April 14, 2015

இந்திய விடுதலைப் போராட்டம் : பிபன் சந்திரா

நவீன இந்திய அரசியல் வரலாற்றைத் தனித்துவமான முறையில் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி பல முக்கியமான பாய்ச்சல்களை நிகழ்த்தியவர் பிபன் சந்திரா. அடிப்படையில் மார்க்சியவாதியான அவர், காலனியாதிக்கம், பொருளாதார தேசியம், தேசியவாதம், வகுப்புவாதம் என்று பல துறைகளில் தனது தடத்தை அழுத்தமாக விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய அணுகுமுறையோடும் அவர் வந்தடைந்த முடிவுகளோடும் கடுமையாக முரண்படுபவர்களும்கூட அவருடைய பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடமாட்டார்கள்.

இந்துத்துவ அரசியலைக் கடுமையாக எதிர்த்தவர் என்றபோதும் பிபன் சந்திராவை இடதுசாரிகள் எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வகித்த பாத்திரம் முற்போக்கானது என்பது அவர் வந்தடைந்த முடிவு. இடதுசாரிகள் வகிக்கவேண்டிய பாத்திரத்தை அவர்களைவிடச் சிறப்பாக காங்கிரஸில் இருந்த தலைவர்கள் வகித்தனர் என்கிறார் பிபன் சந்திரா. மேலும், காந்தியைச் சரியாக மதிப்பிடத் தவறிவிட்டதன்மூலம் இடதுசாரிகள் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போய்விட்டனர் என்றும் அவர் விமரிசிக்கிறார்.

பிபன் சந்திராவைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் ஆதித்ய முகர்ஜி தொகுத்திருக்கும் The Writings of Bipan Chandra : The Making of Modern India From Marx to Gandhi என்னும் புத்தகத்தில் இருந்து தொடங்குவது சரியாக இருக்கும். ஓரியண்ட் லாங்மேன் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தில் இருந்து சில அறிமுகப் பகுதிகள் கீழே.

இந்திய விடுதலைப் போராட்டம் : ஓர் அறிமுகம்

இந்திய தேசிய காங்கிரஸ் அதன் அத்தனை பலவீனங்களையும்மீறி ஏகாதிபத்திய எதிர்ப்பின் வாகனமாகவும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தது. இங்கே காங்கிரஸ் என்பது 1947ம் ஆண்டுக்கு முந்தைய அமைப்பு. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் என்பது வேறு. இந்த வேறுபாடு முக்கியமானது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க இந்திய தேசிய காங்கிரஸ் கடைபிடித்த உத்தியை S-T-S (Struggle-Truce-Struggle ) என்று அழைக்கலாம். போராட்டம், அமைதி, மீண்டும் போராட்டம் என்னும் சுழற்சி முறையை காங்கிரஸ் கடைபிடித்தது.

காந்தியின் அகிம்சை போராட்ட உத்தி முக்கியமானது; ஆழ்ந்து ஆராயப்பட வேண்டியது. மக்கள் திரளின் பங்கேற்போடு, அவர்களை இணைத்துக்கொண்டு அகிம்சை பரிசோதனையை காந்தி மேற்கொண்டார்.

1880கள் தொடங்கி தேசிய விடுதலைப் போராட்டம் காலனியாதிக்கத்தை விமரிசிக்கவும் எதிர்க்கவும் தொடங்கிவிட்டது. ஏழை மக்களுக்கு ஆதரவாகவும் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்தரத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சிவில் உரிமைகள், சர்வதேசியவாதம் ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் போராட்டம் குரல் கொடுத்தது. பூர்ஷ்வா மற்றும் முதலாளித்துவ ஆதிக்கம் நிலவியபோதும் அவற்றையும்மீறி விடுதலைப் போராட்டம் மக்கள் பக்கம் நின்றது. போராட்டத்தின் போக்கு காரணமாகவும் சில தலைவர்கள் காரணமாகவும் காங்கிரஸ் சோஷலிசத்தின் பக்கம் நகரத் தொடங்கியது. இடதுசாரிகள் காந்தியின் உத்தியையும் சிந்தாந்த சட்டகத்தையும் சரியாக மதிப்பிடாததும் இந்த நகர்வுக்கு ஒரு முக்கியக் காரணம்.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் மையம் காலனியாதிக்கத்துக்கும் இந்திய மக்கள் நலன்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு. குறிப்பாக, பொருளாதார ரீதியாக இந்தியா சுரண்டப்படுகிறது என்பதற்கான தகுந்த ஆதாரங்களும் சித்தாந்த தெளிவும் 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்டுவிட்டது. காலனியாதிக்கத்தின் மூன்று முக்கிய அம்சங்கள் : 1) வரிவிதிப்பு மூலம் நேரடியான சுரண்டல். பெரிய அளவில் ஆங்கிலேயர்கள் பணியில் அமர்த்தப்பட்டதன்மூலம் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டனர். 2) சமமற்ற வர்த்தகத்தின்மூலம் இந்தியா பண்ட விற்பனைக்கான ஒரு சந்தையாக மட்டும் சுருக்கப்பட்டது. 3) பிரிட்டிஷ் மூலதனம் இங்கே முதலீடு செய்யப்பட்டது. இந்தியாவின் வளம் சுரண்டப்பட்டது.

நவீன ஏகாதிபத்தியம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்தியா உணர்ந்தது 1918ம் ஆண்டில். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மார்க்சிய சிந்தனைகளின் தாக்கத்தால் இந்தப் புரிதல் ஏற்பட்டது. காலனியப் பொருளாதார அமைப்பைத் தூக்கியெறிவதன்மூலமே சுரண்டலில் இருந்து விடுபடமுடியும் என்னும் முடிவுக்கு மிதவாதிகள் வந்து சேர்ந்ததும் அப்போதுதான். உலகம் முழுவதிலும் உருவாகி வந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலையும் இந்திய தேசிய காங்கிரஸ் உள்வாங்கிகொண்டு செழுமைப்படுத்திக்கொண்டது.

தேசிய சிந்தனைகளை விவசாயிகளும் தொழிலாளர்களும்கூட உள்வாங்கிக்கொண்டனர் என்பதற்கு பிரிட்டிஷ் குறிப்புகளே ஆதாரம். இந்தியா லீக் டெலிகேஷன் என்னும் குழு 1932ம் ஆண்டு இந்தியாவின் கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டு தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதன் முக்கிய பகுதிகள்.

'கிராமப்புற மக்கள் விழிப்புணர்வு பெற்றிருந்ததற்கு காந்தி, அப்துல் கஃபர் கான், வல்லபபாய் படேல், புருஷோத்தம்தாஸ் டாண்டன், ஜவாஹர்லால் நேரு... உள்ளிட்டோர் காரணமாக இருந்தனர். பிரச்னைகளையும் காரணங்களையும் எந்த அளவுக்கு கிராமத்தினர் உணர்ந்திருந்தனர் என்பதை நாங்களே நேரடியாகச் சோதித்துப் பார்த்தோம். பொருளாதார, சமூகப் பிரச்னைகளை அவர்கள் அறிந்திருந்தனர். ஏழைமை, வரி விதிப்பு, அந்நிய சுரண்டல், கல்வி புறக்கணிப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி அவர்கள் பேசினார்கள். காங்கிரஸின் நோக்கங்களை அவர்கள் உணர்ந்திருந்தனர். மிகப் பெரிய பணியை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் தெரிந்துவைத்திருந்தனர்.

'சுயராஜ்ஜியம் குறித்தும் எதற்கு அது தேவை என்பது குறித்தும் அவர்களிடம் பேசினோம். நிறைய பள்ளிகள், சாலைகள், வசதிகள் இருந்தால் உங்கள் வாழ்நிலை உயரும் என்றும் சுயராஜ்ஜியம் என்பது வெறும் அரசியல் என்றும் தெளிவாக விளக்கினோம்.  ஆனால் ஒரு முதிய விவசாயி, சுயராஜ்ஜியம் என்றால் சுயமரியாதை, சுதந்தரம், சக்தி என்று பதிலளித்தார். இந்தச் சக்தி கிடைக்காவிட்டால் நீங்கள் விவரித்த எந்த வசதிகளும் கிடைக்காது என்றும் அவர் விளக்கினார்.'

காலனியாதிக்கம் என்பது ஒரு முரண்பாடு. அதை அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்திருந்தனர். தேசியவாதம் என்னும் உணர்வு உண்மையானது. தேசிய விடுதலை இயக்கம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சிவில் உரிமைகளையும் முழக்கங்களாக முன்வைத்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தொடக்கத்தில் இருந்தே ஜனநாயக வழியில் நகரத் தொடங்கியது. அதனால் பலதரப்பட்ட மக்களை அவர்களால்  ஈர்க்கவும் அவர்களை ஒருங்கிணைத்து போராட வைக்கவும் முடிந்தது.

சிவில் உரிமைகளுக்கு காந்தி எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதற்கு அவருடைய வார்த்தைகளே உதாரணம். 'அகிம்சையோடு ஒத்திசையும் சிவில் உரிமைகளே சுயராஜ்ஜியத்துக்கான முதல் படி. அரசியல் மற்றும் சமூக வாழ்வின் சுவாசம் என்று இதனை அழைக்கலாம். சுதந்தரத்தின் அடித்தளமும் இதுவேதான். இதில் எந்தவிதமான சமசரத்துக்கும் இடமில்லை. இது வாழ்வின் நீர்.  எவ்ளவு முயன்றாலும் நீரை நீங்கள் நீர்த்துப்போகச்செய்யமுடியாது.'

அதேபோல், தொடக்கத்தில் இருந்தே மதச்சார்பின்மை இந்திய தேசிய காங்கிரஸின் மற்றொரு அடித்தளமாக இருந்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை அது வலியறுத்தியது. சாதிய ஒடுக்குமுறையும் எதிர்க்கப்பட்டது. 1920க்குப் பிறகு தீண்டாமை ஒழிப்பு அதன் லட்சியங்களில் ஒன்றாக மாறிப்போனது. பெண்களின் பிரச்னைகளும் விவாதிக்கப்பட்டன. மொத்தத்தில் பன்முகம் கொண்ட ஓர் அமைப்பாக காங்கிரஸ் திகழ்ந்தது.

காங்கிரஸின் உலகப் பார்வையும் முக்கியமானது. தொடர்ச்சியாக உலக நிகழ்வுகளை உள்வாங்கிக்கொண்டு அது பரிணாம வளர்ச்சி பெற்றது. 1870கள் தொடங்கி ஒரு விஷயத்தில் காங்கிரஸ் தெளிவாக இருந்தது. இந்தியா ஏகாதிபத்தியத்தைதான் எதிர்க்கிறதே தவிர, பிரிட்டனை அல்ல. இது மிகவும் முக்கியமான ஒரு நிலைப்பாடு. இந்திய விடுதலைப் போராட்டத்தின் அச்சாரமாகத் திகழ்ந்த அறஉணர்வுக்கு இந்த நிலைப்பாடு ஒரு முக்கியக் காரணம். ஏகாதிபத்தியத்தைத் தீவிரமாக எதிர்த்த அதே வேளை, இந்த எதிர்ப்பு நிறவெறியாக மாறாதவாறு பார்த்துக்கொண்டது.

பிரிட்டிஷ் லேபர் கட்சி, சர்வதேச சோஷியலிஸ்ட் காங்கிரஸ், சோவியத் யூனியன், கோமிண்டர்ன் உள்ளிட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகளுடன் காங்கிரஸ் இணைந்துகொண்டது. 1930களில் பாசிஸத்துக்கு எதிரான தெளிவான நிலைப்பாட்டை எடுத்தது. எத்தியோப்பியா, ஸ்பெயின், செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளில் நடைபெறும் பாசிஸ எதிர்ப்பு போராட்டத்தை காங்கிரஸ் ஆதரித்தது. அதேபோல் பாசிஸத்துக்குப் பலியான யூதர்களையும் பிரிட்டனுக்கு எதிராகப் போராடிய அராபியர்களையும் ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த சீனர்களையும் காங்கிரஸ் ஆதரித்தது. ஜப்பானியப் பண்டங்களை இந்திய மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்று 1930களில் காங்கிரஸ் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

The Long-term Dynamics : Gandhiji and the Indian National Movement, Bipan Chandra

No comments: