January 8, 2010

என்ன புத்தகம் வாங்கலாம்?

பெரியாரின் படைப்புகளை மூன்று பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. முதலில் திராவிடர் கழகம். 1925ம் ஆண்டு குடியரசில் வெளியான கட்டுரைகள் என்று தனியொரு தொகுதி கெட்டி அட்டையில் கிடைக்கிறது. எதற்காக இந்த வெளியீடு என்று புரியவில்லை. 1925ம் ஆண்டு எழுதியது,1936ல் பேசியது என்று மனோரமா இயர் புக் போல் ஆண்டு வாரியாக பெரியாரைப் பிரித்து வெளியிடுவதன் நோக்கம் என்ன? நாங்களும் பெரியாரை வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை அறிவிக்கவா? முன்னூறு, நானூறு கொடுத்து ஒவ்வொரு ஆண்டாக பெரியாரைச் சேகரித்துக்கொண்டிருக்கமுடியுமா?

இரண்டாவது, விழிகள் பதிப்பகம். வே. ஆனைமுத்து தொகுத்து, பெரியாரிடம் பதிப்புரிமை பெறப்பட்டு 1974ல் வெளியிடப்பட்ட தொகுதி. இரண்டாம் பதிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. மொத்த விலை 5800. ஜனவரி 20ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்கள் 3800 செலுத்தவேண்டும். மொத்தம் இருபது தொகுதிகள். கிட்டத்தட்ட 9000 பக்கங்கள். புத்தகக் கண்காட்சியில் விழிகள் பதிப்பகம் (அரங்கு எண் 240) சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

மூன்றாவது, பாரதி புத்தகாலயம். கெட்டி அட்டையில் இரு தொகுதிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள். தொகுத்திருப்பவர் பசு. கவுதமன். கிட்டத்தட்ட 1400 பக்கங்கள். மூன்று பாகங்கள். இரு பெரும் தொகுதிகள் சேர்த்து ரூபாய் 685. அரங்கில் வாங்கினால் பத்து சதவீத கழிவு கிடைக்கும்.

பின்னட்டையில் இருந்து சில வரிகள். விடுதலையில் 31.01.1951 அன்று பெரியார் எழுதுகிறார்.

'எந்த நூலை எடுத்துக்கொண்டாலும் அதன் மதிப்பு அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதனை ஆக்கினவனையோ, அதில் உள்ள தெய்வீகத்தன்மை என்பதையோ, இலக்கண, இலக்கிய அளவையோ, அமைப்பையோ, அற்புதத்தன்மையோ அளவாகக் கொண்டதாக ஆகாது.'

புத்தகங்களை எப்படித் தேர்வு செய்யவேண்டும் என்பதற்கு இதையே அளவுகோலாக வைத்துக்கொள்ளலாம்.

3 comments:

Sai Ram said...

>>>'எந்த நூலை எடுத்துக்கொண்டாலும் அதன் மதிப்பு அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதனை ஆக்கினவனையோ, அதில் உள்ள தெய்வீகத்தன்மை என்பதையோ, இலக்கண, இலக்கிய அளவையோ, அமைப்பையோ, அற்புதத்தன்மையோ அளவாகக் கொண்டதாக ஆகாது.'<<<
சில சமயம் பெரியார் தன் காலத்தில் எவ்வளவு தூரம் progressive-யாக இருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. Death of the Author என்று இதை தானே பின்னர் சொன்னார்கள்.

தமிழ் ஓவியா said...

//வே. ஆனைமுத்து தொகுத்து, பெரியாரிடம் பதிப்புரிமை பெறப்பட்டு 1974ல் வெளியிடப்பட்ட தொகுதி. இரண்டாம் பதிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.//

2010 பிப்ரவரியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். இன்னும் அத்தொகுதிகள் வெளியாகவில்லை.

தகவலை சரி பார்த்து வெளியிடவும்

மருதன் said...

தமிழ் ஓவியா : தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.