February 26, 2009

சே குவேராவின் மோட்டார் சைக்கிள் பயணம்


ஜனவரி 1952-ல் உற்சாகத்துடன் தொடங்கியது அந்தப் பயணம். எட்டு மாதங்களில் ஐந்து நாடுகளைச் சுற்றிவருவதாகத் திட்டம். பெரிய முதுகுப்பை தயாராகிவிட்டது. உள்ளே ஏராளமான காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி துண்டுகள். ஆந்திய மலைப் பகுதிகளில் தொடங்கி சாண்டியாகோ வழியாக சிலி செல்வதாகத் திட்டம். மலை, ஏரி அத்தனையையும் மோட்டார் சைக்கிள் தாக்குபிடிக்கவேண்டும் என்பதற்காக எல்லா முன்னேற்பாடுகளும் தயாராக இருந்தன.

மலைப்பகுதியை நெருங்கும்போதே கோளாறுகள் தொடங்கிவிட்டன. சே குவேரா வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒரு வளைவில் சறுக்கி விழுந்தது. மிக மோசமான விபத்தாக இது அமைந்தது. உடன் வந்த நண்பர் ஆல்பர்ட்டோ அதிக காயமில்லாமல் தப்பிவிட்டார். சேயின் கால் சிலிண்டரின் கீழே சிக்கிவிட்டது. சிலிண்டர் ஏற்கனவே சூடாகிப்போயிருந்ததால் காலில் பலத்த புண்.

ஆசையாசையாகக் கட்டி அமைத்த மோட்டார் சைக்கிள் படுத்துக்கொண்டது. லாரியில் வைத்து எடுத்து வந்து பழுது பார்த்தனர். சில மணி நேரம் ஓடியது, பிறகு மீண்டும் சுருண்டுகொண்டது. இறுதியில், சாண்டியாகோவில் அதற்கு விடைகொடுத்தனர். மோட்டார் சைக்கிள் பயணம் என்று இந்தப் பயணம் பரவலாக அழைக்கப்பட்டாலும், உண்மையில் மோட்டார் சைக்கிளில் இவர்கள் அதிகம் பயனிக்கவே இல்லை என்பதுதான் நிஜம்.

கடற்கரையில் அமர்ந்து அலைகளை வேடிக்கைப் பார்த்தார் சே. மலைச் சரிவுகள் வழியாக நடந்துச் செல்ல முடிந்தது. அமேசான் நதியில் மிதந்துச் செல்ல முடிந்தது. டிட்காகா ஏரியில் நின்றபடி முழு சூரியனும் கடலில் மறைவதை கண்கள் விரிய பார்த்து ரசிக்க முடிந்தது. இடையிடையே சிறுசிறு வேலைகளை செய்தனர். சரக்குகளை ஏற்றி, இறக்கினர். மூட்டைச் சுமந்தனர். மாலுமிகளாக மாறினர். காவல் காத்தனர். மருத்துவம் பார்த்தனர். பேருந்துகளில் உதவி வேலைகள். பணம் கிடைத்தது. உற்சாகத்துடன் செலவழித்தனர்.

ஏப்ரல் மாதம் பெருவிலுள்ள மச்சு பிக்குவுக்கு வந்து சேர்ந்தனர். பூர்விக இந்தியர்கள் படும் பாட்டை நேரில் கண்டு கண் கலங்கினார். மச்சு பிக்குவின் வளத்தை சூறையாடிய அமெரிக்கர்களைக் கண்டு கொதித்தார்.

ஸான் பாப்லோ பகுதியிலிருந்த தொழுநோயாளிகளின் குடியிருப்புக்குச் சென்ற இருவரும், பதினைந்து நாள்களை அங்கே கழித்தனர். ஒரு பயணியாகவே சுற்றிக்கொண்டிருந்த சே, தொழுநோயாளிகளைக் கண்டதும் இதமான மருத்துவராக மாறிப்போனார். கைகளில் விரல் இல்லாமல் மொன்னையாக இருந்த ஒரு மனிதன், கைவிரல்களுக்குப் பதிலாகக் குச்சிகளை பயன்படுத்தி அக்கார்டியன் வாசித்ததைக் அவரால் மறக்கவே முடியவில்லை. சமூகம் தொழுநோயாளிகளை விலக்கி வைத்திருப்பது அவருக்கு வேதனையளித்தது.

அமேசான் நதியைக் கடக்கும்போது ஆஸ்த்மா சேவைக் கடுமையாகத் தாக்கியது. போதிய மருந்து இல்லாதததால் அவதிப்பட வேண்டியிருந்தது. கொதிக்க வைக்க நீர் கிடைக்காது. சகித்துக்கொண்டார்.

அமெரிக்காவுக்குச் செல்வதற்கு அனுமதி கிடைக்காததால் ஆல்பர்ட்டோ வெனிசூலாவிலேயே தங்கிவிட்டார். சே முயற்சியை கைவிடவில்லை. இறுதியாக பந்தயக் குதிரைகளை ஏற்றிச்செல்லும் விமானத்தில் இடம் கிடைத்தது. ஏறிக்கொண்டார். மியாமியில் ஒரு நாள் தங்கிவிட்டு, பிறகு காரகாஸுக்குத் திரும்பி அங்கிருந்து அர்ஜென்டினா திரும்புவதுதான் திட்டம்.

ஆனால் மியாமியில் இறங்கிய விமானத்தில் கோளாறு. அதைச் சரிப்பார்க்கும் வரை மியாமியிலேயே தங்கியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எஞ்சினைப் பழுதுபார்க்க அதிக நாள்கள் ஆகும் என்பதை உணர்ந்த சே மியாமியிலுள்ள ஒரு சிறிய விடுதியில் தங்கிக்கொண்டார். அமெரிக்காவின் அந்தச் சிறு பகுதியைச் சுற்றிச் சுற்றி வந்தார் சே. செப்டம்பர் 1952ல் விமானம் பழுது பார்க்கப்பட்டு அர்ஜென்டினா வந்து சேர்ந்தார்.

இந்தப் பயணம் மிகவும் விரிவான ஓர் அனுபவத்தை சேவுக்கு வழங்கியது. பல்வேறு விதமான மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக முக்கியமாக, லத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்த நேரடிப் பரிச்சயமும் கிடைத்தது.

The Motorcycle Diaries முதன் முறையாக க்யூபாவில் 1993ல் வெளிவந்தது. சேவின் இந்தத் தென் அமெரிக்கப் பயணத்தைப் பற்றி பின்னர் பல கட்டுக்கதைகள் கட்டப்பட்டன. சேவின் அரசியல் அறிவு முதிர்ச்சிப் பெற்றது இந்தப் பயணத்தில்தான் என்று பலர் வாதாடினார்கள். அதே போல், ஒரு புரட்சியாளராக சே பின்னால் மாறுவதற்கும் இந்தப் பயணம் அடித்தளம் அமைத்ததாகச் சொல்கிறார்கள். இவை உண்மைக்குப் புறம்பானவை. சே தன் கைப்பட எழுதிய சொந்தக் குறிப்புகளோடு இந்தக் கதைகள் பொருந்தவில்லை.

தென் அமெரிக்கப் பயணத்தின் போது சே குவேராவின்அரசியல் பார்வை அத்தனை வளமானதாக இல்லை. அதற்கு ஓர் உதாரணம், பொலிவியாவில் நடைபெற்ற விவசாயப் புரட்சியைப் பற்றி ஒற்றை வரிச் செய்தியைக் கூட சே பதிவு செய்யவில்லை. லத்தீன் அமெரிக்காவின் மிக முக்கியப் புரட்சி இது.

சே ஒரு பத்திரிக்கையாளர் கிடையாது. ஓர் அரசியல் விமர்சகரும் கிடையாது. சுதந்தரத்தையும் கேளிக்கையையும் நாடும் ஒரு மருத்துவ மாணவர் மட்டுமே. இந்த வகையில்தான் நாம் அவருடைய குறிப்புகளை அணுக வேண்டியிருக்கும். பின்னர், ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தபோதுதான் சேவின் அரசியல் பார்வை விசாலமடைந்தது. ஒரு புரட்சியாளகராக அவர் மாறியதும் அப்போதுதான்.

(கல்கியில் வெளிவந்த என் கட்டுரை)

February 25, 2009

அமெரிக்காவின் அடுத்த போர்


தொட்டில் பழக்கம். மீண்டும் போரைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இராக்குக்குப் பிறகும். பொருளாதாரச் சீரழிவுக்குப் பிறகும். இரு எதிரிகள். அல் காயிதா மற்றும் தாலிபன். இரு தேசங்கள். பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தான். ஒரே கல்லில் அடித்து வீழ்த்திவிடலாம் என்கிறார்கள் ராணுவ ஆலோசகர்கள். தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போர். புஷ் சென்ற அதே திசை. புஷ் கையாண்ட அதே கொள்கை. புஷ் காட்டிய அதே தீவிரம்.

இப்போது தொடங்கினால் சரியாக இருக்கும். இதைவிட்டால் இன்னொரு சந்தர்பம் அமையாது. அடித்து ஆடுவோம். ஜெயித்துவிடலாம். பராக் ஒபாவுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். அபாயம், ஆபத்து, எச்சரிக்கை என்று சிவப்பு மையில் கொட்டைக் கொட்டையாக எழுதி பக்கம் பக்கமாக ரிப்போர்ட்டுகளை அள்ளி கொண்டு வந்து அவர் மேஜையில் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். மிஸ்டர் பிரஸிடெண்ட், இன்னொரு போரா என்று மிரள வேண்டாம். அநாவசிய தயக்கம் வேண்டாம். மக்கள் ஒருபோதும் போரை வெறுப்பதில்லை. தோல்வியைத்தான் வெறுக்கிறார்கள். நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர். ஆல் தி பெஸ்ட்.

அல் காயிதா வறண்டுவிட்டது, அவர்களால் பெரும் திட்டங்களை இனி தீட்டமுடியாது என்று சற்று முன்னால்தான் அறிவித்திருந்தார் ஒபாமா. தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டார். காரணம், ஒபாமா எதிர்பார்த்ததைப் போல் அல்லாமல் அல் காயிதா விழித்துக்கொண்டுவிட்டது. பாகிஸ்தான் எல்லைப் பிரதேசங்களில் இருந்து அதற்கான சமிக்ஞைகள் கிடைத்துவிட்டன. ஏற்கெனவே தாலிபன்கள் பரவியிருக்கும் பிரதேசம். இரு அபாயங்கள் ஒரே இடத்தில் கைகோர்த்துக்கொள்வது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. உலகத்துக்கும். இதைத் தடுக்கவேண்டும். ஆப்கனிஸ்தான் மீது கவனம் செலுத்தினால் போதும் என்று நினைத்திருந்தோம். பாகிஸ்தானும் சேர்ந்துவிட்டது. இது எதிர்பாராத திருப்பம்.

அல் காயிதா அலுவலகத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட வீடியோ மிரட்டல் அமெரிக்காவை நிமிர்த்தி உட்கார வைத்திருக்கிறது. இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த டேப்பில் பேசியிருப்பவர் அல் ஜவஹிரிக்கு அடுத்த நிலையில் இருக்கும் முஸ்தபா அபு யாசித். பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணத்தை இந்தியா விட்டொழிக்கவேண்டும். பாகிஸ்தான் மீது குண்டு அல்ல குண்டின் நிழல் விழுந்தாலும் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. ஜர்தாரி ஒழிக்கப்படவேண்டியவர் என்பதில் சந்தேகம் இல்லை. பாகிஸ்தான் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை ஆட்சியில் இருந்து தூக்கியெறியவேண்டியது அவசியம். அது தனி கதை. இந்தியா இதில் தலையிடக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.

இந்தியாவை எச்சரித்ததற்கு அமெரிக்கா ஏன் எரிச்சல் கொள்ளவேண்டும்? காரணம் இந்த முஸ்தபா அபு யாசித் அல் காயிதாவின் ஆப்கன் பிரிவுத் தலைவர். இவர் பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறார் என்றால் அவர் படைப்பிரிவும் அங்கேதான் இருக்கிறது என்று பொருள். ஆப்கனிஸ்தானைத் தாலிபன்களிடமும் பாகிஸ்தானை அல் காயிதாவிடமும் பிய்த்துக்கொடுத்துவிட்டால் அமெரிக்காவின் கதி என்னவாகும்? இரு குழுக்களுக்குமே அமெரிக்கா எதிரி என்னும்போது, எப்படி இதை அனுமதிப்பது? இன்னொரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் அமெரிக்கா இல்லை. ஒபாமாவின் ஆலோசகர்கள் பதற்றம் கொள்வதற்கு இதுவே காரணம்.

முறைப்படி போரைத் தொடங்குவதற்கு முன்னால் ஒரு சர்வே செய்துபார்த்துவிட முடிவெடுத்திருக்கிறது அமெரிக்கா. இப்போதைய திட்டம் இதுதான். அமெரிக்காவின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் ரிச்சர்ட் ஹால்புரூக் ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் இரு தேசங்களுக்கும் நேரில் சென்று நிலைமையை ஆராயவேண்டும். வரும் வழியில், இந்தியாவுக்கு ஒரு பயணம். அவர்கள் திட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இது நடந்துவிட்டால், தெளிவான ஒரு சித்திரம் கிடைத்துவிடும். நல்ல நாளாகப் பார்த்து ஆள்களைக் கொண்டுபோய் இறக்கி வேலையை ஆரம்பித்துவிடவேண்டியதுதான்.

பிரிட்டனும் தன் பங்குக்கு ஒரு தூதரை தயார் செய்துவிட்டது. ஷெரார்ட் கூப்பர் கோல்ஸ். ஆப்கனிஸ்தானுக்கான தூதர். அமெரிக்கத் தூதரோடு இவர் இணைந்து செயல்படுவார். பொருளாதார வீழ்ச்சியில் கூடியவிரைவில் அமெரிக்காவைத் தொட்டிவிடும் நிலையில் இருக்கிறது பிரிட்டன். ஏற்கெனவே நொடித்துப் போயிருக்கிறோம் ஐயா, தயவு செய்து எங்கள் மீது குண்டு போடாதீர்கள் என்று பொதுக்கோரிக்கை வைக்கலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சென்ற வாரம் வரை 1.97 மில்லியன். இன்னும் மூன்று மாதங்களில் 2 மில்லியன் ஆகிவிடும். ஆனாலும் போர் என்று வந்துவிட்டால் அமெரிக்காவுக்குத் தோள் கொடுத்தாகவேண்டும். அமெரிக்காவின் எதிரி பிரிட்டனின் எதிரியும்தானே?

கிட்டத்தட்ட கூட்டணி தயார். அமெரிக்கா, பிரிட்டன். ஆதரவுக்கு இந்தியா. போருக்கான அவசியத்தையும் பாகிஸ்தானிடம் எடுத்துச் சொல்லியாகிவிட்டது. வேறு வழி தெரியவில்லை நண்பரே. நாங்கள் மட்டுமல்ல பாகிஸ்தான் மக்களும்கூட இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். தலைக்கு மேலே போய்விட்டது. அல் காயிதாவையும் தாலிபன்களையும் உங்களால் சமாளிக்கமுடியாது. சர்வதேச ஒத்துழைப்பும், உதவியும், அனுதாபமும் உங்களுக்குத் தேவைப்படுகின்றன. தயாராக இருங்கள். எந்நேரமும் ஆரம்பிக்கலாம்.

பாகிஸ்தானில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துவிட்டது. எல்லைப்பிரதேசத்தைத் தாக்குகிறோம் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவும் நேடோவும் வாரம் இருமுறை குண்டு தூவிக்கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதிகள் அல்ல, ஆப்கன் பழங்குடிகள்தான் பெருமளவில் இறந்துகொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானியர்களும். ஆப்கனில் தொடர்ந்துகொண்டிருக்கும் யுத்தமே பாகிஸ்தானை அலைகழித்துக்கொண்டிருக்கிறது எனும்போது பாகிஸ்தானை நேரடியாகத் தாக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும்? ஆப்கனிஸ்தான் மக்களுக்கும் இதே கவலைதான். தற்சமயம் 32,000 வீரர்கள் ஆப்கன் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கூடுதலாக 30,000 பேரை அனுப்பப்போவதாகச் சொல்லியிருக்கிறார் ஒபாமா. ராணுவத்தில் பலம் இரட்டிப்பாகும்போது இழப்பின் பலமும் இரட்டிப்பாகப்போகிறது. என்ன செய்வது?

போர் நிச்சயம் என்று அமெரிக்கா முடிவெடுத்துவிட்டால், ஐந்து விளைவுகளை உலகம் எதிர்பார்க்கலாம். முதல் அடி அமெரிக்காவுக்கு. தேசத்தைத் தூக்கி நிறுத்தும் பணி தொய்வடையும். அமெரிக்கர்களின் பணமும் பொருளும் கவனமும் உழைப்பும் மற்றுமொரு வேரழிவுக்குச் செலவிடப்படும். ஏற்கெனவே பள்ளத்தில் இருக்கும் அமெரிக்கா பாதாளத்துக்குப் பாயும்.

ஆப்கனிஸ்தான் நாசமாகும். தாலிபன்கள் ஒரு பக்கமும் அமெரிக்கர்கள் இன்னொரு பக்கமும் மாறி மாறி ஆப்கனை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். முழுநீளப் போர் ஆரம்பமானால், சருகுகள்கூட மிஞ்சியிருக்காது. மூன்றாவது விளைவு பாகிஸ்தானின் அழிவு. போராட்டங்களும் கிளர்ச்சிகளும் இப்போதே தொடங்கிவிட்டன. இராக்கில் இருந்து வெளியேறப்போகிறோம் என்னும் ஒபாமாவின் அறிவிப்பால் கிடைத்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரும் அழிந்துபோகும். ஒபாமா மட்டுமல்ல யார் வந்தாலும் அமெரிக்காவுக்கு மாற்றம் சாத்தியமல்ல என்பது நிரூபணமாகும்.

தீவிரவாதம் இன்னும் அதிகமாகும். சுண்டைக்காய் தேசமான இராக்கில் மாட்டிக்கொண்டு இன்று வரை அமெரிக்கா விழிபிதுங்கிக்கொண்டிருப்பது ஏன்? அமெரிக்காவைவிட இராக்கின் படைபலம் பெரிதா? ஆப்கனிஸ்தான்? கஞ்சா செடிகளும் குகைகளும் கொண்ட ஒரு பாழடைந்த தேசத்தை இன்றுவரை அமெரிக்காவால் வெல்லமுடியாமல் இருப்பது ஏன்? காரணம், அமெரிக்காவுடன் மோதிக்கொண்டிருப்பது இராக் ராணுவமும் ஆப்கன் ராணுவமும் அல்ல. இராக்கியர்களும் ஆப்கனிஸ்தான் மக்களும்தான். ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு வெல்வது சுலபம். மக்களை வெல்வது கடினம்.

அந்த வகையில், ஆப்கனிஸ்தானையோ பாகிஸ்தானையோ அமெரிக்காவால் எதிர்கொள்ளமுடியாது. மாறாக, தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் அப்பகுதி மக்கள் மூலமாகக் கிடைத்துவரும் ஆதரவு மேலும் பலமடையும். அமெரிக்கத் தீவிரவாதத்தோடு ஒப்பிடும்போது உள்ளூர் தாதாக்கள் எவ்வளவோ மேல். இதைத் தவிர்க்கமுடியாது. அறுபதாயிரம் அல்ல ஆறு லட்சம் பேர் வந்தாலும் ஆப்கனையும் பாகிஸ்தானையும் வெல்ல முடியாது.

கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அமெரிக்கா அலறுவது போல் உண்மையில் ஆப்கன் பாக் எல்லை அத்தனை பயங்கரமானதா? இங்கிருந்துகொண்டுதான் அல் காயிதா பயிற்சி எடுத்துக்கொள்கிறதா? இங்கிருந்துகொண்டுதான் திட்டமிடுகிறதா? தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இந்தப் பிரதேசம் மட்டும்தானா? நினைவிருக்கட்டும். செப்டம்பர் 11 தாக்குதல் திட்டம் பெருமளவில் உருவானது பாகிஸ்தானிலோ, ஆப்கனிஸ்தானிலோ அல்ல. ஜெர்மனியில். ஃப்ளோரிடாவில். போரைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னால், இல்லாத இடத்தில் எதையோ தேடி எதையெதையோ பெற்றுக்கொண்ட புஷ்ஷின் கதையை ஒபாமா ஒரு முறை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)

February 23, 2009

அல்ஜீரியா தொடர்கிறது


முதல் பகுதி இங்கே.

அல்ஜீரியப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அது பற்றி எழுதியும் பேசியும் வந்த இரு பெரும் ஃபிரெஞ்சு எழுத்தாளர்கள், அல்பேர்ட் காம்யு மற்றும் ழான் பால் சார்த்தர்.

முதலில், அல்பேர்ட் காம்யு (Albert Camus). இவர் அல்ஜீரியாவில் பிறந்தவர். தத்துவம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் ஆர்வம் செலுத்தியவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். அல்ஜீரிய மக்களின் விடுதலை வேட்கையை மிகச் சாதுரியமாக ஒதுக்கித்தள்ளுகிறார் காம்யு. ஃபிரெஞ்சு காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் எஃப்.எல்.என். இயக்கத்தை அறிவுஜீவிகள் யாரும் ஆதரிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறார். அவ்வாறு செய்வது ஆபத்தானது என்று சுட்டிக்காட்டுகிறார்.

காம்யு முன்வைக்கும் தீர்வு இதுவே. ஃபிரெஞ்சு மக்களோடு அல்ஜீரிய முஸ்லீம்கள் கைகோர்த்துக்கொள்ளவேண்டும். அவர்களுடன் ஒத்துப்போகவேண்டும். அதைவிட்டுவிட்டு கொடிபிடித்து போராடுவதும் கோஷம் போடுவதும் பயன் தராது. அல்ஜீரியா விடுதலைப் பெறவேண்டும் என்னும் கோஷம் உணர்ச்சிமயமானது. யதார்த்தமானது அல்ல. ஃபிரெஞ்சு ராணுவத்தின் சித்திரவதைகளை சிறிது காலம் கண்டித்துப்பேசிய காம்யு தன் இறுதி காலத்தில் அதையும்கூட நிறுத்திக்கொண்டார்.

ழான் பால் சார்த்தர் (Jean-Paul Sartre) 1929 முதல் 1931 வரை ஃபிரெஞ்சு ராணுவத்தில் கட்டாயப் பணியாற்றியவர். அரசியல் போக்குகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த சார்த்தர், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்படுகிறார். போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்டு வெளிப்படையாக ஆதரிக்கவும் செய்கிறார். எரிச்சலைடந்த ஃபிரெஞ்சுக்காரர்கள் சிலர் அவர் வீட்டு வாசலில் வெடிகுண்டு வைக்கிறார்கள். சார்த்தரின் சீற்றம் அதிகரிக்கிறது. ஒடுக்குமுறையை கையாளும் ஐரோப்பியரைக் கொன்றால் தவறே இல்லை என்று ஒரு புத்தகத்தின் முன்னுரையில் எழுதினார். தன் இறுதி காலம் வரை பல்வேறு அரசியல் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருக்கும் இலக்கியத்துக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. சார்த்தர் மறுத்துவிட்டார்.

ஒரே காலகட்டம். ஒரே போர். காம்யு பிரான்ஸை ஆதரித்திருக்கிறார். சார்த்தர், அல்ஜீரியாவை. காலனியாதிக்கத்தைக் கொண்டாடும், நியாயப்படுத்தும் வழக்கம் பல முக்கிய எழுத்தாளர்களுக்கு இருந்திருக்கிறது. Evelyn Waugh எழுதிய Waugh in Abyssinia சட்டென்று நினைவுக்கு வருகிறது. இத்தாலியர்களின் ஆக்கிரமிப்பு அபிசீனியாவுக்குத் தேவை என்று காலனியாதிக்கத்தை வரவேற்று எழுதியிருப்பார் ஆசிரியர். இந்தப் புத்தகம் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

1) The Torture of Algiers, Adam Shatz
2) My Encounter with Sartre by Edward Said

February 22, 2009

கெரில்லாக்கள் எப்படி உருவாகிறார்கள்?


ஒரு கெரில்லா இயக்கத்தை ஆரம்பிப்பது சிரமமானது. அதைவிட சிரமமானது இயக்கத்தை தொடர்ந்து நடத்துவது. தொடர்ந்து நடத்துவதைக் காட்டிலும் சிரமம் தரக்கூடியது புரட்சி நடத்தி வெற்றி பெறுவது. வெற்றி பெறுவதைக் காட்டிலும் சிரமமானது எது தெரியுமா? வெற்றிக்குப் பிறகும் புரட்சியைத் தொடர்வது.

The Battle of Algiers என்னும் ஃபிரெஞ்சுத் திரைப்படத்தில், FLN (National Liberation Front) இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சக போராளியிடம் கூறும் வாசகம் இது. இன்று காலை, யுடிவி தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டது. ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கும் (பிரான்ஸ்) கெரில்லா போராளிகளுக்கும் (FLN) இடையில் நடைபெறும் யுத்தங்களின் தொகுப்பே இப்படம். நவம்பர் 1954ல் ஆரம்பித்து டிசம்பர் 1960 வரை அல்ஜீர்ஸில் (அல்ஜீரியாவின் தலைநகரம்) நடைபெற்ற போராட்டங்களை கண்முன் நிறுத்துகிறது இந்தப் படம்.

1830ல் ஃபிரெஞ்சுப் படை அல்ஜீர்ஸை நெருங்கியது. நகரம் சூறையாடப்பட்டது. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார்கள். மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஃபிரெஞ்சுக் கொடியை பறக்கவிட்டு வெற்றி வெற்றி என்று ராணுவத்தினர் கொண்டாட ஆரம்பிப்பதற்குள், பாரீஸில் பத்தாம் சார்லஸ் மன்னர் தூக்கியெறியப்பட்டிருந்தார். அவர் உறவினர் லூயி ஃபிலிப் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். ராணுவத்தினருக்குக் குழப்பம். இப்போதுதான் அல்ஜீரியாவை சுற்றிவளைத்திருக்கிறோம். இந்த நேரம் பார்த்தா ஆட்சி மாறவேண்டும்? பாரீஸில் பெரிய அளவில் விவாதம் கிளம்பியது. அல்ஜீரியாவை என்ன செய்வது? ஆக்கிரமிக்க வேண்டாம் விலகிவிடலாம் என்றே பலரும் அபிப்பிராயப்பட்டனர். எதற்கு வம்பு? ஆக்கிரமிப்பைத் தொடங்கிய முந்தைய மன்னரை மக்கள் தூக்கியடித்துவிட்டனர். அதே முடிவை நாமும் எடுத்தால் ஆபத்து அல்லவா?

எதிர்பாராத வகையில் புதிய மன்னர் அல்ஜீரிய ஆக்கிரமிப்பைத் தொடரலாம் என்றே முடிவு செய்தார். இப்போதுதான் நுழைந்திருக்கிறோம், உடனே விலகினால் நமக்குத்தான் சேதம் அதிகம் என்று வியாக்கியானம் கொடுத்தார் மன்னர். ராணுவத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டால் நாளை ஊர், உலகம் என்ன சொல்லும்? சுண்டைக்காய் அல்ஜீரியாவிடம் பயந்து பின்வாங்கிவிட்டோம் என்று ஏளனம் செய்யாதா? மாமன்னர் நெப்போலியன் ஆண்ட மாபெரும் ஃபிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்துக்கு அவமானத்தைப் பெற்றுத்தரலாமா? ஆகவே, எனதருமை மக்களே, இந்த ஆக்கிரமிப்புக்கு உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள். 1834ல் பிரான்ஸ் அல்ஜீரியாவை முறைப்படி (என்றால் முறையற்ற முறையில்) தனது காலனியாக இணைத்துக்கொண்டது. அப்போது அல்ஜீரியாவில் இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியன்.

இந்தப் பின்னணியில் விடுதலைக்கான வேட்கையை மக்களிடையே தூண்டிவிடும் காரியத்தில் இயங்குகிறது எஃப்.எல்.என். இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்திவைப்பதில் ஆரம்பித்து மக்களுக்குப் பாதுகாப்பு தருவதுவரை பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். மாட்டிக்கொண்டால் கில்லடினுக்குத் தலையைக் கொடுத்துவிடவேண்டும் என்பதால் பதுங்கிப் பதுங்கிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது இக்குழு.

தகுந்த இளைஞர்கள் தேடிப்பிடிக்கப்படுகிறார்கள். சிறுவர்கள் உளவு கண்டறிந்து சொல்கிறார்கள். வெள்ளை முக்காடு அணிந்த பெண்கள் ஆயுதங்கள் கடத்துகிறார்கள். தாக்குதல்கள் ஆரம்பிக்கின்றன. யாரைக் கொல்லவேண்டும் என்பதை தலைமை முடிவு செய்யும். தனியாக அகப்படும் ஃபிரெஞ்சு ராணுவ வீரர்கள் முதலில் பலியாகிறார்கள். நகரம் முழுவதும் படுகொலைகள் ஆரம்பமாகின்றன.

ஃபிரெஞ்சு ராணுவம் நகரத்தை சுற்றி வளையம் ஒன்றை ஏற்படுத்துகிறது. ராணுவத்தினர் குவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு தெருமுனையிலும் பாதுகாப்பு அரண். பரிசோதனை இல்லாமல் ஒருவரும் தெருவைக் கடக்கமுடியாது. கெரில்லா குழு புதிய வியூகம் ஒன்றை அமைக்கிறது. கொல்லும் வேலை ஒருவருக்கு அளிக்கப்படும். பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே துப்பாக்கியை மறைத்துவைக்கும் பணி இன்னொருவருக்கு. பரிசோதனை முடிந்து வெளியே வரும் நபருக்கு துப்பாக்கியைக் கொண்டுபோய் சேர்க்கும் வேலை மூன்றாவது நபருக்கு. கொல்லப்படும் ஃபிரெஞ்சு வீரரிடம் இருந்து ஆயுதம் பறிமுதல் செய்யப்படுகிறது.

அடுத்த கட்டம், வெடிகுண்டு தாக்குதல். குண்டுகள் வைக்கும் பணி பெண்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. நீளமான தலைமுடியைக் கத்தரித்துக்கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொண்டு, பிரெஞ்சுப் பெண்களைப் போல் குட்டைப் பாவாடை, மேல் சட்டை அணிந்துகொண்டு தோள்பையுடன் கிளம்புகிறார்கள் பெண்கள். பையில் குண்டு. ஒருவர் விமான நிலையத்தில் பையைக் கொண்டுபோய் வைக்கிறார். இன்னொருவர், மதுபான விடுதியில். மூன்றாமவர், சந்தையில். மூன்றும் அடுத்தடுத்து வெடிக்கின்றன. பிரெஞ்சு மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகிறார்கள்.

கெரில்லாக்கள் எதிர்பார்த்தபடியே அல்ஜீர்ஸீல் வசிக்கும் ஃபிரெஞ்சு மக்கள் கொந்தளிக்க ஆரம்பிக்கிறார்கள். உங்களை நம்பித்தானே இங்கே குடிபெயர்ந்தோம். எங்கள் உயிருக்கு உங்களால் உத்தரவாதம் அளிக்கமுடியாதபோது நாங்கள் ஏன் இங்கே இருக்கவேண்டும்? பாரீஸிலும் மக்கள் கேள்விகேட்க ஆரம்பிக்கிறார்கள். பிரெஞ்சு அரசாங்கத்துக்கு அதிருப்தி. கூடுதலாக, எரிச்சல். ஒரு காலனியை கட்டிக்காப்பது லேசான செயல் அல்ல என்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஆனாலும், பிடிவாதமாக கூடுதல் துருப்புகளை அனுப்புகிறார்கள். தீவிரவாதிகளை உடனே நசுக்குங்கள். விடுதலைப் போராட்டத்தை முடக்குங்கள்.

மூர்க்கத்துடன் எஃப்.எல்.என் தலைமையைத் தேட ஆரம்பிக்கிறது ஃபிரெஞ்சுப் படை. குத்துமதிப்பாகப் பலரை பிடித்துச்சென்று சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார்கள். சொல்லு, எங்கே உன் தலைவர்? உங்கள் நபர்கள் எங்கே மறைந்திருக்கிறார்கள்? மின்சாரம் பாய்ச்சுகிறார்கள். தலைகீழாக நிற்கவைத்து அடிக்கிறார்கள். உடலில் துளை போடுகிறார்கள்.

இரு தரப்பினருக்கும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருகின்றன. மறைவிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது தலைமை. நான்கைந்து பேரே இறுதியில் எஞ்சுகிறார்கள். என்னை விடுங்கள் நான் சென்று தாக்குகிறேன் என்று ஒரு போராளி கண்கள் சிவக்க சொல்லும்போது, மூத்தவர் அவரைச் சாந்தப்படுத்துகிறார். நாமும் உயிருடன் இல்லாவிட்டால் இயக்கம் அழிந்துவிடும். தலைவர்கள் என்பதற்காக அல்ல, இயக்கத்துக்காகவது நாம் நம்மைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கடுமையான அடக்குமுறையால் 1860ல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். இயக்கம் செத்துப்போகிறது. அப்பாடா கெரில்லாக்கள் ஒழிந்தார்கள் என்று நிம்மதியடைகிறது ராணுவம். இரண்டு ஆண்டுகள் அல்ஜீரியாவில் சிறு சலனமும் இல்லை. 1962ல் மீண்டும் கலகம் தொடங்குகிறது. திகைத்து நின்றது பிரான்ஸ். முதல் கல்லை வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை. பெண்கள் தெருவில் இறங்கி கூச்சல்போட்டது எப்படி என்று தெரியவில்லை. சுதந்தரம் வேண்டும், ஃபிரெஞ்சுப் படையே வெளியே போ என்ற சிறுவர்களும் சிறுமிகளும் எப்படி கோஷமிட்டார்கள் என்று தெரியவில்லை. சட்டையை, கந்தல் துணியை, பர்தாவை கிழித்து, தேசியக்கொடிகளை உருவாக்கிக்கொண்டார்கள். முன்வரிசையில் இருந்தவர்கள் செத்து விழும்போது, அடுத்து வரிசை மக்கள் கொடியை ஏந்தியபடி முன்னால் வந்து நின்றார்கள். டாங்கிகளை உருட்டிக்கொண்டு வந்தது ராணுவம். விமானங்களை தலைக்கு மேலே பறக்கவிட்டு பயமுறுத்தியது. கண்டவுடன் சுட உத்தரவு போட்டது. முடியவில்லை. இனி தாங்காது என்னும் நிலையில் ஜூலை 5, 1962ல் ஃபிரான்ஸ் அல்ஜீரியாவைவிட்டு ஓடிப்போனது.

கறுப்பு வெள்ளையில் ஓடும் இந்தப் படம் 1966ல் வெளிவந்தது. திரைக்கதைக்காகவும் யதார்த்தமான பாத்திரப் படைப்புக்காகவும், காட்சியமைப்புகளோடு கலந்து நிற்கும் இசைக்காகவும் இன்றுவரையில் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது இப்படம். மேம்போக்காகப் பார்த்தால் இது கெரில்லா போராளிகளுக்கு ஆதரவான படம் போல் தோன்றலாம். உண்மை அதுவல்ல. சாகஸக்காரர்களாகவோ கதாநாயகர்களாகவோ எஃப்.எல்.என் இயக்கத்தினர் காண்பிக்கப்படவில்லை. அதே போல், ஃபிரெஞ்சு ராணுவத்தினரையும் வில்லன்களாக உருமாற்றவில்லை இப்படம். அல்ஜீர்ஸ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் சித்திரவதைகளையும் ஏற்றுநடத்தும் ஃபிரெஞ்சு உயர் கமாண்டர் சாந்தமான முகபாவத்துடன் காட்சியளிக்கிறார்.

தீவிரவாதிகளைக் கொல்கிறோம் என்னும் பெயரில் அப்பாவி மக்களைக் கொல்வது, சித்திரவதை செய்வது தவறில்லையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது அந்த அதிகாரி அமைதியான குரலில் அளிக்கும் பதில் இது. போரில், சரி தவறு என்று எதுவும் இல்லை. சித்திரவதை செய்வதை நம் சட்டம் அனுமதிப்பதில்லை என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். நாங்கள் செய்வது விசாரணைதான். அதில் சிலர் இறக்க நேரிடலாம். ஒன்றும் செய்வதற்கில்லை. உங்களுக்கு வெற்றி வேண்டுமானால் எங்களை நச்சரிக்காமல் இருங்கள். வழிமுறைகள் பற்றி கவலைப்படவேண்டாம்.

கெரில்லாக்களின் நீதியும் இதுவேதான். ஆக்கிரமிப்பாளர்கள் ஆயுதம் ஏந்துவதால்தான் நாங்களும் ஆயுதம் ஏந்துகிறோம். அவர்கள் எங்களை மட்டும் கொல்வதில்லை. எங்கள் மக்களையும் சேர்த்தே கொல்கிறார்கள். நாங்கள் எங்கள் எதிரிகளை மட்டும் கொல்வதில்லை. எதிரி தேசத்து மக்களையும் சேர்த்தேதான் கொல்கிறோம். எங்கள் போராட்ட முறையை எங்கள் எதிரிகளே தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆக்கிரமிப்பாளர்கள் மறைவதில்லை. ஆகவே, கெரில்லாக்களும்.

February 16, 2009

ஹியூகோ சாவேஸின் வெற்றி


சில முக்கிய அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு ஏற்ப அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி அமைக்கலாமா என்று கேட்டு 2007ல் வெனிசூலாவில் கருத்துக் கணிப்பு தேர்தல் நடத்தப்பட்டது. வேண்டாம் என்று மக்கள் வாக்களித்தார்கள். கடந்த ஞாயின்று மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த முறை சாவேஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.

வெனிசூலாவில் சோஷலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது ஹியூகோ சாவேஸின் கனவு. இது சாத்தியமாகவேண்டுமானால் 2013ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் சாவேஸ் மூன்றாவது முறையாகப் போட்டியிடவேண்டும். நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் இதை அனுமதிக்காது. ஒருவருக்கு இரு வாய்ப்புகள் மட்டுமே.

செய்வதற்கு இன்னும் நிறைய பாக்கியுள்ளது. மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். நிலச்சீர்திருத்தம் பெரிய அளவில் வெற்றிபெறவேண்டும். குறைந்தது பத்து ஆண்டுகளாவது அளித்தால்தான் என்னால் இவற்றை சாதிக்கமுடியும். ஆகவே, அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும். உங்கள் அனுமதி தேவை. சாவேஸின் இந்தக் கோரிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இனி, வெனிசூலாவில், யாரும் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆட்சியைத் தொடரலாம். இதெப்படி ஜனநாயக முறையாகும் என்கிறார்கள் சாவேஸ் எதிர்ப்பாளர்கள். சாவேஸின் சோஷலிச சீர்திருத்தங்களை அங்குள்ள தனியார் நிறுவனங்கள் தீவிராக எதிர்த்துவருகின்றன. இன்னும் பத்து ஆண்டுகள் சாவேஸா, ஐயோ தாங்காது என்று அலறுகிறார்கள். சாவேஸ் தயாராகிவிட்டார். போட்டியிடுவதற்கு. போராடுவதற்கு.

(மோதிப் பார்! : ஹியூகோ சாவேஸ் பற்றி நான் எழுதிய புத்தகம்)

நூல் அறிமுகம் : Les Miserables

இது தேறாது என்றது முதல் விமரிசனம். விக்டர் ஹியூகோவிடம் இருந்து இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை என்றனர் தேர்ந்த இலக்கிய விமரிசகர்கள். இதையெல்லாம் யார் காசு கொடுத்து வாங்கிப் படிக்கப்போகிறார்கள் என்று உதடு பிதுக்கினார்கள் சக எழுத்தாள நண்பர்கள். ஒரு கவிஞராக விக்டர் ஹியூகோ அறியப்பட்டிருந்த சமயம் அது. இந்தா ஒரு காவியம் வைத்துக்கொள் என்று ஹியூகோ திடுதிடுப்பென்று கத்தை காகிதங்களை எடுத்து நீட்டியபோது இலக்கிய உலகம் பின்வாங்கியது. ஒரு காவியமாக அல்ல, ஒரு நாவலாகவும்கூட அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். ஆகவே நிராகரித்தார்கள்.

கத்திரிக்கோல் போடாமல் அளித்தால் ஆயிரத்து இருநூறு பக்கங்களுக்கு நீண்டுவிடும் நாவல் அது. இருநூறு பக்கங்களிலும் கிடைக்கிறது. சுருக்கப்பட்டப் பதிப்பாக. ஜன்னல் வழியாக எட்டி வானத்தைப் பார்ப்பதற்கும் வீட்டை விட்டு வெளியில் வந்து அண்ணாந்து பார்த்து வானத்தை ரசிப்பதற்குமான இடைவெளிதான் இரண்டுக்கும். என்றாலும், அந்த இருநூறு பக்க புத்தகத்தை வாசித்தாலே லே மிஸரபிளின் பிரமாண்டம் நம்மை சட்டென்று தாக்கிவிடுகிறது.

ஒரு துண்டு ரொட்டியில் இருந்து தொடங்குகிறது கதை. பசி என்னும் கொடும் நோயால் பாதிக்கப்படும் ழான் வால்ஜீன் (Jean Valjean), தனக்காகவும் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்காகவும் வேண்டி சில ரொட்டி துண்டுகளைத் திருடிவிடுகிறான். இது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று சொல்லி பிரெஞ்சு அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடுகிறது. ஐந்து ஆண்டு சிறைவாசம். முடிந்து வெளியில் வந்துவிட்டாலும் அடுத்து என்ன செய்வது என்று வால்ஜீனுக்குத் தெரியவில்லை.

மீண்டும் திருடுகிறார். இந்த முறை ஒரு பாதிரியாரின் வீட்டில் இருந்து. சற்று விலையுயர்ந்த ஒரு பொருளை. எப்படியும் சிறை. எதற்கு ரொட்டியைத் திருடிக்கொண்டிருக்கவேண்டும்? அதிகாரிகள் விலங்கோடு ஓடிவருகிறார்கள். ஆனால் பாதிரியார் அவர்களை தடுத்துவிடுகிறார். ஐயா, இவர் நல்லவர். குறிப்பிட்ட பொருளை அவர் திருடவில்லை. அதை நான்தான் அவருக்கு அன்பளித்தேன்.

வால்ஜீன் இதை எதிர்பார்க்கவில்லை. அன்பும் நேசமும் முழுமுற்றாக இன்னமும் அழிந்துவிடவில்லையா? ஒரு திருடனான என் மீது ஏன் இந்தப் பாதிரியார் இரக்கம் காட்டவேண்டும்? ஆறு ஆண்டுகளில் புதிய மனிதராக மாறிவிடுகிறார் வால்ஜீன்.

இப்போது வால்ஜீன் ஒரு செல்வந்தர். பளபளப்பும் மினுமினுப்பும் செல்வாக்கும்கூடிய முக்கியப்புள்ளி. முகம் தெரியாத பாதிரியாரிடம் இருந்து பெற்ற நேசத்தை பிறருக்கும் பரப்பிவிடும் துடிதுடிப்புடன் அமைதியாக இயங்கிக்கொண்டிருக்கிறார் வால்ஜீன். ஆனால் காவலாளிகள் சமூகம் மட்டும் இவரை குறுகுறுப்புடன் நிழலாகப் பின்தொடர்கிறது. இவனைப் பார்த்தால் பழைய குற்றவாளி போல் தெரிகிறதே! விடாதே, பிடி! காவல் வளையத்தையும் சந்தேகப் பார்வைகளையும் கடந்து வால்ஜீனின் பயணம் தொடர்கிறது. தனிப்பட்ட முறையில் தனக்கு என்று இனி வாழ்க்கை எதுவும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒரு சிறுமியை தத்தெடுத்து வளர்க்கிறார். அவள் வளர்ந்து காதலிக்க ஆரம்பித்தபோது அருகில் இருந்து அரவணைத்துக்கொள்கிறார். ஐயோ நீங்கள் ஒரு முன்னாள் குற்றவாளியா, சேச்சே இது தெரியாமல் உங்கள் பெண்ணை காதலித்துவிட்டேனே என்று மருமகன் முகம் சுளித்தபோது, புன்முறுவலுடன் தன் கதையை விவரிக்கிறார். சிறு சலனமும் இல்லாமல் இறந்துபோகிறார்.

மொத்தம் 5 பாகங்கங்களில் நீளும் இந்நாவலின் மையக்கதை இதுதான். கதை நடக்கும் காலம், 1815ம் ஆண்டு. ஒரு ஊரில் ஒரு வால்ஜீன் என்று தொடங்கி அவர் வாழ்க்கையை விவரிப்பதோடு நின்றிருந்தால் லே மிஸரபிளை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்க மாட்டோம். நாவல் என்பதற்கு ஒரு படி மேலே போய், தான் வாழ்ந்த காலகட்டத்தின் ஒரு கண்ணாடியாகவே மாறிவிடும் விக்டர் ஹியூகோ தன் சமூகத்தை மிக தத்ரூபமாக இந்நாவலில் பிரதிபலிக்கிறார். மிக விரிவாகவும்கூட. மதம், மனிதம், சமூகம் குறித்து ஹியூகோ முன்வைக்கும் கருத்துகள் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கிய உலகம் லே மிஸரபிளை ஒதுக்கியதற்கு முக்கியக் காரணம் விக்டர் ஹியூகோவின் புரட்சிகர சிந்தனைகள். ஃபிரெஞ்சுப் புரட்சியை நான் ஆதரிக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் திமிறி எழுவது சகஜமானது; இயற்கையானதும்கூட. கோபுரங்கள் மண்மேடுகளாக மாறும். மக்களை மதிக்காத அரசாங்கங்கள் கவிழும்; மண்ணைக் கவ்வும்.

ஒரு நாவலில் என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது என்று தோள்பட்டையை கன்னத்தால் இடித்து லே மிஸரபிளைத் தூக்கிப்போட்டார்கள் ஃபிரெஞ்சு விமரிசகர்கள். கொண்டா கொண்டா என்று இரு கரங்களால் அதை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டது காலம். இன்று லே மிஸரபிள் ஒரு க்ளாஸிக். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் மொழி பெயர்த்திருக்கிறார்கள். பாகம் பாகமாக, பக்கம் பக்கமாகத் தழுவியிருக்கிறார்கள். ஏழை படும் பாடு என்னும் பெயரில் சுத்தானந்த பாரதியார் தமிழ்படுத்தியிருக்கிறார்.

ஹமாஸுக்குப் பேசத் தெரியாது!

ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றால் இஸ்ரேல்? ஹமாஸ் செய்வது அநியாயம் என்றால் இஸ்ரேல் செய்வது? ஆயிரம் சொன்னாலும் துப்பாக்கி தூக்கிய இயக்கம்தானே என்று கடுகடுத்துக்கொண்டிருந்தவர்கள்கூட ஹமாஸை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இஸ்ரேல் நடத்திய தொடர் குண்டு வீச்சுகள், ஹமாஸை ஒரு ஹீரோவாக உருமாற்றி இருக்கிறது. தீவிரவாத இயக்கம் என்னும் பெயர் மெல்ல மெல்ல அழிந்து, ஒரு பேராளி குழுவாக, அரசியல் நிறுவனமாக ஹமாஸ் எழுச்சி பெற்றிருக்கிறது. இது நல்லதா தீயதா என்பதை ஆராய்வதைக்காட்டிலும் இஸ்ரேலின் அராஜகத்தால் ஏற்பட்ட இந்த தவிர்க்கமுடியாத விளைவை ஏற்றுக்கொள்வது முக்கியமானது.

பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ், போதுமான அளவுக்குச் செயல்படாமல் இருப்பதும் இந்தப் புதிய மாற்றத்துக்குக் காரணம். இருபத்து இரண்டு தினங்கள், நிறுத்தாமல் காஸாவைத் தாக்கி சீரழித்திருக்கிறது இஸ்ரேல் படை. சிறு குழந்தைகளின் சடலங்கள் புதைக்குழிகளுக்கு கீழே இருந்து கண்டெடுக்கப்படுகின்றன. சரியான இழப்பு எண்ணிக்கை தெரியப்போவதே இல்லை. இன்றைய தினம் வரை, போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. சிறு சத்தம் கேட்டாலும் பெரியவர்களும் குழந்தைகளும் ஓடிச்சென்று பதுங்குக்குழிக்குள் மறைந்துகொள்கிறார்கள் . போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுவிட்டாலும், பீதியும் ரணமும் வலியும் ஆறவில்லை.

ஏன் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை? உதடுகள் துடிக்க கேள்வி எழுப்புகிறார்கள் பாலஸ்தீன மக்கள். குளித்து நாள்கள் பல ஆகிவிட்டன. குடிக்கவே போதுமான நீர் இல்லை. காலி கோகோ கோலா பாட்டில்களை ஒரு கூடையில் நிரப்பிக்கொண்டு சிறுவர்கள் பல மைல் தொலைவு நடந்துசெல்கிறார்கள். அரசாங்கமும் எங்களைப் போலவே இடிந்து உட்கார்ந்திருப்பது வேதனையளிக்கிறது. இஸ்ரேலைத் திருப்பித் தாக்கவும் இல்லை. எங்களை மீட்டெடுக்கவும் இல்லை.

இஸ்ரேல் போன்ற வலிமையான ஒரு தேசத்தை திருப்பித் தாக்கும் திராணி உண்டா என்றெல்லாம் யோசிக்கவில்லை ஹமாஸ். தோதான சமயங்களில், இஸ்ரேலுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் அரசாங்கமா, ஃப்பூ என்ற ஊதித்தள்ளும் இஸ்ரேல்கூட, ஹமாஸ் என்றால் சற்றே பின்வாங்குகிறது. இஸ்ரேலின் ஆயுத பலத்தையும் ஆள்பலத்தையும் ஹமாஸோடு எந்த வகையிலும் ஒப்பிடமுடியாது என்றாலும், ஹமாஸின் கெரில்லாத் தாக்குதல் போர்முறைகள் மீது இஸ்ரேலுக்கு அச்சமுண்டு. வான் படைத் தாக்குதலை முன்பே ஆரம்பித்துவிட்ட இஸ்ரேல், தரைப்படைத் தாக்குதலை இறுதிகட்டத்தில்தான் நிகழ்த்தியது. அதுவும் தயக்கத்துடன்தான். காரணம், ஹமாஸ்.

ஹமாஸ் ஒரு ஹீரோவாக உதயமாவது இந்த இடத்தில்தான். இஸ்ரேல் மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று சர்வதேச அளவில் ஹமாஸ் ஒரு சவாலாக மாறியுள்ளது. பாலஸ்தீன மக்களின் நிஜமான பிரதிநிதி முகமது அப்பாஸின் அரசாங்கம் அல்ல, ஹமாஸ்தான் என்று பலரும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். முகமது அப்பாஸ் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் காஸா பகுதி மக்கள் ஹமாஸை திடமாக நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸால் வெற்றிபெற முடியவில்லை என்பது உண்மை. ஆனால், முன்பை காட்டிலும் கூடுதலான மக்கள் ஆதரவை ஹமாஸ் திரட்டியிருக்கிறது. இந்த அரசியல் வெற்றியை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டது ஹமாஸ். காஸா மக்களே, எமக்குப் பின்னால் அணிதிரளுங்கள். எத்தனை சங்கடங்கள் வந்தாலும் கலங்காதீர்கள். நாங்கள் உடனிருக்கிறோம். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை நிச்சயம் முன்னெடுத்துச் செல்வோம். உங்கள் ஆதரவுடன்.

ஹமாஸ் தொடங்கப்பட்டது 1987ம் ஆண்டில். ஹமாஸ் தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது இன்னொரு அமைப்பு. ஜமாத் அல் இக்வான் அல்முஸ்லிமின் என்பது அதன் பெயர். இஸ்லாமிய சகோதரத்துவம் என்று அர்த்தம். சமூகப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். வீதிகள் அமைத்திருக்கிறார்கள். மசூதிகள் கட்டியிருக்கிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரமாகப் பரப்பியிருக்கிறார்கள். ஓர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைக்கூட உருவாக்கியிருக்கிறார்கள். முக்கிய நம்பிக்கைகள் இவை. அல்லாஹ்வையும் இறை நம்பிக்கையையும் போற்றுவோம். இஸ்லாமிய நெறியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். இறைவனுக்காக உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருப்போம்.

தொடங்கப்பட்டது எகிப்தில் என்றாலும் மெல்ல மெல்ல சிரியா, ஜோர்டன் என்று ஆரம்பித்து மத்திய கிழக்கின் பல பகுதிகளிலும் இவர்கள் பரவ ஆரம்பித்தார்கள். பாலஸ்தீனக் கிளை 1946ல் ஜெருசலேத்தில் உருவானது. எழுபதுகளில், ஷேக் முகமது யாசின் என்பவர் தலைமையில் இந்த இயக்கம் காஸாவில் செயல்பட்டு வந்தது. இதுவே பின்னர் ஹமாஸாக உருமாறியது.

இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னைனை முதன் முறையாக இஸ்லாமிய நோக்கத்தில் அணுகியது ஹமாஸ். பாலஸ்தீனத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை, இஸ்ரேலில் இருக்கும் யூதர்கள் ஆக்கிரமிக்க துடிக்கிறார்கள். அதை இறைவனின் பெயரால் தடுத்து நிறுத்தவேண்டும். இஸ்லாம் தழைக்கவேண்டுமானால், இஸ்லாமியர்கள் உயிர்த்திருக்கவேண்டுமானால், இஸ்ரேல் மீது புனிதப் போர் தொடுக்கவேண்டும். இஸ்ரேலை எதிரி தேசமாகக் கருதவேண்டும். யூதர்களை, எதிரிகளாக.

ஒரு பக்கம், சமூக சேவைகள். இன்னொரு பக்கம் மதச் சேவைகள். மற்றொரு பக்கம், இஸ்ரேலை எதிர்ப்பதற்கான தயாரிப்புகள். மூன்றையும் சமஅளவில் முன்னெடுத்துச்சென்றது ஹமாஸ். எதிலும் குறை வைக்கக்கூடாது என்பதில் ஹமாஸ் தெளிவாக இருந்தது. தனிமனித ஒழுக்கம் முக்கியம். இஸ்லாமிய வாழ்க்கை நெறி முக்கியம். சாலைகள், பள்ளிக்கூடங்கள் முக்கியம். எதிரிகளை அழிப்பதும் முக்கியம்.

பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த யாசிர் அராஃபத்தின் பி.எல்.ஓ. (பாலஸ்தீன விடுதலை இயக்கம்) ஹமாஸிடம் இருந்து இரு முக்கிய விஷயங்களில் வேறுபடுகிறது. பி.எல்.ஓ. இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதில்லை. தேவைப்பட்டால் இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஹமாஸுக்கு பேசப் பிடிக்காது. எதிரிகளுடன் என்ன பேசுவது? பேசி தீர்க்கக்கூடிய பிரச்னையா இது? எதிரிகளை ஒழிப்போம். புனித இஸ்லாமிய பாலஸ்தீனை உருவாக்குவோம்.

தொடக்கக் காலத்தில், யூதர்கள் மீது நேரடியாகவே தாக்குதல்கள் தொடுத்திருக்கிறது ஹமாஸ். அரசாங்கம் இழைக்கும் குற்றங்களுக்கு பொது மக்களைத் தண்டிக்கலாமா என்று கேட்கப்பட்டபோது ஹமாஸ் சீறிப் பாய்ந்தது. இவர்கள் ஏன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்? ஓர் அரசாங்கம் தவறு செய்யும்போது தட்டிக்கேட்கவேண்டாமா? எதிர்த்து போராட வேண்டாமா? தவிரவும், பொதுமக்கள் ராணுவத்தினர் என்று தனித்தனி பிரிவுகள் இல்லை அங்கே. சுழற்சி முறையில் சிவிலியன்கள் ராணுவத்தில் பணிபுரிந்தாகவேண்டும். ஆகவே, யூதர்கள் அனைவரும் நமக்கு எதிரிகளே.

இஸ்ரேலின் நிரந்தர தலைவலியாக ஹமாஸ் மாறிப்போனது. 2000ம் ஆண்டு முதல் 2003 வரை ஹமாஸ் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களைக் கண்டு அலறியது இஸ்ரேல். ஹமாஸை அழிக்க என்னென்ன செய்யமுடியுமோ அனைத்தையும் செய்து பார்த்தது இஸ்ரேல். அமெரிக்காவின் உதவியுடன். அழிவதற்கு மாறாக கூடுதல் வளர்ச்சி பெற்றது ஹமாஸ். அட பரவாயில்லையே நமக்காக போராடுவதற்கு ஓர் இயக்கமாக இருக்கிறதே என்று மக்களும் ஹமாஸின் பின்னால் அணிதிரள ஆரம்பித்தார்கள்.

ஹமாஸ் தன் போராட்ட வழிமுறைகளை மாற்றிக்கொண்டது. தேவைப்படும்போது மட்டுமே ஆயுதம். பிற சமயங்களில், அரசியல் பணிகள். ஆளுங்கட்சியின் (பி.எல்.ஓ.வின் ஃபதா கட்சி) ஊழல்களை அம்பலப்படுத்தி பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானது ஹமாஸ். ஜனவரி 2006ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹமாஸ் அபரிமிதமான வெற்றியை அள்ளிக்கொண்டபோது, உலகம்தான் வாய்பிளந்து நின்றதே தவிர பாலஸ்தீனர்கள் வியக்கவில்லை. சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொறுப்பேற்ற ஹமாஸ் தலைவர்கள் ஜூன் 2007ல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். மக்களே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட பிறகு எங்களை யாராலும் அகற்ற முடியாது என்று திமிறி எழுந்த ஹமாஸ் வலுக்கட்டாயமாக காஸாவைக் கைப்பற்றிக்கொண்டது.

கிழக்குக் கரை முகமது அப்பாஸின் (ஃபதா கட்சி) கட்டுப்பாட்டில் இருக்கிறது. காஸா ஹமாஸின் கட்டுப்பாட்டில். இரு வேறு அரசாங்கங்கள் அங்கே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டும் எதிரெதிரானவை. ஒன்று மற்றொன்றை ஏற்றுக்கொள்வதில்லை. தேவைக்கேற்ப தன் போர்முறைகளையும் கருவிகளையும் மாற்றிக்கொள்ளத் தெரிந்ததால் ஃபதாவைவிட ஹமாஸுக்கு அதிக ஆதரவும் வரவேற்பும் கிடைத்துவருகிறது.

தற்போது ஹமாஸ் தீவிரமாகப் பயன்படுத்தி வரும் ஆயுதம், அரசியல் பிரசாரம். சர்வதேச கவனத்தை காஸாவை நோக்கி திருப்பியாகவேண்டும். பாலஸ்தீன் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டவேண்டும். இஸ்ரேலின் மேலாதிக்கத்தை முறியடிக்கவேண்டும். பாலஸ்தீனர்களுக்கு சுதந்தர தேசத்தைப் பெற்றுத்தரவேண்டும். அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறது ஹமாஸ்.

(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)

February 10, 2009

ஈழக்குறிப்புகள் : ஈழமும் இந்தியாவும்

1) ஒரு வேளை ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால், இந்தியா ஈழப்போராட்டத்தை ஆதரித்திருக்குமா?

ஆதரித்திருக்காது. ஈழத்தமிழர்கள் நலன் மீது இந்தியாவுக்குத் துளி அக்கறையும் கிடையாது. அக்கறைகொள்வதால் லாபம் எதுவும் இல்லை என்பதுதான் காரணம். மாறாக, இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்பது பல வழிகளில் லாபம் அளிக்கக்கூடியது. இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்வதை நியாயப்படுத்த ராஜீவ் காந்தி இன்று காங்கிராஸால் பயன்படுத்தப்படுகிறார்.

2) பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஈழம் பற்றிய இந்தியாவின் பார்வை மாறுமா?

ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் கொள்கைக்கும் பா.ஜ.கவின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தவிரவும், பா.ஜ.க. அகண்ட பாரதக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் கட்சி. ஆளும் சிங்களக் கட்சியின் கொள்கை, அகண்ட இலங்கை. அந்த வகையில், நரேந்திர மோடிக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் நிறைய ஒற்றுமைகள். சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து இவர்கள் கவலைப்படமாட்டார்கள். அவர்களை அழித்தொழிக்கவே விரும்புவார்கள். பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவேன் என்று முழங்கும் பா.ஜ.க.வுக்கும் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களர்களைக் குடியேற்றும் இலங்கை அரசுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்ன?

3) இந்தியா இதற்கு முன்னால் பலமுறை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்திருக்கிறதே? இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் ஈழப்போராட்டத்தை அங்கீகரித்து ஆதரித்திருக்கிறார்களே? புலிகளுக்கு விசேஷ பயிற்சிகளையும் அளித்திருக்கிறார்களே? தமிழர்களின் நலன்மீது அக்கறை இல்லாமலா இவை சாத்தியமாயிற்று?

இதற்கான விடையை மன்மோகன் சிங் அரசே பல முறை தெளிவாகச் சொல்லிவிட்டது. இலங்கைக்கு இன்று நாங்கள் ஆயுதங்கள் வழங்கவில்லை என்றால் சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையை கைக்குள் போட்டுக்கொண்டுவிடும். அதற்காகவாவது நாம் இலங்கை அரசுடன் ஒத்துழைத்துதான் தீரவேண்டும். இதன் பொருள், இலங்கை மீது அதிகாரம் செலுத்த இந்தியா விரும்புகிறது என்பதுதான். உலகத்தின் பிக் பிரதராக அமெரிக்கா எப்படித் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறதோ, அப்படியே இந்தியாவும் தன்னை ஆசியாவின் பிக் பிரதாக முன்னிறுத்திக்கொள்ள விரும்புகிறது. வர்த்தக ரீதியிலும் (இலங்கை மார்க்கெட்டை முழுவதுமாகப் பிடித்துக்கொள்ளலாம்), ராணுவ ரீதியிலும் (படைத்தளங்கள் அமைத்துக்கொள்ளலாம்) இலங்கை முக்கியத்துவம் கொண்ட பிரதேசம். இன்னொரு நாட்டுக்கு இலங்கையை விட்டுக்கொடுக்கமுடியாது. குறிப்பாக, எதிரி நாடுகளுக்கு.

எப்படி கிடைக்கும் இலங்கை? நட்பாக இருப்பதன் மூலம். அல்லது, மிரட்டுவதன் மூலம். இரண்டையும் இந்தியா செய்து பார்த்திருக்கிறது. புலிகளையும் பிற இயக்கங்களையும் வளர்த்துவிட்டு, அவர்கள் மூலம் இலங்கையை மிரட்டி இருக்கிறது. அதனால் புலிகள் பலனடைந்தனர் என்றாலும் இந்தியாவின் நோக்கம் அதுவல்ல. கொஞ்சியும் இருக்கிறது இந்தியா. இந்தா கச்சத்தீவு என்று அன்று அள்ளிக்கொடுத்ததன் மூலம். தமிழர்கள் மீது தாக்குதல் தொடுங்கள், கண்டுகொள்ளமாட்டோம் என்னும் நிலைப்பாட்டை இன்று எடுத்துள்ளதன் மூலம். வழிமுறைகள் மாறலாம். நோக்கம் ஒன்றேதான்.

ஒருவேளை, விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசாங்கத்தை முற்றிலுமாகக் கைப்பற்றி ஆட்சியமைத்துவிட்டால், இந்தியா உடனே புலிகள் மீதான தடையை விலக்கி, புலிகளை ஆதரிக்க ஆரம்பித்துவிடும். பிரபாகரனா ராஜபக்ஷேவா என்பதல்ல கேள்வி. அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

4) ஈழம் உருவாவதை தி.மு.க. ஆதரிக்குமா?

ஈழக்கோரிக்கையை ஆதரிக்கவேண்டுமானால் மத்திய அரசாங்கத்தை எதிர்த்தாகவேண்டும். தி.மு.க.வுக்கு இதில் ஆர்வம் இல்லை என்பது வெளிப்படை. யாராவது பிரிவினை கோஷம் போட்டால் ஒழித்துவிடுவோம் என்று இந்தியா முன்னர் மிரட்டியபோது, அவசரஅவசரமாகப் பெரியாரின் தனி திராவிட நாடு கொள்கையை கைகழுவியது தி.மு.க. தனிதேசக் கொள்கையை தி.மு.க. என்று்ம் ஆதரிக்காது.

(தொடரும்)

ஈழக்குறிப்புகள் : இலங்கை அரசும் சிங்களர்களும்

இலங்கைக்கு வழங்கிக்கொண்டிருந்த வானொலி சேவையை பிபிசி துண்டித்துக்கொண்டுவிட்டது. இலங்கை மீது பிபிசி வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை. சில செய்திகளை இலங்கை மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும்போது, இடையிடையே இசையை ஓடவிட்டு கெடுக்கிறார்கள். சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதே கிடையாது. ஆங்கிலம், சிங்களம், தமிழ் மூன்று மொழி நிகழ்ச்சிகளுக்கும் இதே நிலைமைதான். இலங்கை அரசுடன் இதுவரை பலமுறை பேசிப்பார்த்துவிட்டோம். பதிலில்லை. ஆகவே, சேவையைத் துண்டித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

பிபிசிக்கே இந்த நிலைமை என்றால் உள்நாட்டு ஊடகவியலாளர்களின் கதி என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம். போர் காலங்களில் அரசாங்கங்கள் செய்திகளைத் தணிக்கை செய்வது வாடிக்கைதான் என்றாலும் இலங்கை அரசின் ஊடக அடக்குமுறை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மிகக் கடுமையான தணிக்கை. கொலை மிரட்டல். தாக்குதல். தாதாக்களே தேவலை.

ஊடகங்களுக்கு எதிராக மூன்று வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது இலங்கை அரசாங்கம். எதிரான செய்திகள் அனைத்தையும் அமுக்குவது முதல் வகை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான செய்திகள் எதிலும் வந்துவிடாதபடி கவனமாக இருப்பார்கள். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளை மட்டுமல்ல இந்தியப் பத்திரிகைகளையும் தன் வயப்படுத்த இலங்கை அரசு முனைப்புடன் முயன்றுவருகிறது.

செய்திகளைத் திரித்து வெளியிடுவது இரண்டாவது வகை. புலிகள் தரப்பு இழப்புகளைப் பூதாகரப்படுத்தியும் இலங்கை ராணுவ இழப்பை சிறிதாக்கியும் வெளியிடப்படும் செய்திகள் இந்த வகைக்குள் அடங்கும். மூன்றாவது, லசந்த விக்கிரமதுங்கவுக்கு நேர்ந்த கதி. மிரட்டியும் கேட்கவில்லையா? நீக்கிவிடு.

கடந்த சில வாரங்களாக, கொழும்பிவிலும் பிற பகுதிகளில் உள்ள சிங்களர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். தமிழர்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல. இலங்கை அரசாங்கத்தின் போக்கு அதிருப்தி அளிப்பதால். புலிகளுடனான போரில் கொல்லப்பட்ட சிங்களர்கள் பற்றிய சரியான புள்ளிவிவரங்களை இலங்கை அரசு அளிக்க மறுத்துவருகிறது. என் கணவர் எங்கே, என் சகோதரர் எங்கே, என் மகன் எங்கே என்று கேட்டு ராணுவத் தலைமையகத்தை சிங்கள மக்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சொல்கிறோம், சொல்கிறோம் என்று தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது அரசு. இன்று வரை சரியான தகல்கள் வெளிவரவில்லை.

இலங்கையின் பயங்கரவாத ஆட்சிமுறையால் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் மாத்திரமல்ல. சிங்களர்களும்தான். அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள். அமெரிக்காவின் மேலாதிக்க வெறி இராக், ஆப்கனிஸ்தான் போன்ற அந்நிய தேசங்களை மட்டுமல்ல அமெரிக்காவையும் சேர்த்தே குட்டிச்சுவராக மாற்றியிருக்கிறது. எனவேதான், அமெரிக்காவுக்கு எதிராகச் சென்ற ஆண்டு முழுவதும் அமெரிக்கர்கள் முழுவீச்சில் போராடினார்கள். சிங்களர்கள் செய்யவேண்டியதும் இதுவேதான். இலங்கை அரசின் செயல்பாட்டை சிங்களர்கள் அம்பலப்படுத்தவேண்டும். கண்டிக்கவேண்டும். எதிர்த்துப் போராடவேண்டும்.

(தொடரும்)

ஆதாரம்

BBC suspends FM radio broadcasts for Sri Lanka
Reporters Without Borders வெளியிட்டுள்ள அறிக்கை
Sri Lanka Journalism 'under threat' பிபிசி கட்டுரை

February 2, 2009

ஈழக்குறிப்புகள் : பத்திரிகை தர்மம் -- என். ராமும் லசந்த விக்கிரமதுங்கவும்

தி சண்டே லீடரில் வெளிவந்த லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கத்தின் தமிழ் வடிவம் இங்கே. ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று, எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசிந்தவால் முன்கூட்டியே ஊகிக்கமுடியவில்லை. மற்றபடி, தன் மரணத்தை அவர் எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று தெளிவாக எழுதியும் வைத்திருந்தார்.

ராஜபக்ஷேவை மகிந்த என்று அழைக்கும் வெகு சிலரில் ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. ராஜபக்ஷேவின் ஆட்சியை தீவிரமாக விமரிசனம் செய்து அவர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களுள் முதன்மையானவரும் அவரேதான். பெரும்பான்மையினரின் பார்வையை பதிவு செய்கிறோம் என்னும் பெயரில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைலைகளை லசிந்த விக்கிரமதுங்க நியாயப்படுத்தவில்லை. நம் நண்பர்தானே என்பதற்காக கண்டும் காணாமலும் இருந்துவிடவில்லை. புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான போரில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜபக்ஷேவை கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார். மிரட்டல்கள், அடிதடிகள், தாக்குதல்கள் எதுவும் அவரைத் தடுத்துநிறுத்திவிடவில்லை. எனவே கொல்லப்பட்டார்.

லசந்த விக்கிரமதுங்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். ராஜபக்ஷேவை விமரிசனம் செய்ததைப் போலவே புலிகளையும் அவர் விமரிசனம் செய்திருக்கிறார். நான் எடிட்டர், நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்று தன்னுடன் பணிபுரிபவர்களை லசிந்த என்றும் அடக்கி ஆட்கொண்டது கிடையாது. பத்திரிகையாளர்கள் உண்மையை பயமின்றி எடுத்துக்கூறவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. தி சண்டே லீடர் செய்தியாளர்களுக்கு அளவற்ற சுதந்தரத்தை அவர் அளித்திருந்தார்.

லசிந்த விக்கிரமதுங்கவைப் போலவே என். ராமும் ஒரு எடிட்டர். இந்தியாவின் தேசியப் பத்திரிகையாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொள்ளும் தி ஹிந்துவின் எடிட்டர் இன் சீஃப். என். ராமும் புலிகள் எதிர்ப்பாளர். ஆனால், என்றாவது லசிந்தவைப் போல் நாணயத்தின் இரு பக்கங்களை அவர் பார்த்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் இதுவரை பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து ஒரு சிறிய பெட்டிச் செய்தியையாவது தி ஹிந்துவில் யாரேனும் கண்டதுண்டா?

இது தேசிய அவமானம் என்பதாக மங்களுர் பப் விவகாரம் பற்றி நீட்டியும் முழக்கியும் தலையங்கம் எழுதிய தி ஹிந்து இலங்கை ராணுவத்துக்கு இந்தியா அளிக்கும் தார்மீக ஆதவை என்றாவது சுட்டிக்காட்டி சாடியிருக்கிறதா? இலங்கை ராணுவம் போரில் சிறு முன்னேற்றம் கண்டாலும் ஆஹா வீழ்ந்தது முல்லைத்தீவு, அடுத்து கிளிநொச்சிதான் என்று கிளர்ச்சியுடன் எழுதிக்கொண்டு போகிறது தி ஹிந்து. புலிகள் இத்தோடு ஒழிந்தார்கள், இனி அவ்வளவுதான் என்று வாரத்துக்கு இருமுறையாவது செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

லெட்டர்ஸ் டு தி எடிட்டர் பகுதியிலும் கடுமையான தணிக்கை. இருபது கடிதங்கள் வெளியானால் அதில் பத்தொன்பது தி ஹிந்துவை ஆதரித்து வந்திருக்கும். ஸார், மிகவும் சரியாகச் சொன்னீர்கள். புலிகள் ஒழிக்கப்படவேண்டியவர்கள். புலிகள் ஆயுதம் ஏந்துவதால்தான் இத்தனை பிரச்னையும். ராஜபக்ஷே அப்பழுக்கற்ற தியாகி. அவர் அளிக்கும் வாய்ப்புகளை புலிகள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகள் புலிகளிடம் பேசி, ஆயுதங்களை துறக்கச் செய்யவேண்டும். மற்றபடி, தனி ஈழம் அமையும் என்று சொல்வதற்கில்லை.

சிறிதும் சளைக்காமல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ராஜபக்ஷேவிடம் பேசி ஏதாவது மேட்டர் வாங்கி முதல் பக்கத்தில் போட்டுவிடுகிறார் என். ராம். 'தமிழர்களை நான் அவசியம் பாதுகாப்பேன். இந்தியா இனி அவர்களைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. உங்கள் எல்லோரையும்விட தமிழர்கள் மீது எனக்கு அளவுகடந்த பாசமும் நேசமும் உண்டு. எங்கள் எதிரி விடுதலைப் புலிகள். அவர்கள் மீது மட்டும்தான் நாங்கள் யுத்தம் தொடுத்துக்கொண்டிருக்கிறோம். இடையில் எப்போதாவது, பை மிஸ்டேக் சில சிவிலியன்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.'

என். ராமின் பத்திரிகை தர்மத்துக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகை தர்மத்துக்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தவே சொல்லியிருக்கிறார். 'உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்துக்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனச்சாட்சி.' லசிந்த தன் மனச்சாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவி்ல்லை.

(தொடரும்)

February 1, 2009

ஈழக்குறிப்புகள் : முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்கலாமா?

சிலர் ப்ரெயின் வாஷ் என்றார்கள். மொத்தமாக முன்கூட்டியே காசு வாங்கியிருப்பார் என்றார்கள் வேறு சிலர். இன்னும் சிலருக்கு சந்தேகம். இத்தனை சுத்தமாக முத்துக்குமாருக்குத் தமிழ் எழுத வராது, நிச்சயம் யாரோ அந்த உரையை தயார் செய்து கொடுத்திருக்கவேண்டும். வேண்டப்பட்டவர்களை ஆதரித்து, வேண்டாதவர்களைச் சாடும் வண்ணம் யாரோ இதைத் தயாரித்திருக்கவேண்டும். சிலருக்கு அக்கறை.கொளுத்திக்கொண்ட இடம் தவறு, அமெரிக்கத் தூதரகத்தில் இதை நிகழ்த்தியிருந்தால் இந்நேரம் சர்வதேச பரபரப்பு கிடைத்திருக்கும். ஒன்றுக்கும் உதவாத சாஸ்திரி பவன் முன்பாகவா தன் உயிரை எரித்துக்கொண்டிருக்கவேண்டும்?

மற்றொரு பக்கம், வீர வணக்கங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. நேற்று மாலை மக்கள் தொலைக்காட்சியில் முத்துக்குமாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச்சென்றதை காண்பித்தார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். சிங்கள அரசு ஒழிக! இந்திய அரசு ஒழிக! பிரபாகரன், முத்துக்குமார் இருவரும் இணைந்திருக்கும் படங்களை பலர் கையில் வைத்திருந்தனர். திரும்பும் பக்கமெல்லாம் புலிக்கொடி.

கனடா, நெதர்லாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் தமிழர்கள் வீதிகளில் இறங்கி வந்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கிறார்கள். முத்துக்குமார் எதிர்பார்த்ததைப் போலவே அவர் உடல் ஒரு குறியீடாக மாறியது. இந்தக் குறியீட்டை நம் அரசியல் போராட்டத்துக்குப் பயன்படுத்துவோம் என்று ம.க.இ.க அமைப்பினரும் வேறு சிலரும் கேட்டுக்கொண்டபோது அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. நேற்றே உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.

ஏன்? ஊர்வலம் தொடர்ந்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விடும். உடல் எங்கெல்லாம் கொண்டுசெல்லப்படுகிறதோ அங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிடுவார்கள். போராட்டம் தீவிரமடையும். ஏற்கெனவே சென்னையில் மாணவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகம் முழுவதும் இது தொடர்ந்தால், நிலைமை கைமீறிப்போய்விடும். இந்தியாவில் வேறு எந்தப் பகுதியிலும் சிறு சலனமும் இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம் ஏன் என்று மத்திய அரசு கோபித்துக்கொள்ளக்கூடும். எனவேதான், கருணாநிதி இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். முத்துக்குமாரின் மரணத்தை யாரும் அரசியலாக்கவேண்டாம்.

பிறகு எதை அரசியலாக்குவது? ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறிமாறி தொடுக்கும் அரசியல் யுத்தங்களையா? என்னை சொல்கிறாயே அங்கே மட்டும் என்ன வாழ்ந்ததாம் என்கிற ரீதியில் வெளிவரும் அறிக்கைகளையா?

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்னும் பெயரில் இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாள் அவகாசம் முடிந்து, கூடுதல் தீவிரத்துடன் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. இந்த ஆண்டு தொடங்கி இதுவரை கிட்டத்தட்ட ஐநூறு தமிழர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். புலிகள் அல்ல பொதுமக்கள் என்று தெரிந்தேதான் கொன்றுகொண்டிருக்கிறார்கள். சந்தேகமேயில்லாமல் இது இனஒழிப்பு.

ஒன்றுமே செய்யாமல் சும்மா நேரத்தை கடத்தும் அரசாங்கத்தைக் கண்டு கொதித்துப்போய்தான் முத்துக்குமார் தீக்குளித்திருக்கிறார். அரசியல் போராட்டம் ஒன்றை என் மரணம் முன்னெடுத்துச்செல்லவேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டு விரிவான மரண சாசனத்தையும் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார். இதை அரசியலாக்காமல் வேறு எதை அரசியலாக்கவேண்டும்? இதற்காக அல்லாமல் வேறு எதற்காகப் போராடவேண்டும்? இது பற்றி அல்லாமல் வேறு எதைப் பற்றி பேசவும் விவாதிக்கவும் முடியும்?

முத்துக்குமாரின் மரணம் பல விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழக அரசும். இலங்கை ராணுவம் தொடுக்கும் போரை இந்தியா ஆதரிக்கிறது. ஆகவே, தமிழகமும். மத்திய அரசாங்கத்தை எதிர்த்து தன்னால் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடமுடியாது என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார் கருணாநிதி.

தமிழகம் எங்களுக்குக் குரல் கொடுக்கும் என்று இலங்கைத் தமிழர்கள் இனி நம்பவேண்டாம். எதிர்பார்க்கவும் வேண்டாம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் இந்த விஷயத்தில் கைகோர்த்துக்கொண்டுவிட்டன.

மங்களூர் கிளப் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களோடு தங்களை உடனடியாக இணைத்துக்கொள்கிற நடுத்தர, மேல்தட்டு மக்கள் இலங்கைத் தமிழர்களுக்காக அந்த அளவுக்குக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முத்துக்குமாரின் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். பெரும்பாலானவர்கள் அடித்தட்டு மக்கள்.

(தொடரும்)