களுக்கான சந்தைப் பிடிக்க நாடு நாடாகப் பிடித்தான் - யூதர்களை அழித்தான். நாம் செய்ததைத் தானே, இவன் செய்கின்றான் என்று அனைத்துக் காலனி எஜமான நாடுகளும் சும்மா இருந்தார்கள்.

ஆனால், ராஜபாட்சே, ஒட்டுமொத்த உலகிற்கும் இலங்கையைச் சந்தை ஆக்க - தமிழர்களை அழிக்கின்றான்.நமக்குதானே கால(ணி)னியாகின்றான் என்று நவகாலனிய எஜமானர்களும், அரைக்காலனிய எஜமானர்களும் உதவி செய்கின்றார்கள்.

சுரண்டல் மட்டும் அப்படியே இருக்கின்றது - கண்டங்கள் மாறினாலும், காலங்கள் மாறினாலும் !!
- அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.com

Anonymous said...

What about the tigers?

http://www.guardian.co.uk/world/2009/may/31/sri-lanka-children-tamil-tigers

Anonymous said...

oru murai morarji desai solliyullaar: "ungalukku(tamilarkalukku), yilangai prachanai kurithu 'biased' opinion ullathu yena. aamaam, naam yenna yokkiyam? pakkathu veettu kaaranukku oru kudam thanneerai yaavathu thinamum kuduppomaa? manidhan magathaana salli payal...

Anonymous said...

"ஹிட்லர் முன்வைத்த அதே முழக்கம். ஹிட்லர் கக்கிய அதே இனவெறுப்பு. ஹிட்லர் சுட்டிக்காட்டிய அதே காரணங்கள். யூதர்கள் இருக்கும்வரை ஜெர்மனி வளராது என்றார் ஹிட்லர். தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இருக்கும்வரை இலங்கை விளங்காது என்றார் தர்மபாலா."

மருதரே, இதையே சற்று மாற்றினால் தமிழ் நாட்டிற்கும் பொருந்தும்.

”ஹிட்லர் முன்வைத்த அதே முழக்கம். ஹிட்லர் கக்கிய அதே இன வெறுப்பு. பிராமணர்கள் இருக்கும் வரை தமிழகம் வளராது என்றார்கள் திராவிட இயக்கத்தினர். பிராமணர்கள் இருக்கும் வரை தமிழகம் விளங்காது என்றார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்”

ஹிட்லர், தர்மபாலா, ஈவேரா இவர்கள் ஒரே வரிசையை சேர்ந்தவர்கள்.

Anonymous said...

அந்த ஹிட்லருக்கே கொடி பிடித்தவர்கள் தான் ஆரியவாதிகளும் பிராமணிய வாந்திகளும் . ஹிட்லரின் ஆரிய கொள்கையை தூக்கி பிடிக்க ஜெர்மானிய மொழியை கற்க சென்ற பிராமணிய வாந்திகளும் உண்டு

valluvanar said...

அந்த ஹிட்லருக்கே கொடி பிடித்தவர்கள் தான் ஆரியவாதிகளும் பிராமணிய வாந்திகளும் . ஹிட்லரின் ஆரிய கொள்கையை தூக்கி பிடிக்க ஜெர்மானிய மொழியை கற்க சென்ற பிராமணிய வாந்திகளும் உண்டு

Anonymous said...

மருதரே

ஹிட்லர் அணுக்கத்தை இலங்கையில் சரியாக காட்டியுள்ளீர்கள். இதையே, தமிழ்நாட்டு சூழலிலும் சில வார்த்தை வித்தியாசங்களோடு அணுகலாம்.

”அதிகாரம் கையில் கிடைக்கும் முன்னரே ஹிட்லர் யூதர்களுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். ஜெர்மனியில் அதிகம் படித்தவர்கள் யார்? அரசாங்க அலுவலகங்களில் உயர் பதவிகளில் யார் நிறைந்திருக்கிறார்கள்? மருத்துவர்களாக இருப்பவர்கள் யார்? செல்வந்தர்கள் யார் யார்?...........அதோ பூதம் என்று ஹிட்லர் அன்று ஒரு யூதனை சுட்டிக்காட்டினார். அதோ பூதம் என்று ராஜபக்ஷே இன்று ஒரு புலியைச் சுட்டிக்காட்டுகிறார் ”


அதிகாரம் கையில் கிடைக்கும் முன்னரே திராவிட இயக்கத்தினர் பிராமணர்களுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். தமிழ்நாட்டில் அதிகம் படித்தவர்கள் யார்? அரசாங்க அலுவலகங்களில் உயர் பதவிகளில் யார் நிறைந்திருக்கிறார்கள்? மருத்துவர்களாக இருப்பவர்கள் யார்? செல்வந்தர்கள் யார் யார்? ..............அதோ பூதம் என்று ஈ.வே.ராமசாமி அன்று ஒரு பிராமணனை சுட்டிக்காட்டினார்.



”ஜெர்மானியர்களுக்கு வந்து சேரவேண்டிய வாய்ப்புகளை யூதர்கள் பறித்துக்கொள்கிறார்கள். ஜெர்மானியர்கள் தொழில்முனையில், கல்வியில் நசிந்துகிடக்கும்போது யூதர்கள் மட்டும் மினுமினுப்புடன் வலம் வருகிறார்கள். ஆகவே, யூதர்கள் ஒழிக்கப்படவேண்டும். ஜெர்மனி, ஜெர்மானியர்களுக்கு மாத்திரம்தான். நம் உடலில் ஓடுவது சுத்த ரத்தம். நாம் ஆரியர்கள். ஆகவே, நாம் புனிதமானவர்கள். நாம் மட்டும்............அமெரிக்காவின் ஆசிர்வாதத்துடன் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தேசத்தை (இஸ்ரேல்) உருவாக்கிக்கொண்டனர். ”


தமிழர்களுக்கு வந்து சேரவேண்டிய வாய்ப்புகளை பிராமணர்கள்கள் பறித்துக்கொள்கிறார்கள். தமிழர்ர்கள் தொழில்முனையில், கல்வியில் நசிந்துகிடக்கும்போது பிராமணர்கள் மட்டும் மினுமினுப்புடன் வலம் வருகிறார்கள். ஆகவே, பிராமணர்கள் ஒழிக்கப்படவேண்டும். தமிழ்நாடு, தமிழர்களுக்கு மாத்திரம்தான். நம் உடலில் ஓடுவது சுத்த ரத்தம். நாம் திராவிடர்கள். ஆகவே, நாம் புனிதமானவர்கள். நாம் மட்டும்............பிரித்தானிய ஏகாதிபத்திய ஆசிர்வாதத்துடன் திராவிட இயக்கத்தினர் தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்க முயற்சித்தனர்.


அதுதான் சரித்திரம் திரும்பி வருகிறது என மார்க்ஸ் சொன்னார்.
ஹிட்லர் - ராஜபக்சே - ஈ.வே.ராமசாமி
ஜெர்மானியர் -சிங்களவர் - தமிழ்ர்கள்
யூதர் - தமிழர் - பிராமணர்

இந்த சிறிய மாற்றங்கள் செய்தால் தமிழ்நாட்டு பாசிசம் உள்ளங்கையில் நெல்லிக்கனி.

ஜிஞ்ஜர்

Anonymous said...

"tamil said...
அந்த ஹிட்லருக்கே கொடி பிடித்தவர்கள் தான் ஆரியவாதிகளும் பிராமணிய வாந்திகளும் "

29-8-1937ல் ஒரு திராவிட ஹிட்லர் விசிறி இவ்வாறு எழுதினார்.
”ஜெர்மன் அதிகாரியான ஹெர் இட்லர் ஜெர்மனி தேசத்தில் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததை தம் சுயசரிதையில் விளக்கி இருப்பதைப் படிப்போர் தென்னாட்டிலே பார்ப்பனர் ஆதிக்கம் இருந்து வருவதனால் விளையும் சமூகக் கேட்டையும் நன்கு உணர்வர்.
பெரிய தொழிற்சாலைகளெல்லாம் யூதர்களிடமே இருந்தன. சர்வகலாசாலைகளில் யூதர்களே கலா மண்டபங்கள். அவர்கள் கரங்களிலே புலவர்கள் யூதர்களே. பத்திரிகைத் தொழில் அவர்களுடையதே. மந்திரி சபை அவர்கள் கைப்பாவை. விஞ்ஞானம் அவர்கள் சொத்து. சமதர்மம் அவர்களுடையது.

செல்வம் அவர்களிடம், வறுமை ஜெர்மனியரிடம், ஆதிக்கம் அவர்களிடம், அடிமைத்தனம் ஜெர்மனியரிடம். ஆனந்தம் அவர்களிடம், சோர்வு ஜெர்மனியரிடம்”

இப்படி ஹிட்லர் நாஜி வாந்தியை உண்மையென்று புறைத்து, அதை பிராமண வெறுப்பிற்கு உபயோகப்படுத்தியவர் வேறு யாரும் அல்ல பேபேபேபேபே.....றிஞர் காஞ்சீபுரம் அண்ணாதுரை.

இப்பவாவது ஹிட்லர்-ராசபட்சே-அண்ணாதுரை-ஈவேரா ‘ஆன்மீக’ உறவு உங்களுக்கு புரியும்.

புரட்சிக்கவி said...

தம்பி !

ஜெர்மனியில் நாஜிக்கள் கொலைகள் செய்தபோது, ஹிட்லரின் ஆரிய மேன்மைக்காக அதனை ஆதரித்தவர்கள் பிராமணர்கள் !

யூதர்கள் ஒன்றும் பிராமணர்களைப் போன்று கொடுமையான வர்ணாசிரமத்தினைக் கடைப்பிடிக்கவில்லை. தாங்கள் கடவுளின் முகத்தில் இருந்தும், மற்றையவர்கள் காலிலிருந்தும் வந்ததாக கதைக் கட்டவில்லை.ஆனாலும் அவர்களை ஹிட்லர் கொன்ற போது, பிராமணர்களுக்கு இணையாக மற்றையவர்களை உயர்த்தி - பிராமணர்களும்,மற்றயவர்களும சரிசம்மாக வாழ்வதை உறுதி செய்தாரே பெரியார் - அதுதான் அவர் செய்த குற்றம். யூதர்களைப் போல பிராணாளைக் கொல்லுவதற்கு வேண்டிய ஆயிரம் மடங்கு நியாயம் பெரியாருக்கு உண்டு.ஆனாலும் அவர் அதனைச் சிந்தையில் கூடச் சொல்லவில்லை.

பிரச்சனையே, ஹிட்லரும், அண்ணாவினைப் போல, பெரியாரைப் போல யூத மேலாதிக்கத்தை (யூதர்களை அல்ல) எதிர்த்திருந்தால், இவ்வளவு கறைப்பட்டிருக்க மாட்டார்.

அதைவிட்டு விட்டு, பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் செய்த தியாகத்தையும், புரட்சியையும் கொச்சைப்படுத்துகின்ற அனானியே !

உன் விஷத்தைத் தெரிந்து தான் பெரியார் அப்பவே சொன்னார் - பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டு விடு - பார்பானை விடாதே என்று !!

அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.com

Anonymous said...

> புரட்சிக்கவி said...
>தம்பி !

நான் தம்பி ஆகத்தான் வேண்டுமா? ஏன் தங்கையாகவோ அக்காவாகவோ ஒருக்கக்கூடாது? நீங்கள் என்ன புரட்சிகவியோ, sexism தை தாண்டவில்லை.

”உன் விஷத்தைத் தெரிந்து தான் பெரியார் அப்பவே சொன்னார் - பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டு விடு - பார்பானை விடாதே என்று !!”

இவ்வளவு துல்லியமாக நான் சொல்ல வந்ததை நிரூபிப்பதை எதிர்பார்க்கவில்லை. ஹிட்லர் - ராஜபக்ச - ஈவேரா பரம்பரையை சரியாக உள்வாங்கியுள்ளீர்கள்.

“பிராமணர்களுக்கு இணையாக மற்றையவர்களை உயர்த்தி - பிராமணர்களும்,மற்றயவர்களும சரிசம்மாக வாழ்வதை உறுதி செய்தாரே பெரியார் - அதுதான் அவர் செய்த குற்றம்”

எல்லொரையும் சரிசமமாக்கியது, ஈவேரா இல்லை - அது சுதந்திர இந்திய சட்டத்தின் வேலை. அதை தடுக்கதான் ஈவேரா அன்னியன் காலை பிடித்து, இந்திய சுதந்திரத்தையும், குடியரசையும் எதிர்த்தார்.
“பிராமணர்களுக்கு இணையாக மற்றையவர்களை உயர்த்தி ” என்று சொல்லும்போதே, உங்கள் ஏற்ற-தாழ்வு மனப்பான்மை வெளியாகிறது.


“யூதர்களைப் போல பிராணாளைக் கொல்லுவதற்கு வேண்டிய ஆயிரம் மடங்கு நியாயம் பெரியாருக்கு உண்டு.”

இந்த இன அழிப்பு வன்முறை, சட்டத்திற்கு மதிப்பின்மை முதலியவற்றில் ஈவேரா, ஹிட்லர் - ராஜபக்சாவிற்க்கு சளைத்தவர் அல்ல என சொல்கிறீர்கள். ஈவேரா - தோற்றுப்போன ஹிட்லர் அல்லது நோஞ்சான் ஹிட்லர் . அதனால் அவர் பாசிச மனப்பன்மை குறைவு என சொல்ல முடியாது. உங்கள் எழுத்துகளில் பாசிசம் சொட்டுகிறது.

வன்பாக்கம் விஜயராகவன் said...

"ஹிட்லர் ஆபத்தானவர், அவரை இப்படியே விட்டுவைத்தால் ஐரோப்பாவை விழுங்கிவிடுவார் என்று ஸ்டாலின் எச்சரிக்கை குரல் எழுப்பியபோது பிரிட்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட பெரும் நாடுகள் அசட்டை செய்தன. ஆஸ்திரியா, போலந்து, செக்காஸ்லாவாக்கியா என்று தொடங்கிய ஹிட்லர் இறுதியில் பிரிட்டனை தாக்கியபோதுதான் (ஜூலை 16, 1940) விபரீதம் புரிந்தது. அவசரமாக சோவியத்துடன் கூட்டணி சேர்ந்துகொண்டன. இறுதியில், சோவித் யூனியனிடம் ஜெர்மனி சரணடைந்தது. "

ஐயோ, இப்படியா ஸ்டாலினிஸ்ட் சரித்திர புரளி செய்வது.

1930 களில் ஹிட்லர், ஆட்சியை கைப்பற்றும் முன் ஜெர்மானிய கம்யூனிஸ்டுகள் சோஷலிஸ்டுகலினிடன் கூட்டணி செய்திருந்தால் ஹிட்லரை சுலபமாக தேர்தல்களிலும், தெரு ரகளைகளிலும் தோர்ர்கவைத்திருக்கலாம். ஆனால் ஸ்டாலின் ஆணையின் படி கம்யூனிஸ்டுகள் சோஷலிஸ்டுகளுடன் கூட்டணி செய்ய மறுத்து விட்டனர் - காரணம் ஸ்டாலின் அபிப்பிராயத்தில் சோஷலிஸ்டுகளுக்கும், முதலாளிகளுக்கும் வித்தியாசம் இல்லை. 1936 பிறகு தான் ஸ்டாலின் ஆணைப்படி கம்யூனிஸ்டுகள் திசை திரும்பி, நாகிக்கள் தான் மிக மோசமான எதிரி என “கண்டுபிடித்தனர்” . அதற்குள் மிக காலம் கடந்து விட்டது, 3 வருடம் ஹிட்லர் ஆட்சியில் இருந்து லட்சக்கணக்கானோரை முகாம்களில் இட்டு பலமானான். அதனால் ஹிட்லர் ஆட்சி வருவதற்கு ஸ்டாலின் மறைமுக ஆதரவு கொடுத்தான் என சொல்லலாம்.

1938ல் ஸ்டாலின் ஹிட்லரோடு சமாதான் ஒப்பந்தம் செய்தான் (மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம்). அது நடந்தவுடன் ஹிட்லர் கிழக்கே போரை நிருத்தியதால், இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்தான். அந்த ஒப்பந்தத்தில் ரகசிய ஷரத்துகள் படி , ஹிட்லரும், ஸ்டாலினும் சமாதானமாக இருந்த போலந்தை பாதியாக பிரித்து ‘லபக்’ என்று விழுங்கினர். அங்கிருந்துதான் 2ம் உலகப் போர் தொடங்கியது. மேலும் ஸ்டாலின் ஹிட்லரின் போர் ஆயத்தங்களுக்கு பெட்ரோல், மெடல்கள் போன்றவற்றை கொடுத்தான். மேலும் 1938 வரை சோவியட் யூனியனில் தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கான ஜெர்மானிய கம்யூனிஸ்டுகளை நாஜி போலீசுக்கு திருப்பி அனுப்பினான்.

இவ்வணவு ஒப்பந்தம் செய்ததில் ஸ்டானுக்கு பெரும் நஷ்டம்; ஏனெனில் 1941ல் ஹிட்லர் சோவியட் யூனியனை தாக்கியபோது, 1938 ஐ விட பல மடங்கு பலமாக இருந்தான். மேலும் அந்த முட்டாள்தனமான ஒப்பந்தத்திஅ ஸ்டாலின் மனதார நம்பி, ஹிட்லரின் சோவியட் யூனியன் எதினான போர் ஆயத்தங்களை நம்ப மறுத்து விட்டான். ஜூன் 21 , 1941ல் ஹிட்லர் சோவியத் யூனியனை மின்னல் வேகத்தில் தாக்கியபோது, ஸ்டாலினின் குருட்டுத் தனத்தால், சோவியத் யூனியனுக்கு மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது. உதாரணமாக , போரின் முதன் 2 நாட்களீலேயே, 3000 சோவியத் விமானங்கள் தரையிலேயே ஜெர்மன் குண்டு போடும் விமானங்களால் தாக்கப்பட்டு அழிவுற்றன.

”பிரிட்டனை தாக்கியபோதுதான் (ஜூலை 16, 1940) விபரீதம் புரிந்தது” என்ன உளரல்!!!. 2ம் உலகப் போர் ஜெர்மனி போலந்தை தாக்கியபோது (1-9-1938) துவங்கியது. பிரிட்டனும், பிரான்சும் ஹிட்லர் போலந்திலிருந்து 24 மணி நேரத்தில் விலகாவிட்டால், ஹிட்லர் மீது போர் தொடுப்போம் என நிபந்தனை விட்டன. ஹிட்லர் அதை அலட்சியம் செய்தான், உடனே பிரிட்டனும், பிரான்சும் ஹிட்லர் மேல் போர் துவக்கம் செய்தன.

”(ஜூலை 16, 1940) விபரீதம் புரிந்தது. அவசரமாக சோவியத்துடன் கூட்டணி சேர்ந்துகொண்டன.” சோவியத் நாடுடண் கூட்டணி 1941ல் தான் , ஹிடர்ர் சோவியத் யூனியனை தாக்குதலை பின்பற்றி நடந்தது.என்னப்பா இது எல்லோருக்கும் தெரிந்த சரித்திர உண்மைகளை இப்படியா மறைப்பது. தமிழர்கள் அதை நம்புவதற்கு அவ்வளவு முட்டாள்களா ??

“சோவித் யூனியனிடம் ஜெர்மனி சரணடைந்தது” ஜெர்மனி, கூட்டு நாடுகளிடம் சரணடைந்தது. மேலும் 2ம் உலகப் போர் ஜெர்மன் சரணாகதியில் முடியவில்லை. இன்னும் 6 மாதங்கள் ஆசியாவிலும் , பசிபிக் சமுத்திரத்திலும் சண்டை நடந்து, ஜப்பான் மேல் அமெரிக்கா அணு குண்டு போட்டு அழிப்பது வரை நடந்தது.

விஜயராகவன்